Skip to main content

அ.தி.மு.க. கவுன்சிலர்களின் கோவிலான அறிவாலயம்!- அமுக்கப்பட்ட எதிரணி கோழிக்குஞ்சுகள்!    

Published on 26/02/2022 | Edited on 26/02/2022

 

virudhunagar district admk councilors

 

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, வெற்றிபெற்ற மாற்று கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர்கள் பலரும், கழுகு தூக்கிச் செல்லும் கோழிக்குஞ்சுகளாகிவிட்டனர். சிவகாசி மாநகராட்சி அ.தி.மு.க. கவுன்சிலர்கள் விஷயத்திலும்  ‘அது’ நடந்திருப்பதாகப் பேசப்படுகிறது.  

 

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியின் முதல் மேயர், முதல் துணை மேயர் கனவானது, பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்ற ஆளும்கட்சியான தி.மு.க.வில் பலரையும் ஆட்டுவித்துவரும் நிலையில், அ.தி.மு.க. கவுன்சிலர்களில் ஒருவருக்கும் துணை மேயராகிவிடலாம் என்ற பேராசை துளிர்த்துள்ளது. ‘ஒத்த கவுன்சிலரா போனால் துணை மேயராகிவிட முடியாது..’ என்ற அரசியல் கணக்கை உணர்ந்த அந்த அதிமுக பெண் கவுன்சிலரின் கணவர், இரட்டை இலையில் வெற்றிபெற்ற 11 கவுன்சிலர்களையும் கூண்டோடு கொண்டுபோய் தி.மு.க.வில் சேர்த்துவிட்டால், பலன் கிடைக்காமலா போகும் என்று பேசி முடிவெடுத்து,  ‘நீ வா.. நீ வா..’ எனக் கூப்பிட, ஆளும்கட்சியும் விருதுநகர் மாவட்டத்தில் ராஜேந்திரபாலாஜி மாவட்டச் செயலாளராக இருக்கும் அ.தி.மு.க.வை ஒன்றும் இல்லாமல் செய்துவிடவேண்டும் என்ற நோக்கத்துடன், வெற்றிபெற்ற எந்தக் கட்சி கவுன்சிலராக இருந்தாலும், ஆளுக்கேற்றவாறு ரூபாய் 10 லட்சத்திலிருந்து ரூபாய் 25 லட்சம்வரை தலைக்கு விலைபேச, ‘மாநகராட்சியில் ஆளும் கட்சி கவுன்சிலராக இருந்தால்தானே தேர்தலில் வாக்காளர்களுக்குச் செலவழித்ததை சம்பாதிக்கமுடியும்? அதற்கு முன்பே, இத்தனை லட்சங்கள் தேடிவரும்போது வாங்கிக்கொள்வதுதானே புத்திசாலித்தனம்..’ என ஒன்றுகூடி ஆலோசித்து,  தி.மு.க.வை நோக்கி பறந்துவிட்டதாக அடித்துச் சொல்கிறார்கள், அதிமுக தரப்பில்.

 

ஆனாலும், 11 அ.தி.மு.க. கவுன்சிலர்களில் இருவர், ‘நேற்றுவரையிலும் இரட்டை இலைக்கு வாக்கு கேட்டோம்; தி.மு.க. ஆட்சியை கடுமையாகத் திட்டினோம். அ.தி.மு.க. அடையாளம்தானே நம்மைக் கவுன்சிலராக்கியது? ஆளும்கட்சியின் பணச்சூதாட்டத்தில் தெரிந்தே சிக்கிக்கொண்டு, ஐந்து வருடங்களில் மேலும் மேலும் சம்பாதிப்பதற்காக, தி.மு.க.வுக்கு தாவினால் ஓட்டுபோட்ட மக்கள் என்ன நினைப்பார்கள்? எம்.ஜி.ஆர்.- ஜெயலலிதா ஆன்மா நம்மை மன்னிக்காது..’ என்று மனசாட்சிக்குப் பயந்து,  தாவும் 9 கவுன்சிலர்களோடு இணைந்து பயணிக்காதது, உறுதிப்படுத்தப்பட்ட தகவலாக இருக்கிறது.   

 

ஆக, மொத்தம் உள்ள 48 வார்டுகளில் தி.மு.க. 24, காங்கிரஸ் 6, வி.சி.க. 1, ம.தி.மு.க. 1 எனப் பெரும்பான்மை பலமிருந்தும், சுயேச்சைகளை வளைத்துவிட்ட நிலையில், அ.தி.மு.க.விலிருந்தும் 9 கவுன்சிலர்களை தி.மு.க.வில் இணைத்து, அசுரபலமுள்ள கட்சியாக சிவகாசி மாநகராட்சியின் மேயர், துணை மேயர் இருக்கைகளில் கம்பீரமாக அமரப்போகிறது தி.மு.க. 

 

உள்ளாட்சித் தேர்தலில் செலவழித்து விட்டதைப் பிடிப்பதற்காக, 9 அ.தி.மு.க. கவுன்சிலர்களையும் தன்னோடு எங்கோ அழைத்துச் சென்றுவிட்டார் என அ.தி.மு.க. தரப்பில் சுட்டிக்காட்டப்படும் திருத்தங்கல் முன்னாள் நகர்மன்றத் துணைத்தலைவர் பொன் சக்திவேல் தரப்பிலிருந்து “அப்படியெல்லாம் தி.மு.க.வுக்கு போகவில்லை. எல்லோரும் சேர்ந்து கோவில் கோவிலாகப் போய்க்கொண்டிருக்கிறோம்” என்று மழுப்பலாகப் பதில் வருகிறது.  

 

உள்ளாட்சித் தேர்தலிலும் அதிரடியான ஆட்டமாடி தமிழ்நாட்டு அரசியலில் ஜாம்பவனாகத் திகழ்கிறது தி.மு.க.!
    


 

சார்ந்த செய்திகள்

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.