திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டு அருகே ரெட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா. இவர் பால் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி சத்யா பி.காம் பட்டதாரி. இந்நிலையில் கருப்பையா பால் வியாபாரத்திற்காக இருசக்கர வாகனத்தில் செல்லும்போது ஏற்பட்ட சாலை விபத்தில் படுகாயம் அடைந்தார். மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக மூளைச்சாவு ஏற்பட்டது.
கணவனின் நிலை கண்டு துடித்துப் போன கருப்பையாவின் மனைவி சத்யா அந்தச் சோகமான சூழ்நிலையிலும், திடமான முடிவு ஒன்றினை எடுத்தார். தனது உறவினர்களோடு கலந்து ஆலோசித்துவிட்டு, கருப்பையாவின் உடல் உறுப்புகளைத் தானமாகக் கொடுக்க முன்வந்தார். இதைக் கண்ணீரோடு குறிப்பிடும் சத்யா, எனது கணவர் உடலில் இருந்து இருதயம், கல்லீரல் உள்ளிட்ட ஏழு உறுப்புகளை, உயிர் போகும் தருவாயில் உள்ள ஏழு பேருக்கு அளிக்கப்பட்டு இருப்பதாகவும், இதன் மூலம் தனது கணவர் இந்த உலகில் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் கண்ணீர் மல்க கூறினார்.
கருப்பையாவின் உடல் ஊர் பொது மக்கள் அஞ்சலிக்குப்பின் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. ஏழ்மையில் வசிக்கும் கிராமத்துப் பட்டதாரி பெண்ணான சத்யாவின் கருணை மிக்க இச்செயல், அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடல் தானம், கண் தானம், உடல் உறுப்பு தானம் என அனைத்திற்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ளது.