Skip to main content

தடுப்பூசி சிறப்பு முகாம்... ‘ஒருநாள் ஆர்.டீ.ஓக்கள்’ செய்த அலப்பறை-கடுப்பான பொதுமக்கள்!

Published on 12/09/2021 | Edited on 12/09/2021

 

Vaccine special camp ... ‘One day RDOs’

 

தமிழ்நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெற்றது. இந்த சிறப்பு முகாமில் கலந்துக்கொண்டு அனைவரும் தடுப்பூசி போடவேண்டும், பொதுமக்களுக்கு பெரியளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், தடுப்பூசி போடாதவர்களை போட வைக்க வேண்டும் என அனைத்து துறைகளின் சார்பில் ஒவ்வொரு துறைக்கும் பணிகள் பிரித்து ஒதுக்கப்பட்டது.

 

திருவண்ணாமலை மாவட்டத்தில் 1.5 லட்சம் தடுப்பூசிகள் போட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இதற்காக அனைத்து துறைகளும் களத்தில் இறக்கிவிடப்பட்டன. இதில் வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகளுக்கும் பணிகள் ஒதுக்கப்பட்டது. சிறப்பு முகாம் நடைபெறும் நாளன்று கார், ஆட்டோ, பேருந்து என இலகுரக, கனரக வாகனங்களின் ஓட்டுநர்கள் பலர் தடுப்பூசி போடாமல் உள்ளனர். அவர்கள் தடுப்பூசி போட விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ் கூறியிருந்தார்.

 

Vaccine special camp ... ‘One day RDOs’

 

திருவண்ணாமலை நகரத்துக்குள் வரும் 9 சாலைகளில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தை சார்ந்த அலுவலர்கள் பிரித்து அனுப்பி வாகனங்களை நிறுத்தி ஓட்டுநர்களிடம் தடுப்பூசி போடப்பட்டுவிட்டதா என விசாரிக்க வேண்டும், போடவில்லையெனில் அவர்களை அருகில் உள்ள சிறப்பு முகாமிற்கு அனுப்பி தடுப்பூசி போட வைக்க வேண்டும் எனச் சொல்லி அனுப்பினர். திருவண்ணாமலை டூ அவலூர்பேட்டை சாலையில் உள்ள தனியார் பள்ளியில் அமைக்கப்பட்ட சிறப்பு முகாமிற்கு அருகில் வாகனங்களை நிறுத்தி தடுப்பூசி விழிப்புணர்வுக்கு அனுப்பப்பட்ட அலுவலர் தனக்கு உதவியாக ட்ரைவிங் ஸ்கூல் ஓனர்கள், பணியாளர்களை வரவழைத்துள்ளார். எட்டுக்கும் மேற்பட்ட டிரைவிங் ஸ்கூல் வாகனங்கள் சாலையில் நிறுத்தப்பட்டது. அந்த அலுவலர் காரில் ஜம்மென்று உட்கார்ந்து கொண்டுள்ளார்.

 

டிரைவிங் ஸ்கூல் ஓனர்கள், பணியாளர்கள் நகருக்குள் வரும் வாகனங்களை நிறுத்தி, ஏன் மாஸ்க் ஒழுங்கா போடல? தடுப்பூசி ஏன் போடல? போட்டியா எங்க சர்டிபிகேட் காட்டு என ஒருமையில் மிரட்டியுள்ளனர். எதிர்த்து கேள்வி எழுப்பியவர்களின் வண்டி சாவிகளை பூட்டி கையில் எடுத்துக்கொண்டு போய் அய்யாவ பாரு என மரியாதை இல்லாமல் பேசியுள்ளனர். தனியார் பேருந்து ஓட்டுநர் ஒருவர் மாஸ்க் சரியாக போடவில்லையென வண்டியை ஆப் பண்ணுடா, உன் முதலாளியை போன் செய்யச் சொல்லு, அப்பறம்தான் பஸ்ச விடுவோம் என மிரட்டத்துவங்கினர். அரசியல் பிரமுகர் ஒருவரின் இருசக்கர வாகனத்தை வெளியூரை சேர்ந்த டிரைவிங் ஸ்கூல் பணியாளர் நிறுத்தி வம்பாக கேள்வி எழுப்ப மற்றொரு டிரைவிங் ஸ்கூல் ஓனர் பார்த்துவிட்டு நீங்க போங்க சார் அனுப்பியுள்ளார். தினசரி பத்திரிகைத்துறை போட்டோகிராபர் ஒருவரிடமும் தகராறு செய்து அவரின் இருசக்கர வாகனத்தின் சாவியை எடுத்துக் கொண்டுள்ளனர்.

 

Vaccine special camp ... ‘One day RDOs’

 

நல்லா டிப்டாப்பாக இருந்ததால் அவுங்க அதிகாரிகள் என்றே மக்கள் அனைவரும் நினைச்சாங்க. வண்டியை நிறுத்தி ஒருமையில பேசனவனுங்க டிரைவிங் ஸ்கூல் ஆளுங்கன்னு தெரிஞ்சிருந்தா விவகாரம் வேறமாதிரியாகியிருக்கும். அதிகாரிகள் நிறுத்தி கேள்வி கேட்டு இருந்தால் கூட பரவாயில்லை. சம்மந்தம்மேயில்லாத டிரைவிங் ஸ்கூல் நடத்தறவங்க வாகனங்களை நிறுத்தி அவமரியாதையா பேசனதைத்தான் ஏத்துக்க முடியலை. ஏய், நீ ஏன் சரியா மாஸ்க் போடல? போய் ஓரமா நில்லுன்னு மக்கள்கிட்ட அதிகாரம் செய்து ஏதோ இவுங்க ஆர்.டீ.ஓ, இன்ஸ்பெக்டர் மாதிரி நடந்துக்கிட்டாங்க. குடும்பத்தோட வந்தவர்களையும் மிரட்டினாங்க. இவுங்களுக்கு யாருங்க இந்த அதிகாரத்தை தந்தது? யார் வேண்டுமானாலும் பொதுமக்களை மிரட்டலாமா? என நம்மிடம் குமுறினார்கள் பாதிக்கப்பட்ட சிலர்.

 

 

நமக்கு தகவல் வந்ததும் நாம் நேரடியாக சென்று பார்த்தபோது, டிரைவிங் ஸ்கூல் ஓனர்கள், பணியாளர்கள் அதிகாரிகள் போலவே நடந்துக்கொண்டு மக்களிடம் ஒருமையில் பேசிக்கொண்டும், மிரட்டிக்கொண்டும் இருந்தது அதிர்ச்சியாக இருந்தது. நாம் இதுகுறித்து திருவண்ணாமலை ஆர்.டீ.ஓவை தொடர்புக்கொண்டு பேசியதும், ஆட்கள் பற்றாக்குறை, அதனால் சிலரை துணைக்கு வைத்துக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தச்சொன்னேன். இப்படி நடப்பார்கள் எனத்தெரியாது, வேறு எங்கும் இப்படி பிரச்சனையாகவில்லை. இங்கு மக்களிடம் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்பது அதிர்ச்சியாக இருக்கிறது, நான் உடனடியாக விசாரிக்கிறேன் என்றார். சிறிது நேரத்தில் அங்கிருந்தவர்கள் அந்த இடத்தில் இருந்து காலி செய்துக்கொண்டு சென்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

“பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல; தீராத வன்மம்” - சு.வெங்கடேசன்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
BJP unending anger towards Tamil Nadu says Su. Venkatesan

திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு  நிதி வழங்காமல் இருந்தது. இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே சமயம் கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் பாஜக தமிழகத்திற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல, வறட்சி நிவாரணம் என ரூ.3454 கோடி அறிவிப்பு. தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு ரூ.275 கோடி மட்டுமே. தமிழ்நாடு  கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம்” எனக் கடுமையாக சாடியுள்ளார்.