Skip to main content

டெல்லியில் கைது? சோழவரத்தில் என்கவுண்டர்!

Published on 12/10/2023 | Edited on 12/10/2023

 

Two raiders encounter in Cholavaram
பார்த்திபன்

 

சென்னை அருகே உள்ள செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் திலகர் தெருவைச் சேர்ந்தவர் பார்த்திபன் (54). இவருக்கு திருமணமாகி ராஜேஸ்வரி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். இவர் அதிமுகவின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளராகப் பதவி வகித்து வந்தார். மேலும், இவர் 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் பாடியநல்லூர் ஊராட்சி மன்ற தலைவராகவும் பொறுப்பு வகித்து வந்தார்.    செம்மரக் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய பார்த்திபன் ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டுவந்தார்.    

 

செம்மரக் கடத்தல் தொடர்பாக ஆந்திர காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டு பின் பிணையில் வெளிவந்தவர் பார்திபன். பார்த்திபன், மிளகாய் பொடி வெங்கடேசன், நடராஜன், கணேசன், சுப்பையா இவர்கள் அனைவரும் பெரும் புள்ளிகளாக அப்பகுதியில் வலம் வந்தனர். இவர்களுக்கு எதிராக அருண்பாண்டியன், முத்து சரவணன், முத்து சரவணனின் தம்பி கருப்பு முருகேசன், நாயுடு சதீஷ் என தனியாக ஒரு டீம் இருந்துவருகிறது. பார்த்திபன், கடந்த ஆகஸ்டு மாதம் 17ம் தேதி காலை தனது வீட்டின் அருகே உள்ள அங்காள பரமேஸ்வரி விளையாட்டு மைதானத்தில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது அங்கு, 2 இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் பார்த்திபனை வழி மறித்தது. மேலும், அவர்கள் கொண்டு வந்த அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களைக் கொண்டு பார்த்திபனை வெட்ட முயற்சித்தனர். இதனால், அதிர்ச்சியடைந்த பார்த்திபன் அங்கு இருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால், தப்பிச் சென்ற பார்த்திபனை அந்த மர்ம கும்பல் விடாமல் துரத்திச் சென்று சுற்றி வளைத்தது. பிறகு பார்த்திபனை கீழே தள்ளி அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தாங்கள் வந்த இரு சக்கர வாகனத்தில் ஏறி தப்பி சென்றனர். இதில் படுகாயமடைந்த பார்த்திபன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.       

 

Two raiders encounter in Cholavaram
முத்து சரவணன் - சண்டே சதீஷ்

 

இது குறித்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இது தொடர்பாக இதுவரை 10 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இவ்வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளிகளான முத்து சரவணன் மற்றும் சண்டே சதீஷ் ஆகிய இருவரும் தலைமறைவாக இருந்தனர். இவர்களைப் பிடிக்க சிறப்பு காவல் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் போலீஸார் ஈடுபட்டுவந்தனர். தலைமறைவாக இருந்த முத்து சரவணனும், சண்டே சதீஷும் டெல்லியில் பதுங்கியிருப்பதாக தனிப்படைக்கு தகவல் வர, டெல்லி விரைந்த தனிப்படையினர் அவர்களை கைது செய்துள்ளனர். பிறகு அங்கு இருந்து சென்னை அழைத்து வரப்பட்ட ரவுடிகள் முத்து சரவணன் மற்றும் சண்டே சதீஷ் ஆகிய இருவரையும் விசாரணைக்காக போலீஸார் சோழவரத்திற்கு அழைத்து வந்துகொண்டிருந்தனர்.    

 

அப்போது, சோழவரம் அருகே புதூர் பகுதியில் வந்து கொண்டிருந்த பொழுது ரவுடிகள் போலீஸாரை தாக்கிவிட்டு தப்பி ஓடி உள்ளனர். இதனை அடுத்து தப்பி ஓடியவர்களைப் பிடிப்பதற்கு முயற்சி செய்த பொழுது காவல்துறைக்கும் முத்து சரவணனுக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது காவல்துறையினர், முத்து சரவணன் மற்றும் சண்டே சதீஷை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் முத்து சரவணனுக்கு மார்பிலும், சண்டே சதீஷ்க்கு நெற்றியின் ஒரு முனையிலும் குண்டு பாய்ந்தது. இதில் முத்து சரவணன் சம்பவ இடத்திலேயே பலியாக சண்டே சதீஷ் படுகாயத்துடன் மீட்கப்பட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு சண்டே சதீஷ் மரணமடைய இருவரது உடலும் தற்போது ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதில் மூன்று போலீஸாருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சமயத்தில், கடந்த புதன் கிழமையே முத்து சரவணனின் தந்தை கோவிந்தராஜ் பாண்டியன், தனது மகனை போலீசார் போலி என்கவுண்டர் செய்யப்போவதாக தமிழக காவல்துறை டி.ஜி.பி.க்கு புகார் அளித்ததாகவும் கூறப்படுகிறது.      

 

போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்ட முத்து சரவணன் மற்றும் சண்டே சதீஷ் ஆகிய இரு ரவுடிகளுமே தி.மு.க. பிரமுகர் மடிப்பாக்கம் செல்வம், வில்லிவாக்கம் வழக்கறிஞர் ராஜேஷ், மற்றும் பாடியநல்லூர் அதிமுக பிரமுகர் பார்த்திபன் கொலை வழக்குகளில் முக்கிய குற்றவாளிகள். இவர்கள் பிரபல ரவுடி பாம் சரவணனின் நெருங்கிய கூட்டாளிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Two raiders encounter in Cholavaram
தணிகாசலம்

 

திருவள்ளூர் மாவட்டம், சோழவரத்தில் இரு ரவுடிகள் என்கவுண்டர் நடந்த அதே சமயத்தில் செங்கல்பட்டு மாவட்டத்திலும் போலீசார் நடத்திய என்கவுண்டரில் இவர்களின் கூட்டாளியான தனிகா என்ற ரவுடி காயத்துடன் உயிர்தப்பியுள்ளார்.  திருவள்ளூர் மாவட்டம்  பெரிய பாளையம் காவல்நிலைய சரித்திர பதிவேடு கொண்ட ஏ பிளஸ் ரவுடியான தணிகா என்கின்ற தணிகாசலம் மீது செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் காவல் நிலையத்தில் வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.    

 

இந்நிலையில் தனிப்படை போலீசார் தணிகாசலத்தை சென்னையில் கைது செய்து விசாரணைக்காக செங்கல்பட்டிற்க்கு அழைத்து வந்தனர். அப்படி வரும்போது, மாமண்டூர் அருகே போலீசாரிடமிருந்து ரவுடி தணிகா, தப்ப முயன்றபோது போலீசார் பாதுகாப்புக்காக வைத்திருந்த துப்பாக்கியால் கை மற்றும் கால் ஆகிய பகுதியில் சுட்டு பிடித்தனர். பிறகு அவரை மீட்ட போலீசார் அவரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்து, அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதன் பிறகு அங்கிருந்து ஏ பிளஸ் ரவுடி தணிகாசலத்தை மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜூவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். தணிகாசலத்தின் மீது 6 கொலை வழக்குகள், 10 கொலை முயற்சி, பல்வேறு வழிப்பறி வழக்குகள் உள்ளன. கடந்த 2016 ஆம் ஆண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் இவர் கைது செய்யப்பட்டிருந்தார். புழல் சிறையில் சில மாதங்களுக்கு முன்பு தணிகாசலத்திடம் இருந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.    

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்; ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தமமும் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரையும் அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்தப் பணத்திற்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார். 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

இந்நிலையில் தாம்பரம் போலீசார் இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர். அதாவது பணம் எடுத்துச் சென்ற சூட்கேஸ்கள், 7 பைகள், 3 செல்போன்கள், 15 பேரிடம் பெற வாக்குமூலம் தகவல் அடங்கிய ஆவணங்கள், நயினார் ஹோட்டல் அருகே இருந்த சிசிடிவி காட்சிகள், ரயில் டிக்கெட் பெற நயினார் கையொப்பமிட்ட அவசர கோட்டாவிற்கான படிவம் ஆகியவற்றை தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார் இந்த ஆவணங்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விரைவில்  சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

செஸ் வீரர் குகேஷுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Chief Minister MK Stalin praises chess player Gukesh

கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கனடாவில் நடைபெற்றது. இதில் சாம்பியனுக்கான இறுதி போட்டியின் கடைசி சுற்றில் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ் (வயது 17) அமெரிக்காவின் நகமுராவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் இருவரும் 1/2 புள்ளிகள் பெற்றனர். இதன் மூலம் 14 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியின் முடிவில் 9 புள்ளிகள் பெற்று குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். நகமுரா 8.5 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்தார்.

இந்தத் தொடரை வென்றதன் மூலம் உலக செஸ் சாம்பியன் ஷிப் செஸ் போட்டியில் சீனாவில் டிங் லிரெனை எதிர்கொள்ள குகேஷ் தகுதி பெற்றுள்ளார். மேலும் இந்தத் தொடரை வென்று இளம் வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வெல்லும் நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மூத்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்திற்குப் பின் செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வெல்லும் இந்திய வீரர் குகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து செஸ் வீரர் குகேஷுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர். அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “அபாரமான சாதனை படைத்த குகேஷுக்கு வாழ்த்துகள். 17 வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் செஸ் தொடரை வென்ற இளம் வீரர் என்ற வரலாற்றை படைத்துள்ளார். உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்திற்காக சீனாவின் டிங் லிரனுக்கு எதிரான போட்டியிலும் குகேஷ் வெல்ல வாழ்த்துகள்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை முகாம் அலுவலகத்தில்  இன்று (28.4.2024) பெடே (FIDE) கேண்டிடேட்ஸ் தொடரில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீரர் குகேஷுக்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூபாய் 75 இலட்சத்திற்கான காசோலை மற்றும் கேடயத்தையும் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அப்போது தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி மற்றும் குகேஷின் பெற்றோர் ஆகியோர் உடனிருந்தனர்.