Skip to main content

அரக்கோணம் அருகே இரட்டை கொலை..! 

Published on 09/04/2021 | Edited on 09/04/2021

 

Two passes away near arakkonam due to election problem
                                                          சூர்யா 

 

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள சோகனூர் பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜூனன் (வயது 20), செப்பேடு பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா (25). நண்பர்களான அர்ஜூன், சூர்யா மற்றும் அவரது நண்பர்கள் சிலர் நேற்று முன்தினம் (07.04.2021) இரவு பக்கத்து கிராமமான சித்தம்பாடி பகுதியில் மது அருந்தியுள்ளனர். அப்போது, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், மற்றொரு தரப்பினருடன் ஏற்பட்ட பிரச்சினையைக் குறித்து பேச்சுவார்த்தை நடத்த பெருமாள்ராஜ பேட்டையைச் சேர்ந்த ஒருவரிடம் மது அருந்த வரும்படியும், பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்தும்படியும் அழைத்துள்ளனர்.

 

அதைத் தொடர்ந்து அந்த நபர் அங்கு சென்றார். அப்போது அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் அந்த இரு தரப்பினருக்கும் மீண்டும் பெரிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் இருதரப்பு கோஷ்டிகளும் பாட்டில் மற்றும் கத்தி, கட்டைகளால் பயங்கரமாக தாக்கிக்கொண்டனர். இதில் சோகனூரைச் சேர்ந்த அர்ஜூனன், செப்பேடு பகுதியைச் சேர்ந்த சூர்யா, மதன், சவுந்தர்ராஜன் ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

 

அவர்களை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அர்ஜூனன், சூர்யா இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். காயம் அடைந்த 2 பேரும் திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

arjunan
                                                        அர்ஜூனன் 

 

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன், அரக்கோணம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜ் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கோஷ்டி மோதல் தகராறில் கொலை நடந்த சம்பவம் சோகனூர் மற்றும் செம்பேடு பகுதியில் காட்டுத் தீ போல் பரவியது. உடனடியாக அருகில் உள்ள கிராமங்களான சாலை, வேடல், குருவராஜப்பேட்டை, பெருமாள் ராஜப்பேட்டை பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன.

 

அர்ஜூனன், சூர்யா ஆகியோரின் உறவினர்கள் மற்றும் சோமனூர் பகுதியைச் சேர்ந்த மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் இரவு முதல் குருவராஜப்பேட்டை - திருத்தணி சாலையில் மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின் காவல்துறையினர் குற்றவாளிகளை விரைவில் கைது செய்து நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அக்கிராம மக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். மேலும், கொலை வழக்கில் தொடர்புடையவர்களைக் கைது செய்ய நான்கு தனிப்படைகளும் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்