
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் பகுதிக்கு கோடை விடுமுறையை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகள் படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி நல்லூர்பாளையத்தை சேர்ந்த தனசேகரன் என்பவர் 21 பேரை அழைத்துக்கொண்டு வேன் மூலம் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்துள்ளார். பல்வேறு இடங்களைச் சுற்றிப்பார்த்த அவர்கள் காவிரி ஆற்றுப் பகுதியில் குளித்துக் கொண்டிருந்தனர்.
அப்பொழுது தனசேகரன், ரவி ஆகியோர் வரும் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றதாகக் கூறப்படுகிறது. அப்பொழுது திடீரென இருவரும் நீரில் மூழ்கினர். இதனால் உடன் வந்தவர்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்த நிலையில் அங்கு வந்து மீட்புப் படையினர் நீண்ட நேரம் தேடி இருவரின் சடலங்களையும் மீட்டனர். கைப்பற்றப்பட்ட இரண்டு உடல்களும் பென்னாகரம் தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து ஒகேனக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஏற்கனவே கோடை விடுமுறை நேரங்களில் நீர்நிலைகளில் குளிக்க முற்படுபவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்; குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் நீர்நிலைகளில் ஆபத்தான இடங்களில் குளிக்க கூடாது என விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில் ஒகேனக்கல்லில் நிகழ்ந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.