தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத் திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில், 75% குறைவாக உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு 3,000 ரூபாய் மாத உதவித் தொகையும் 75% -க்கு மேல் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு 5,000 ருபாய் மாத உதவித் தொகையும் வழங்க வேண்டும். தனியார்த் துறைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கான இடஒதுக்கிடு 5% வழங்க, 'ஊனமுற்றோர் உரிமைகள் சட்டம் - 2016'-ன் படி அதை உறுதிப்படுத்தி தமிழக அரசு சிறப்புச் சட்டம் நிறைவேற்ற வேண்டும்.
அரசுத் துறையில் பின்னடைவு காலிப் பணியிடங்களை 3 மாத காலத்திற்குள் நிரப்பிட, கடந்த 03.10.2013 அன்று உச்சநீதிமன்றம் தீர்பளித்தது. அது குறித்த வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் 300 -க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் செய்ய முயன்றவர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர்.