Skip to main content

பஸ் ஓட்டும் போது ஹாட் அட்டாக்... பயணிகளை காப்பாற்றி இறந்த ஓட்டுநர்!

Published on 25/10/2019 | Edited on 25/10/2019

திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்த பூவாளூர் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் திருக்குமரன் அரசு பஸ் டிரைவரான இவருக்கு திருமணமாகி லட்சுமி என்ற மனைவியும், 3 பெண் குழந்தைகளும், 1 மகனும் உள்ளனர். வழக்கம் போல் திருக்குமரன் வீட்டில் இருந்து வேலைக்கு புறப்பட்டு சென்றார்.
 

லால்குடியை அடுத்த மாந்துறையில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு சென்ற அவர், அங்கிருந்து மதியம் 2 மணிக்கு திண்ணியம் வரை செல்லும் பஸ்சை ஓட்டிச்சென்றார். அந்த பஸ்சில் கண்டக்டராக நாகராஜ் இருந்தார். பின்னர் திண்ணியத்தில் இருந்து மதியம் 3 மணிக்கு புறப்பட்டு, திருச்சி நோக்கி அந்த பஸ் வந்து கொண்டிருந்தது. பஸ்சில் 40 பயணிகள் இருந்தனர். லால்குடியை அடுத்த சிறுமயங்குடியை தாண்டி பஸ் சென்றபோது திருக்குமரனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் பஸ்சை சாலையோரமாக நிறுத்திவிட்டு, கண்டக்டரிடம் ‘என்னால் பஸ்சை இயக்க முடியவில்லை, நெஞ்சுவலி மற்றும் தலை சுற்றல் ஏற்படுகிறது’என்று கூறினார்.

trichy bus driver incident on duty time passengers safe

 

இதையடுத்து அவரை, கண்டக்டர் நாகராஜ் உடனடியாக அருகே உள்ள சிறுமயங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு முதலுதவி சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார். திருக்குமரனை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவரை உடனடியாக லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறினர். இதையடுத்து கார் மூலம் லால்குடி அரசு மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
 

இது குறித்து கண்டக்டர் நாகராஜ் லால்குடி போக்குவரத்து கழக பணிமனை கிளை மேலாளர் பூபதிக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து விரைந்து வந்த கிளை மேலாளர் மருத்துவமனையில் டாக்டரிடம் இதுகுறித்து கேட்டறிந்தார். இது தொடர்பாக திருக்குமரனின் மனைவி லட்சுமி கொடுத்த புகாரின்பேரில் லால்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். லால்குடியை அடுத்த சிறுமயங்குடி பாதையின் இருபுறமும் ஓடும் ஆற்றில் பேருந்து இறங்கியிருந்தால் பெரிய உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும் 40 பயணிகளின் உயிரை காப்பாற்றிவிட்டு உயிரிழந்த அரசு பேருந்து டிரைவர் திருக்குமரனுக்கு வருத்தங்களுடன் நன்றி கண்ணீர் செலுத்தினர் அந்த பகுதி மக்கள்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

மாவட்ட அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி; சாம்பியன் பட்டத்தை வென்ற திருச்சி அணி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Trichy won the champion title for District Level Shooting Competition

திருச்சியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் திருச்சி ரைபிள் கிளப் அணி சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளது. 

திருச்சி மாநகர காவல்துறை கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் மாநகர ரைபில் கிளப் 31.12.2021 ஆம் தேதி தொடங்கப்பட்டது. மாவட்ட, தேசிய மற்றும் சர்வதேச அளவில் துப்பாக்கி சுடும் போட்டிக்கு கலந்து கொள்ள பயிற்சி பெறும் வகையில் செயல்பட்டு வரும் இந்த கிளப் திருச்சி மாநகர காவல் ஆணையர் ந. காமினி தலைமையில் செயல்பட்டு வருகிறது. இந்திய ரைபிள் சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்த ரைபிள் கிளப்பில் மாவட்ட அளவிலான ஏர் பிஸ்டல் மற்றும் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஏப்ரல் 27ல் தொடங்கி 28 வரை இருநாள்கள் நடைபெற்றன.

இதில் திருச்சி ரைபிள் கிளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்ற சுமார் 340 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் 10 மீட்டர் சுடுதளத்தில் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் சிறுவர்கள், இளையோர் மற்றும் முதியவர்கள் என ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு என தரம் பிரிக்கப்பட்டு சப்யூத், யூத், ஜீனியர், சீனியர், மாஸ்டர் மற்றும் சீனியர் மாஸ்டர் என தனித்தனியாக பல்வேறு பிரிவுகளில் நடைபெற்றது. இந்த போட்டியில் பெரும்பாலான போட்டிகளில் வெற்றி அதிக புள்ளிகளைப் பெற்று திருச்சி ரைபிள் கிளப் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச்சென்றது. 

போட்டியில் பங்கேற்ற மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜி. கார்த்திகேயன் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இரு வெள்ளி பதக்கங்களை வென்றார். மேலும் ஏர் பிஸ்டல் மற்றும் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை(28-04-24) பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்க செயலாளர் மற்றும் திருச்சி ரைபிள் கிளப் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் வெற்றிபெற்ற 76 பேருக்கு தங்க பதக்கமும், 69 பேருக்கு வெள்ளி, 50 நபர்களுக்கு வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 195 பதக்கங்கள் வழங்கப்பட்டது. மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜி கார்த்திகேயன் அவற்றை வழங்கி பாராட்டினார்.

Next Story

ரயில் பயணியிடம் கைவரிசை காட்டிய நபர்; போலீசார் அதிரடி நடவடிக்கை

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Police action on A person who shows his hand to a train passenger

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பயணியிடம் சங்கிலியைப் பறித்த நபரை, ரயில்வே போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

திருச்சியில் இருந்து நாகூர் செல்லும் விரைவு ரயில் ஏப்ரல் 26 ஆம் தேதி திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் 5 ஆவது நடைமேடையில் புறப்படத் தயாராக நின்றிருந்தது. அதில் செல்லவிருந்த பயணிகள் ரயிலில் அமர்ந்திருந்தனர். அப்போது ஜன்னலோரத்தில் நின்றிருந்த மர்ம நபர் ஒருவர், ரயிலில் அமர்ந்திருந்த நெல்லையைச் சேர்ந்த க. வெங்கடேஷ் என்ற பயணியின் கழுத்தில் கிடந்த 1 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டார். 

இந்த சம்பவம் தொடர்பாக வெங்கடேஷ் போலீசாரிடம் புகார் அளித்தார். அவர் அளித்த அந்த புகாரின் பேரில், திருச்சி ரயில்வே போலீஸ் ஆய்வாளர் மோகனசுந்தரி, உதவி ஆய்வாளர்கள் சுரேஷ்குமார், திருமலைராஜா மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (28-04-24) காலை திருச்சி ரயில் நிலையத்தில் சந்தேகத்துக்கிடமான வகையில் சுற்றித்திரிந்த நபரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் அந்த நபர் கடலூர் மாவட்டம் அகரம், தங்காளிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ர. கோவிந்தராஜ் (26) என்பதும், அவர்தான் வெங்கடேஷின் சங்கிலியை பறித்தது மற்றும் விருத்தாசலம் ரயில் நிலையத்திலும் இதேபோல ஒரு திருட்டு சம்பவத்தில் அவருக்கு தொடர்பிருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீஸார் அவரைக் கைது செய்து திருச்சி மாவட்ட 4 ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.