Skip to main content

ஜெயலலிதாவுக்கான சிகிச்சை; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 15/07/2024 | Edited on 15/07/2024
Treatment for Jayalalithaa High Court action order

கடந்த 2016ஆம் ஆண்டு தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியில் இருந்தபோது அவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனளிக்காத காரணத்தால் அவர் மறைந்துவிட்டதாக சொல்லப்பட்டது. ஆனாலும் அவரது மரணம் தொடர்பான பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு ஆணையம் அமைக்கப்பட்டது.

இதனையடுத்து அதிமுக ஆட்சி நிறைவடைந்து திமுக ஆட்சிக்கு வந்தது. இத்தகைய சூழலில் தான் சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு 600 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நீதிபதி ஆறுமுகசாமி சமர்பித்தார். அதனைத் தொடர்ந்து ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை சட்டசபையில் சமர்ப்பிக்கப்பட்டது. இதற்கிடையே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காலத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து சிபிஐ விசாரணை கோரி அதிமுக தொண்டர் ராம் குமார் என்பவர் சென்ன உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். 

Treatment for Jayalalithaa High Court action order

இந்நிலையில் இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், “மறைந்த முதல்வர் ஜெயலலிதா 75 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது மருத்துவமனையில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள் (CCTV) வேலை செய்யவில்லை. மருத்துவமனை தரப்பில் இரண்டு பேட்டிகள் அளிக்கப்பட்டன. இந்த இரு பேட்டிகளுக்கு இடையே முரண்பாடு உள்ளது. அது மட்டுமல்லாமல் இந்த காலகட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் அளித்த பேட்டிகளுக்கும், ஆறுமுகசாமி ஆணையம் சார்பில் அளிக்கப்பட்ட அறிக்கைக்கும் முரண்பாடுகள் உள்ளன. தமிழக அரசுக்கு ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரை செய்தவற்றை தமிழக அரசு நடைமுறைப்படுத்தவில்லை” என வாதிடப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் அடங்கிய அமர்வு இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு 2 வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என்று தெரிவித்தனர். இதனால் இரண்டு வாரங்களுக்கு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளனர். 

சார்ந்த செய்திகள்