Skip to main content

டாப்சிலிப் யானைகளுக்கு கரோனா தொற்று இல்லை....

Published on 17/06/2021 | Edited on 17/06/2021

 

Topslip elephants do not have corona infection ....

 

கோவை, டாப்சிலிப் முகாமில் பராமரிக்கப்படும் யானைகளுக்கு கரோனா தொற்று இல்லை என்று ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் ஆரோக்கியராஜ் சேவியர் தெரிவித்தார். சென்னை வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவில் 13 சிங்கங்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டு, தொற்று பாதித்த ஒரு பெண் சிங்கம் பரிதாபமாக உயிரிழந்தது. இதைத் தொடர்ந்து வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள யானைகளுக்கு கரோனா பரிசோதனை செய்வதற்கு அரசு உத்தரவிட்டது. 

 

இதையடுத்து ஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி வனச்சரகத்திற்கு உட்பட்ட டாப்சிலிப் அருகே உள்ள கோழிகமுத்தி, வரகளியாறு ஆகிய முகாம்களில் பராமரிக்கப்படும் வளர்ப்பு மற்றும் கும்கி யானைகளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. வன கால்நடை மருத்துவ குழுவினர் கலீம் உள்பட 28 யானைகளிடம் இருந்து ஆசனவாய், மூக்கு சளி மாதிரியை சேகரித்து உத்தரப்பிரதேசம் மாநிலம் பரேலியில் உள்ள இந்திய கால்நடை மருத்துவ ஆராய்ச்சி நிலையத்திற்கு ஆய்வுக்கு அனுப்பிவைத்தனர். அங்கு பரிசோதனை செய்ததில் யானைகளுக்குத் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

இதுகுறித்து ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் ஆரோக்கியராஜ் சேவியர் கூறியதாவது, “கோழிகமுத்தி, வரகளியாறு முகாமில் பராமரிக்கப்படும் யானைகளுக்கு கரோனா தொற்று இல்லை என்று அறிக்கை பெறப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்படவில்லை என்றாலும் வழக்கமான கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடரும். மேலும், ஏற்கனவே தடுப்பு நடவடிக்கையாக அனைத்து பாகன்களுக்கும் கையுறை, முகக்கவசம், சானிடைசர் கொடுக்கப்பட்டுள்ளது. யானைகளுக்கு உணவு தயாரிப்பதற்கு முன் கிருமிநாசினி மருந்து கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும். கையுறை, முகக்கவசம் அணிய வேண்டும். இதே முறையை யானைகளுக்கு உணவு கொடுக்கும்போதும் கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

மத்திய, மாநில அரசுகள் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தியுள்ளதால், வழக்கமாக யானைகளை நிறுத்தும் இடைவெளியைவிட தற்போது கூடுதலான இடைவெளி கடைப்பிடிக்கப்படுகிறது. வாரத்தில் ஒருநாள், யானைகளுக்கு ஏதாவது தொந்தரவு உள்ளதா? என்பதை அறிய வன கால்நடை டாக்டர்களைக் கொண்டு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. முகாமில் யானைகள் நிறுத்தும் இடம் உட்பட அனைத்து இடங்களிலும் தினமும் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்படுகிறது” இவ்வாறு அவர் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்