தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 4,807 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று கரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 4,737 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். மற்றவர்கள் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இன்று ஒரே நாளில் 47,179 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 4,807 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவிற்கு 88 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று வெளியிடப்பட்ட உயிரிழப்புகளில் சென்னையில் மட்டும் 31 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் மதுரையில் இன்று ஒரே நாளில் 9 உயிரிழப்புகள் நிகழ்ந்திருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 64 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 24 பேரும் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் மொத்தமாக இதுவரை கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,403 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு சதவிகிதம் என்பது 1.45 சதவீதமாக உயர்ந்துள்ளது.
சென்னையில் மட்டும் அதிகபட்சமாக இதுவரை 1,407 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 186 பேர், திருவள்ளூரில் 154 பேரும், காஞ்சிபுரம் 64, ராமநாதபுரம் 47, திருவண்ணாமலை 32 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் இதுவரை கரோனாவிற்கு 996 பேர் உயிரிழந்துள்ளனர். கரோனாவால் பாதிக்கப்பட்ட 29 வயது இளம்பெண் சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தமிழகத்தில் வேறு நோய் பாதிப்பில்லாத 6 பேர் இன்று கரோனாவால் உயிரிழந்துள்ளனர். 50 வயதுக்கு உட்பட்டோரில் 15 பேர் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் 49 ஆவது நாளாக தொடர்ந்து இரட்டை இலக்கத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து வருகிறது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,049 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது வரை குணமடைந்தோர் எண்ணிக்கை என்பது 1,13,856 ஆக உள்ளது. அதேபோல் தமிழகத்தில் இதுவரை மொத்தமாக கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 1,65,714 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மேலும் 1,219 பேருக்கு ஒரே நாளில் கரோனா கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் சென்னையில் 15 ஆவது நாளாக 2 ஆயிரத்துக்கும் குறைவான பாதிப்பு பதிவாகி உள்ளது. சென்னையில் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை என்பது 84,598 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 68.70 சதவீதமாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 49,452 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல் சென்னை தவிர பிற மாவட்டங்களில் இன்று ஒரே நாளில் 3,588 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று அதிகபட்சமாக திருவள்ளூரில் 370 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து செங்கல்பட்டில் 332 பேருக்கும், வேலூரில் 191 பேருக்கும், திண்டுக்கல்லில் 107 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 97 பேரும், விழுப்புரத்தில் 96 பேருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மதுரையில் இன்று ஒரே நாளில் 185 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,044 ஆக அதிகரித்துள்ளது. விருதுநகர் 179, தூத்துக்குடி 161, நெல்லை 171, திருச்சி 124, கோவை 118, ராணிப்பேட்டை 109 பேருக்கு கரோனா இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.