Skip to main content

"தமிழகத்தை பாஜக வஞ்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது" - தமகா இளைஞரணி தலைவர் தாக்கு!

Published on 08/12/2019 | Edited on 08/12/2019

ஓட்டு போடவில்லை என்பதற்காக தமிழகத்தை பா.ஜ.க. வஞ்சிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தமாகா இளைஞரணி தலைவர் யுவராஜா தெரிவித்துள்ளார்.

 

 tmk leader Condemned bjp

 

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி மாநில தலைவர் யுவராஜா ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது " உச்சநீதிமன்றம் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என அறிவித்துள்ளதை, நாங்கள் முழுமனதாக வரவேற்கிறோம். உள்ளாட்சி அமைப்புகளோடு மாநகராட்சி முதல் கிராம ஊராட்சிகள் என அனைத்து உள்ளாட்சி பதவிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும் என்பதே எங்கள் கருத்து. அதிமுக, தமாகா கூட்டணியை பொருத்தவரை பலமான கூட்டணி. இந்த கூட்டணி உள்ளாட்சி தேர்தலிலும் தொடர்கிறது.


தெலுங்கானாவில் பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளனர். இதனை நாங்கள் வரவேற்கிறோம். அப்போது தான் குற்றவாளிகளுக்கு உயிர் பயம் உருவாகும். தமிழகத்திலும் இதுபோன்ற சம்பவங்களில் யார் ஈடுபட்டாலும் அவர்களுக்கும் இதேபோல தண்டனை கொடுக்க வேண்டும். குறிப்பாக பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பதை கண்டறிந்து குற்றவாளிகளுக்கு இதுபோன்ற தண்டனைகளை தர வேண்டும். அப்போது தான் தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் குறையும்.

மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்த சம்பவம் வேதனைக்குரியது ஆனால் அந்த சுவருக்கு தீண்டாமை சுவர் என்று பெயர் வைத்து ஒரு சில சமூக இயக்கங்கள் ஒன்று சேர்ந்து மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறன. தமிழக அரசு இதை கண்காணித்து யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மத்திய அரசு வெங்காய விலையை கட்டுப்படுத்த வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய வேண்டும். தமிழக அரசும் ரேசன் கடைகளில் வெங்காயம் விற்பனை செய்ய வேண்டும். மத்திய அரசின் ஜிஎஸ்டி வரிவிதிப்பதால் ஈரோடு, கோவை மாவட்டங்களில் தொழிற்சாலைகள் பெருமளவு  மூடப்பட்டு லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். தமிழகத்தில் பாஜகவிற்கு ஓட்டு போடவில்லை என்பதற்காக தமிழகத்தை பா.ஜ.க.வஞ்சிப்பதையும் தொழிற்சாலைகள் மூடப்படுவதையும் ஏற்றுக் கொள்ள முடியாது" என்று தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிமனையில் மோதல்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case against BJP for Election Workshop 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் மத்திய சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்திக்கும், அண்ணா நகர் வடக்கு மண்டல பாஜக தலைவர் ராஜ்குமாருக்கும் இடையே தேர்தல் பணியில் சுணக்கமாக செயல்பட்டது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய சென்னை தொகுதி பாஜக தேர்தல் பணிமனையில் நேற்று முன்தினம் (26.04.2024) மூர்த்தியும், ராஜ்குமாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தபோது தாக்கிக்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக இருவரும் நாளை (29.04.2024) நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு; நீலகிரியில் பரபரப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Malfunction of strong room CCTV cameras; Excitement in the Nilgiris

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
 

தமிழகத்தில் தேர்தல் மக்களவை தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி காட்சிகள் திடீரென செயலிழந்தது அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நீலகிரியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக கூட்டணி சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக கூட்டணியில் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.