Skip to main content

வீட்டை விட்டு வந்தவர்களா? மூன்று முதியவர்கள் அடுத்தடுத்து உயிரிழப்பு... போலீஸ் விசாரணை!

Published on 18/11/2020 | Edited on 18/11/2020

 

Three old people passes away in erode

 

வீட்டை விட்டு வெளியேறும் அல்லது மனிதநேயமற்ற வகையில் அவர்களின் வாரிசுகளால் வெளியேற்றப்படும் வயதானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அப்படி ஆதரவற்றவர்களாக ரோட்டோரம் வசிக்கும் அவர்கள் சில நேரம் இறந்து விடுவதும் உண்டு. அப்படிப்பட்ட சம்பவம்தான் தான் இது.


ஈரோடு ஆசிரியர் குடியிருப்பு காலனி அருகே, இரு நாட்களுக்கு முன்பு சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஒரு முதியவர் மயங்கிக் கிடப்பதாக சூரம்பட்டி போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. போலீசார் அந்த இடத்துக்குச் சென்று, மயங்கிய நிலையில் இருந்த முதியவரை மீட்டு, சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த முதியவர், சிகிச்சைப் பலனின்றி 17ஆம் தேதி இரவு இறந்து விட்டார். 


இறந்த அந்த முதியவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று எந்த விவரமும் தெரியவில்லை. அவர் வெள்ளை வேட்டியும், வெள்ளைச் சட்டையும் அணிந்திருந்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


அதேபோல், ஈரோடு பழனியப்பா வீதியில், 17ஆம் தேதி மாலை 55 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் மயங்கிக் கிடப்பதாக, ஈரோடு போலீசுக்குத் தகவல் வந்தது. அதன்பேரில், அங்கு சென்ற போலீசார், அந்த நபரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பன போன்ற விவரங்கள் எதுவும் தெரியவில்லை.

 

cnc


இதைப்போலவே, ஈரோடு அரசு மருத்துவமனையில் 75 மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நான்கு நாட்களுக்கு முன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அந்த முதியவர் சிகிச்சைப் பலனின்றி 18ஆம் தேதி காலை இறந்து விட்டார். இறந்த முதியவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் எதுவும் தெரியவில்லை. போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


இப்படி அடுத்தடுத்து ஓரிரு நாட்களிலேயே மூன்று பேர் அவர்களின் பெயரோ, முகவரியோ இல்லாமல் யாருமற்ற அநாதையாக இறந்துள்ளனர். மனிதம் மரித்துவிட்ட இந்தக் காலத்தில், வயதான மனிதர்களைப் பாதுகாக்கும் உயரிய பண்பு இல்லாமல் போவது வேதனையானது தான்.

 

 

 

சார்ந்த செய்திகள்