Skip to main content

ஏரல் கொடூரம்... ஆட்டோ ஏற்றி எஸ்.ஐ.கொலை... கொலையாளி காவல்நிலையத்தில் சரண்! 

Published on 02/02/2021 | Edited on 02/02/2021

 

thoothukudi incident

 

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் நகரில் கொற்கை விலக்கு அருகில் வாடகை வீட்டில் குடியிருக்கும் முருகவேல் (40), அங்கு டூவீலர் ஒர்க் ஷாப் வைத்திருக்கிறார். தாட்டியமாகப் பேசும் குணம் கொண்ட முருகவேலின் சொந்த ஊர் ஆறுமுகமங்கலம் அருகிலுள்ள தீப்பாச்சி கிராமம்.

 

நேற்றிரவு முருகவேல் சுமார் ஏழுமணியளவில் ஏரல் சாலையில் பானிபூரி விற்பவரிடம் போதையில் பானிபூரி கேட்டுத் தகராறு செய்திருக்கிறார். தகவல் அறிந்து ஸ்பாட்டுக்கு வந்த எஸ்.ஐ. பாலுவும் போலீஸ்காரர்களும் முருகவேலை எச்சரித்து அனுப்பியுள்ளனர். அதையடுத்து முருகவேல் வீட்டிற்குப் போயிருக்கிறார். இந்த நிலையில் இரவு 10 மணி வாக்கில் பஸ் நிலையத்தின் ஓட்டல் ஒன்றில் தகராறு நடப்பதாக காவல் நிலையத்திற்குத் தகவல் வர, எஸ்.ஐ. பாலுவும் உடன் போலீசாரும் அந்தக் கடைக்குச் சென்றுள்ளனர். அங்கு சென்றபோது பானிபூரிகாரரிடம் தகராறு செய்த முருகவேல், டிபன் பொருட்டு ஓட்டலில் தகராறு செய்தது தெரியவர, முருகவேலையும் அவர் வந்த லோடு ஆட்டோவுவையும் காவல் நிலையம் கொண்டு வந்திருக்கிறார் எஸ்.ஐ.பாலு.

 

thoothukudi incident

 

அங்கு நடந்த விசாரணையில் முருகவேல் போதையிலிருப்பது தெரியவர அவரை காலையில் ஸ்டேஷனுக்கு வரச் சொல்லி அனுப்பிய எஸ்.ஐ. பாலு, அவரது லோடு ஆட்டோவை காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்திருக்கிறார். லோடு ஆட்டோவைப் பிடித்துக்கொண்ட ஆத்திரத்தில் முருகவேல் வீடு திரும்பியிருக்கிறார்.

 

இதனிடையே இரவு 12 மணிக்கு மேல் வழக்கம் போல் நைட் ரவுண்ட்ஸ் சென்ற எஸ்.ஐ. பாலு, தனது டூவீலரில் தலைமைக் காவலர் பொன் சுப்பையாவுடன் சென்றிருக்கிறார். பஜாரில் ரவுண்ட்ஸ் முடித்து விட்டு, இரவு ஒருமணியளவில் எஸ்.ஐ. பாலு, கொற்கை விலக்கு பக்கமுள்ள வீட்டின் முன் தொட்டி ஆட்டோவுடன் ஒருவர் நிற்பதைப் பார்த்து அங்கேவர, அந்த வீட்டின் முன், மேற்குறிப்பிட்ட சம்பவங்களுக்கு காரணமான முருகவேல் நின்றிருக்கிறார். ''வீட்டுக்குப் போகவில்லையா. ஏன் இந்த நேரத்தில் இங்க நிக்கிற'' என்று எஸ்.ஐ.பாலு கேட்டபோது, தனது வீட்டின் சொந்தக்காரரின் தொட்டி ஆட்டோவிலிருந்த முருகவேல், ''என்னோட ஒர்க் ஷாப்பைத் திறக்கப் போகிறேன்'' என்று அவர்களிடம் சொல்ல, அவரை வீட்டுக்குப் போகச் சொல்லி கண்டித்த எஸ்.ஐ.பாலுவும் தலைமைக் காவலரும் அந்த இரவில் ஸ்டேஷன் திரும்பியிருக்கின்றனர்.

 

thoothukudi incident

 

இரண்டு சம்பவத்தில் தன்னை எஸ்.ஐ. கண்டித்ததோடு தனது ஆட்டோவையும் பிடுங்கிக்கொண்ட ஆத்திரத்தில் அந்த தொட்டி ஆட்டோவில், எஸ்.ஐ. பாலுவைப் பின் தொடர்ந்த முருகவேல், வேகமாகச் சென்று எஸ்.ஐ. பாலு சென்றுகொண்டிருந்த பைக்கின் பின்னே மோதித் தள்ளியிருக்கிறான். மோதிய வேகத்தில் எஸ்.ஐ.பாலு நெஞ்சில் அடிபட்டு மயங்கியிருக்கிறார். உடன் வந்த ஏட்டு பொன்.சுப்பையாவின் கால்களில் காயம் ஏற்பட்டிருக்கிறது. தகவலறிந்து ஸ்பாட்டுக்கு வந்த போலீசார் இருவரையும் மீட்டு சிகிச்சைகாக ஏரல் அரசு மருத்துவமனை கொண்டு சென்றிருக்கின்றனர். அங்கே பாலுவை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். ஏட்டு பொன்.சுப்பையாவுக்கு சிகிச்சை செய்யப்பட்டது. தகவலறிந்தவுடன் தாமதமில்லாமல் ஏரல் காவல் நிலையம் வந்த எஸ்.பி.ஜெயக்குமார், அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார். இதுகுறித்து ஏரல் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்.

 

thoothukudi incident

 

இதனிடையே முருகவேல் நேற்று (01.02.2021) விளாத்திகுளம் காவல் நிலையத்தில் சரணடைந்திருக்கிறார். பலியான எஸ்.ஐ.பாலுவுக்கு வயது (56) தூத்துக்குடி பக்கமுள்ள முடிவைத்தானேந்தல் கிராமத்தைச் சார்ந்தவர். திருமணமாகி, மனைவியும் ஒரு மகன், மகள் என்று இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

 

thoothukudi incident

 

thoothukudi incident

 

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில், உடற்கூறு செய்யப்பட்ட எஸ்.ஐ. பாலுவின் உடலுக்கு மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ், தென்மண்டல ஐ.ஜியான முருகன், எஸ்.பி.ஜெயக்குமார் ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் முடிவைத்தானேந்தல் கொண்டு வரப்பட்டு போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

 

ஆட்டோ கொண்டு மோதி எஸ்.ஐ. படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மாவட்டத்தில் பதற்றத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; அதிகாரிகளுக்கு நீதிமன்றம் கெடு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court is bad for the authorities for Tuticorin firing

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதனையடுத்து, இந்த வழக்கு கடந்த மார்ச் 23 விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இது குறித்த அறிக்கை தயாராகிவிட்டதால் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்” எனப் பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த நிலையில், நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘வழக்கில் எதிர் மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்ட சில அதிகாரிகளுக்கு நீதிமன்ற நோட்டீஸ் சென்றடையவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட அதிகாரிகள் அனைவரும் ஜூன் 7ஆம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு விசாரணையை ஜூன் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். 

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்