Skip to main content

''எனக்கும் மா.செ. கொடுங்க... இல்லையெனில்...?'' - கலகக் குரல் எழுப்பிய தூத்துக்குடி அதிமுக..!

Published on 29/12/2020 | Edited on 30/12/2020

 

thoothukudi admk

 

சட்டமன்றத் தேர்தல் இன்னதேதி என்றுதான் அறிவிக்கவில்லை! அதற்குள் எனக்குத் தான் பதவி வேண்டும், வேட்பாளர் சீட் வேண்டுமென அனைத்துக் கட்சிகளிலும் கலகக் குரல் ஒலிக்கத் தொடங்கியுள்ளது. அந்தவகையில், தற்பொழுது தூத்துக்குடியில் எழுந்துள்ள கலகக் குரல் அதிமுக தலைமையை மிரட்டியுள்ளது என்றே கூறலாம்.

 

அதிமுகவை பொறுத்தவரை தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்திலும் இல்லாத கோஷ்டி அரசியல் தூத்துக்குடி மாவட்டத்தில் உண்டு. ஆறு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்டத்தில், 15-க்கும் அதிகமான தலைமைகள் உண்டு. இதில், ஓபிஎஸ் விசுவாசியான ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. சண்முகநாதன், அமைச்சர் கடம்பூர் ராஜூ, முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், ஆவின் சேர்மன் சின்னதுரை மற்றும் தலைமைக் கழகப் பேச்சாளர் கருணாநிதி உள்ளிட்ட பல தலைமைகள் பிரசித்தம்.!

 

2019 மார்ச் மாதத்திற்குப் பிறகு, மா.செ-வாக இருந்த சி.த.செல்லப்பாண்டியனை கட்சியின் அமைப்புச் செயலாளராகப் பதவி உயர்த்தி (?!) ஓரங்கட்டி விட்டு, மாவட்டத்தை தெற்கு, வடக்கு என இரண்டாகப் பிரித்து, தூத்துக்குடி தெற்கு மாவட்டத்திற்கு (திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் மற்றும் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய) செயலாளராக ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. சண்முகநாதனையும், ஒட்டப்பிடாரம், கோவில்பட்டி மற்றும் விளாத்திக்குளம் உள்ளடக்கிய வடக்கு மாவட்டச் செயலாளராக அமைச்சர் கடம்பூர் ராஜூவையும் நியமித்தது தலைமை. இங்குதான் பிரச்சனையே ஆரம்பித்தது. சி.த.செல்லப்பாண்டியனை ஒதுக்கும் நோக்கில், கட்சியின் எவ்வித நிகழ்விற்கும் அழைக்கவில்லை இரண்டு மா.செ-க்களும்.

 

thoothukudi admk

 

இவ்வேளையில், கடந்த 20-12-2020 அன்று, தூத்துக்குடியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில், முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் முன்னிலையில், தூத்துக்குடி தெற்கு மா.செ-வும், ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ-வுமான சண்முகநாதன் தலைமையில் தேர்தல் முன்னேற்பாடாய், கழகச் செயல் வீரர்கள் கூட்டத்தை நடத்தினர். இதில் கலந்துகொள்ள சி.த.செல்லப்பாண்டியன், ஆவின் சேர்மன் சின்னதுரை உள்ளிட்டோருக்கு வழக்கம்போல் அழைப்பிதழ் அனுப்பவில்லை.

 

இதனால், கடுங்கோபமடைந்த சி.த.செல்லப்பாண்டியன் டீம், பொறுத்தது போதும்.! 'பொங்கி எழு மனோகரா!!' என்பதுபோல் தன்னுடைய ஆதரவாளர்களாகவுள்ள, அதிமுக நிர்வாகிகளின், அவசர (முக்கிய) ஆலோசனைக் கூட்டம், ஜனவரி 2-ல் தூத்துக்குடி தனியார் திருமண மண்டபத்தில், தன்னுடைய தலைமையில் நடைபெறுவதாக அறிவித்தார். அந்த ஆலோசனைக் கூட்டத்தினை எப்படிச் சிறப்பாக நடத்துவது என செவ்வாய்க்கிழமை (இன்று) மாலை வேளையில், தன்னுடைய சிதம்பரநகர் 4வது தெருவிலுள்ள அமைப்பு கழகச் செயலாளர் அலுவலகத்தில், கூட்டம் நடைபெறும் என அறிவித்தார் சி.த.செல்லப்பாண்டியன்.

 

thoothukudi admk

 

எதிர்பார்த்தது போலவே தன்னுடைய ஆதரவாளர்களைத் திரட்டி கூட்டத்தினை துவக்கினார் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன். மாநகரப் பகுதி செயலாளர் முருகன் எடுத்த எடுப்பிலேயே, "வடக்கிலுள்ள ஒட்டப்பிடாரத்தையும், தெற்கிலுள்ள தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதிகளையும் பிரித்து, இரண்டு தொகுதிகளையும் மத்திய மாவட்டமாக்கி, அதனுடைய மா.செ-வாக சி.த.செல்லப்பாண்டியனை நியமிக்க வேண்டும். இலையெனில்?" எனக் குரலெழுப்பி கூட்டத்திற்கான ரகசியத்தை அப்போதே உடைத்தார். கூட்டத்திலுள்ள அனைவரும் அதனை ரசித்தநிலையில் ஏனைய நிர்வாகிகளும் இதே கருத்தை வழிமொழிந்து வருகின்றனர்.

 

வெற்றி நடைபோடும் தமிழகத்திற்காக தூத்துக்குடி மாவட்டத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகைதரவுள்ள நிலையில், தூத்துக்குடியில் தலைமைக்கு எதிராகக் கலகக் குரல் எழும்பியுள்ளது அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.