Skip to main content

கோவில் உண்டியல் திருட்டு! வீடியோவில் சிக்கிய சிறுவனை இழுத்து வந்து ஒப்படைத்த தாய்!

Published on 23/12/2023 | Edited on 23/12/2023
The theft of the temple bill! The mother who dragged the boy caught in the video and handed him over! Resilience incident!

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் கடந்த 10 ந் தேதி இரவு கோயில் சுற்றுச்சுவர் ஏறிக் குதித்த சிலர் அம்பாள் கருவறையைப் பார்த்து தலைக்கு மேலே கைகளை தூக்கி வணங்கிவிட்டு கோயில் வளாகத்தில் இருந்த எவர்சில்வர் உண்டியலை தூக்கிச் சென்றனர். பின்னர் பூட்டை உடைத்து காசு, பணத்தை அள்ளி பைகளில் வைத்துக் கொண்டு மீண்டும் அதே இடத்தில் உண்டியலை தூக்கி வந்து வைத்துவிட்டனர். பின்னர் இரும்பு உண்டியலை உடைக்கும் போது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்துவிட கத்தியைக் காட்டி மிரட்டி விட்டு தயாராக நின்ற பைக்கில் ஏறித் தப்பிச் சென்றுவிட்டனர்.

இதுவரை அவர்கள் யார் என்பது தெரியமல் இருந்த நிலையில், அடுத்த சில நிமிடங்களில் அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்கள் அவர்களை காட்டிக் கொடுத்து விட்டது. முகத்தை மறைத்துக் கொண்டு சுவர் ஏறிக் குதித்து உள்ளே வந்த இருவரில் ஒருவர் கண்காணிப்பு கேமராவைப் பார்த்ததும் அதுவரை தனது சட்டையால் மறைத்திருந்த முகத்தை கேமராவுக்கு முன்பு காட்டி ஏளனமாக பழிப்புக் காட்டி விட்டு உண்டியலை தூக்கிச் செல்லும் காட்சியும், பிறகு கண்காணிப்பு கேமராவை உடைத்து தூக்கி வீசுவதும் துள்ளியமாக பதிவாகி இருந்தது.

அறந்தாங்கி, கீரமங்கலம், வடகாடு காவல் சரகங்களில் மட்டும் 10 க்கும் மேற்பட்ட உண்டியல் திருட்டுகள் நடந்தும் எங்கேயும் யாரையும் பிடிக்க முடியவில்லை. ஆனால் கீரமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் தான் கேமரா பதிவில் ஒருவர் முகம் தெளிவாக பதிவாகி இருந்ததால் இந்த முறை உண்டியல் திருடர்கள் சிக்குவார்கள் என்ற நம்பிக்கை போலீசாரிடமும் இருந்தது.

இந்த வீடியோ காட்சிகள் 11 ந் தேதி நக்கீரன் இணையம் முதல் பல செய்தி சேனல்களிலும் வெளியான நிலையில் பரபரப்பு ஏற்பட்டிருந்தது. இந்த வீடியோ காட்சிகள் வைரலாக பரவியது. வீடியோ வைரலான நிலையில் அறந்தாங்கி காவல் சரகத்திற்கு உட்பட்ட ஒரு கிராமத்தைச் சேர்ந்த 2 சிறுவர்கள் உட்பட ஒரு இளைஞர் மீது அப்பகுதி பொதுமக்களே சந்தேகப்பட்டு, சந்தேகப்பட்ட நபர்களின் இன்ஸ்டாகிராம் ஐடி யை திறந்து பார்த்த போது சந்தேகம் உறுதியானது. சம்மந்தப்பட்ட ஒரு சிறுவன் வீட்டிற்குச் சென்ற சில உள்ளூர் இளைஞர்கள், வீடியோவில் முகம் காட்டிய சிறுவனின் வீட்டிற்குச் சென்று சிறுவனின் தாயாரிடம் அந்த வீடியோ காட்சியை காட்டி உங்கள் மகன் முகம் தான் இது என்று சொல்லிவிட்டு வந்தனர்.

வீட்டிற்கு வந்த தன் மகனிடம் இதுபற்றி கேட்க யாரோ கிராபிக்ஸ்ல என் முகத்தை போட்டிருக்காங்க என்று சொல்லி தன் தாயை நம்பவைத்து சமாளித்தான். ஆனால் அடுத்தடுத்து பலர் வந்து சொல்லச் சொல்ல அவமானத்தின் உச்சத்திற்கே போன கணவனை இழந்த அந்த ஏழைத் தாய், தன் மகனை அழைத்து நீ திருடி இருக்க மாட்டாய். நம்புறேன். ஆனால் அந்தப் பசங்க கூட போய் தான் வீடியோவில் சிக்கி இருக்கிறாய். இப்ப இருட்டிருச்சு அதனால காலையில விடியும் போது நாம போலீஸ் ஸ்டேசன் போகணும். நல்லா தூங்கு என்று சொல்லி இரவு சோறு போட்டு சாப்பிட வைத்து தூங்க வைத்துவிட்டு இரவெல்லாம் கண் விழித்து தன் மகனை எப்போது விடியும் கண்கொத்தி பாம்பாக பார்த்துக்கொண்டிருந்தார். (அதற்குள் போலீசாரும் தேடத் தொடங்கி இருந்தனர்) பொழுது விடிந்தது தன் மகனை கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு அறந்தாங்கி காவல் நிலையத்திற்கு சென்ற தாய், கீரமங்கலத்தில் உண்டியல் திருடின வீடியோவில் என் மகன் படமும் இருக்குனு ஊர்காரங்க சொல்றாங்க. இவன் தான் அது. இவனை நல்லா விசாரிச்சு நடவடிக்கை எடுங்கய்யா. இவன் செஞ்ச வேலையால வெளிய தலைகாட்ட முடியல என்று சொல்லிவிட்டு கண்களைத் துடைத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்துள்ளார்.

The theft of the temple bill! The mother who dragged the boy caught in the video and handed him over! Resilience incident!

அதன் பிறகு நடந்த விசாரணையில்.. எங்க பக்கத்துவீட்டு முத்து 'வாங்கடா மது அருந்தலாம் என அழைச்சான். நானும், பள்ளிக்கூடம் படிக்கிற பையனும் போனோம். போற இடத்தில் மறமடக்கி ஆசைசவுந்தரும் சேர்ந்தான். மது அருந்தினோம். அப்புறம் தான் உண்டியல் தூக்கனும்னு சொல்லி எங்களை மிரட்டினாங்க. அப்ப போதையில தான் நான் முகம் காட்டி சிரிச்சுட்டேன். போதை தெளிஞ்சதும் தான் தப்பு பண்ணிட்டோம்னு நினைச்சேன். அதுக்குள்ள வீடியோவும் வெளியாகி எங்க அம்மாவை அழ வச்சுடுச்சு. அதனால தான் எங்கம்மா அழைச்சதும் வந்துட்டேன்' என்று சொல்லி முடிக்க அவன் சொன்ன ஆட்களில் ஆசைசவுந்தர் மட்டும் தலைமறைவாக மற்றவர்களை போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து கீரமங்கலம் காவல் நிலையத்தில் விசாரணை நடக்கும் போது வந்த சிறுவனின் சித்தி உள்ளிட்ட உறவினர்களும் அவனது தாயாரைப் போலவே, எங்க பையன் தெரிஞ்சோ தெரியாமலோ இந்த தப்பு பண்ணிட்டான். அவன் இனிமேல் இது போல பண்ணக்கூடாது. இதோட அவன் மட்டுமல்ல அவன் கூட்டாளிகளும் திருந்தனும். நல்ல புள்ளைகளா வாழனும். திருந்தலைன்னா எங்களுக்கு இந்த புள்ளையே வேண்டாம்ய்யா என்று கண்ணீர் மல்க கூறிச் சென்றனர். இதைப் பார்த்த போலீசார்களும் கலங்கிவிட்டனர். இவ்வளவு நல்லவர்களோட புள்ளைங்க இப்படி பண்றிங்களேடா என்று அறிவுரை கூறி அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைக்கும், சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கும் அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சில போலீசார் நம்மிடம் கூறும் போது.. உண்டியல் திருட்டில் முகம் காட்டிய சிறுவனின் தாயார், சித்தி போல ஒவ்வொரு தாயும் இருந்தால் எந்த பிள்ளையும் தப்பு பண்ணமாட்டாங்க. தன் பிள்ளை தப்பு பண்ணிட்டான்னு தெரிஞ்சதும் அவனை கையோட காவல் நிலையம் அழைத்துச் சென்று ஒப்படைத்த அந்த தாயை மறக்க முடியாது. அவன் திருந்திடுவான். திருந்தலைன்னா அவங்க அம்மாவே இவனை எதை வேனும்னாலும் செய்துடுவாங்க.

ஆனால் அதே நேரத்தில் இங்கே கஞ்சா, திருட்டு என பல சம்பவங்களில் இது போன்ற சிறுவர்கள், மாணவர்கள், இளைஞர்களை விசாரணைக்கு அழைத்து வரும் போது கூடவே வரும் சில தாய்மார்கள் என் பிள்ளை தவறு செய்திருக்க மாட்டான். அவனை விடுங்கன்னு விசாரணையே செய்ய விடாமல் செய்றவங்களும் உண்டு. அதேபோல இதே தவறு செய்யும் சிறுவர்கள், இளைஞர்களை காப்பாற்ற உள்ளூர் அரசியல்வாதிகளும் காவல் நிலையம் வந்து, தவறுக்கு வக்காலத்து வாங்கி பேசி அவர்களை மீட்டுச் செல்கிறார்கள். அல்லது உடனே நீதிமன்றம் போய் ஜாமீன் எடுக்கிறார்கள். இதனால் அந்த சிறுவர்கள், இளைஞர்களுக்கு நாம் எந்த தவறு செய்தாலும் நம்மை காப்பாற்ற ஆள் இருக்கு என்ற தைரியத்தில் அடுத்தடுத்து கஞ்சா விற்பனை, கஞ்சா கடத்தல், அதற்காக பைக் திருட்டு, தனியாக செல்லும் பெண்களிடம் செயின் பறிப்புனு சட்ட ஒழுங்கில் வளர்ந்து வருகிறார்கள். முதலில் இது போன்ற தவறுக்கு துணையாக அரசியல்வாதிகள் திருந்தினால் தவறு செய்வோரும் இனி நம்மை காப்பாற்ற ஆள் இல்லை என்று அவர்களும் திருந்துவார்கள்' என்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

“இப்படி ஆகும்னு நினைக்கல..”-உடைந்தே போனார் நிர்மலா தேவி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
"I didn't think it would happen like this.."- Nirmala Devi was devastated!

2018 ஏப்ரல் 5ஆம் தேதி முதன்முதலில் நிர்மலாதேவியைத் தொடர்புகொண்டு  ‘கல்லூரி மாணவிகளிடம் ஏன் இப்படி பேசினீர்கள்?’ என்று கேட்டபோது  “நான் மாணவிகளிடம் பேசிய ஆடியோ உங்க (நக்கீரன்) கைக்கு எப்படி வந்துச்சு? அந்த ஆடியோவைத் தந்தவர்கள் எதுவும் சொன்னார்களா? நான் ஏற்கெனவே போன்ல பேசி ஏதேதோ பிரச்சினைகள் ஆயிருச்சு. இது குறித்து போன்ல பேச வேண்டாமே.. நேரில் பேசலாமே!” என்று பதற்றத்துடன் பேசினார்.

அதன்பிறகு, செய்தி சம்பந்தமாக அவரிடமிருந்து விளக்கம் பெறுவதற்காக பல தடவை கைபேசி மூலம் பேசியிருக்கிறோம்.  சில நேரங்களில், நிர்மலாதேவி தனது சொந்த வருத்தங்களை நம்மிடம் பதிவு செய்திருக்கிறார். “உண்மையிலேயே நான் யார்? எப்படிப்பட்டவள்? என்னுடைய இன்னொரு பக்கம் பலருக்கும் தெரியாது.” என்று மனம் திறந்திருக்கிறார். அப்போது, தனக்கிருந்த சுற்றுச்சூழல் ஆர்வத்தையும்,  தாவரங்கள், மரங்கள்  குறித்த அக்கறையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

2024 ஏப்ரல் 29ஆம் தேதி குற்றவாளி எனத் தீர்ப்பு அறிவிப்பதற்கு முன், பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த நிர்மலாதேவியிடம் பேச்சுக் கொடுத்தோம். பழைய நினைவையும் பேச்சையும் அறவே மறந்திருந்த அவர், மிகவும் சன்னமான குரலில் “மாணவிகள்கிட்ட போன்ல பேசுனது இந்த அளவுக்கு சீரியஸா ஆகும்னு நான் நெனச்சே பார்க்கல. அந்தப் பேச்சுக்காக, இந்த நேரம் வரைக்கும் நான் கோர்ட்டுக்கு வந்துபோறது, ஜெயிலுக்குள்ள இருந்ததுன்னு எல்லாமே நடந்திருச்சு. இந்தச் சட்ட நடவடிக்கைகளை எல்லாம் அறியாதவளா அப்ப நான் இருந்திருக்கேன்.” என்று உடைந்துபோய் பேசியவரிடம்,  உடல்நலம் குறித்து விசாரித்தோம்.

“எனக்கு இருக்கிற உளவியல் பாதிப்பு முற்றிலுமா இன்னும் சரியாகல.” என்று சொன்னபோது  ‘நிர்மலாதேவி வகையறா..’ என்று நீதிமன்ற அரங்கத்திலிருந்து சத்தமாக அழைப்புவர, விறுவிறுவென்று உள்ளே சென்றுவிட்டார். இவ்வழக்கில் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிரிகளான உதவிப் பேராசிரியர் முருகனுக்கும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கும் விடுதலையை அறிவித்ததோடு,   நிர்மலாதேவி குற்றவாளி என்பதை ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன்றத்தின் நீதிபதி பகவதி அம்மாள்  உறுதி செய்துவிட்டு,  “கூண்டில்போய் நில்லுங்க..” என்று உத்தரவிட, நடை தளர்ந்து, சோகம் அப்பிய முகத்துடன் கூண்டில் ஏறி நின்றார் நிர்மலாதேவி. அப்போது ஒரு இளம் வழக்கறிஞர் “ஒருவர் என்ன படித்திருந்தால் என்ன? எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தால் என்ன? தெரிந்தே தவறிழைத்தால், சட்டத்தின் பார்வையில் அது குற்றமென்றால், தண்டனையிலிருந்து தப்பவே முடியாது.” என்று நம் காதில் விழும் அளவுக்கு கமெண்ட் அடித்தார். 

Next Story

கள்ளச்சாராய விற்பனை வீடியோ வெளியாகிப் பரபரப்பு; கேள்வியெழுப்பும் சமூக ஆர்வலர்கள்

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A video of the sale of counterfeit liquor has been released and there is a stir; Questioning Social Activists

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள மலைப்பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. அவ்வப்போது காவல்துறையினர் மலைப்பகுதிகளுக்கு சென்று கள்ளச்சாராயம் காய்ச்சப்படும் இடங்களைக் கண்டறிந்து கள்ளச் சாராய அடுப்புகள், சாராய ஊறல் மற்றும் மூலப்பொருட்களை அழித்து வருகின்றனர். இருப்பினும் அங்கு இடைவிடாமல் கள்ளச் சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது.

மலையில் இருந்து கொண்டு வரப்படும் கள்ளச்சாராய பாக்கெட்டுகளை வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான உதயேந்திரம், சி.விபட்டறை, மேட்டுப்பாளையம், கிரிசமுத்திரம்  தும்பேரி, தரைக்காடு, திம்மம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், வாணியம்பாடி நகரின் மையப்பகுதியான வாரச்சந்தை மைதானம், பேருந்து நிலையத்தின் பின்புறம், புதூர் ரயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு, பகலாக 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. இதேபோல் ஆம்பூர் அடுத்த உமராபாத் காவல் எல்லைக்குட்பட்ட மலைப்பகுதிகளில் ஆடு மேய்ப்பது போலும், விறகு எடுப்பவர்கள் போலும் ஆண் பெண் என இருபாலரும் கள்ளச்சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அரசு மதுபாட்டிலை விட கள்ளச்சாராயம் குறைந்த விலையில் கிடைப்பதால், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து குடிமகன்கள் கூட்டம் கூட்டமாக  ஏராளமானோர்,  இருசக்கர வாகனங்கள் மூலம்  கள்ளச்சாராய விற்பனை செய்யும் இடங்களுக்கு படையெடுக்கின்றனர். வாணியம்பாடி பாலாற்றில் திறந்த வெளியில்  பட்டப் பகலில்  கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் அதனை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக வாங்கி செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடியில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறை அலுவலகம்  இயங்கி வருகிறது. ஆனால்  வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 24 மணி நேரமும் நடக்கும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாதாமாதம் லட்சங்களில் மாமூல் வாங்கிக் கொண்டு எஸ்பி அலுவலகம் வரை பங்கு தந்துவருவதால் கள்ளச்சாராய விற்பனையைத் தடுப்பதில்லை. பெயருக்கு மாத கணக்கு காட்ட வேண்டும் என வழக்கு மட்டும் பதிவு செய்து அவர்களை முன் ஜாமீனில் வெளியே விடுகின்றனர். இதனால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை முற்றிலும் கள்ளச் சாராயத்திற்கு அடிமையாகி வரும் சூழல் தொடர்ந்து வருகிறது. இது குறித்து காவல் உயர் அதிகாரிகள்  தனிப்படை அமைத்து கள்ளச் சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.