Skip to main content

போலீஸ் இன்பார்மராக செயல்பட்ட த.மா.கா. நிர்வாகி ஓட ஓட வெட்டிக்கொலை! ஒகேனக்கல்லில் பயங்கரம்!!

Published on 29/11/2018 | Edited on 29/11/2018

ஒகேனக்கல்லில் போலீஸ் இன்பார்மராக செயல்பட்டு வந்த, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகியை மர்ம நபர்கள் ஓட ஓட துரத்திச்சென்று வெட்டி படுகொலை செய்தனர்.


தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே ஊட்டமலை நாடார் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேஷ் (52). இவர், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பென்னாகரம் வட்டாரத் தலைவராக இருந்து வந்தார். போலீசாருக்கு அடிக்கடி துப்பு கொடுக்கும் இன்பார்மராகவும் செயல்பட்டு  வந்தார்.

 

murder


இவருக்கு கோவிந்தம்மாள் என்ற மனைவியும், ரமேஷ்  என்ற மகனும் உள்ளனர். சொந்தமாக மீன் பண்ணையும் வைத்திருந்தார். இருசக்கர வாகனத்தில் சென்று பால் வியாபாரமும் செய்து வந்தார்.


இன்று (நவம்பர் 29, 2018) காலை 6.15 மணியளவில், பால் கேனை எடுத்துக்கொண்டு ஒகேனக்கல் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அந்தப் பகுதியில் உள்ள முதலைப்பண்ணை அருகே வந்து கொண்டிருந்தபோது, இரண்டு மோட்டார் சைக்கிள்களில் அரிவாள்களுடன் வந்த மர்ம நபர்கள் மூன்று பேர் அவரை வழிமறித்தனர்.

 


அதிர்ச்சி அடைந்த கணேஷ், தனது வாகனத்தை  அங்கேயே போட்டுவிட்டு தப்பி ஓடினார். அவரை விடாமல் துரத்திச்சென்ற மர்ம நபர்கள், கணேஷின் தலையில் சரமாரியாக வெட்டினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். பின்னர் மர்ம நபர்கள் அங்கிருந்து தாங்கள் வந்த வழியிலேயே மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றனர்.

 


இதுகுறித்து தகவல் அறிந்த பென்னாகரம் டிஎஸ்பி ராஜ்குமார், ஒகேனக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் முனியசாமி மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றி, உடல் கூறாய்வுக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


உடற்கூறாய்வில் கணேஷூக்கு தலை, தோள்பட்டை என ஆகிய இடங்களில் ஆறு வெட்டுக்களும், வலது உள்ளங்கை பகுதியில் ஒரு வெட்டும் விழுந்திருப்பது தெரிய வந்தது. உடற்கூறாய்வு முடிந்து, சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

 

murder

 

கொலையுண்ட நபர் அரசியல் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பென்னாகரம், தர்மபுரி அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்ற விவரங்கள் உடனடியாக தெரியவில்லை.


இது ஒருபுறம் இருக்க, கொலைக்கான காரணமாக சில தகவல்களை போலீசார் திரட்டியுள்ளனர்.


ஒகேனக்கல், பிலிகுண்டுலு, நாட்றாம்பாளையம் ஆகிய காவிரி கரையோரங்களில் மணல் அதிகமாக உள்ளது. இந்தப் பகுதிகளில் பெரும்பாலும் ஆள்கள் நடமாட்டம் இருக்காது.


இதைப்பயன்படுத்திக் கொள்ளும் சுற்றுவட்டார மக்கள் சட்ட விரோதமாக மணல் கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளனர். மோட்டார் சைக்கிள்களில் மூட்டைகளிலும், கழுதைகளில் பொதி மூட்டைகளாகவும் மணல் கடத்தி ஓரிடத்தில் சேகரிக்கும் கும்பல், அங்கிருந்து டிராக்டர், லாரிகளில் மணலை கடத்திச் செல்கின்றனர். 


கொலை செய்யப்பட்ட கணேஷ்¢, மணல் கடத்தும் கும்பல் குறித்து அடிக்கடி போலீசாருக்கு ரகசியமாக உளவு சொல்லி வந்துள்ளார். ஒருமுறை கணேஷின் மச்சான் உறவுமுறை கொண்ட ஒருவர் மணல் கடத்தலில் ஈடுபட்டது குறித்து கணேஷ் அளித்த தகவலின்பேரில் போலீசார் அந்த நபரின் வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர். 

 


அதிலிருந்தே கணேஷூக்கும் அவருடைய உறவினருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. கடந்த நான்கு மாதங்களாகவே அந்த நபர் கணேஷிடம், அடிக்கடி வாய்த்தகராறில் ஈடுபட்டு வந்துள்ளதும் தெரிய வந்துள்ளது. 


கொலை நடந்த பிறகு, அந்த நபரும் வீட்டில் இருந்து தலைமறைவாகிவிட்டார். இதனால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்துள்ளது. கணேஷை வெட்டிக் கொன்ற மர்ம நபர்கள் கூலிப்படை கும்பலா? அல்லது உள்ளூர் ரவுடிகளா? என்பது குறித்தும் பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விபத்தில் சிக்கி உயிரிழந்த காவலரின் கண்கள் தானம்!

Published on 30/04/2024 | Edited on 30/04/2024
Eye donation of a policeman who passed away in a two-wheeler accident

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை, இவர் வாணியம்பாடி கிராமிய காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி 1 வயதில் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கடந்த 28  ஆம் தேதி இரவு அண்ணாமலை தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் நாட்றம்பள்ளி நோக்கிச்சென்று கொண்டிருந்த போது, கல்லாறு என்ற பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், சாலையோர  தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற காவலர் அண்ணாமலையும் மற்றும் அவரது நண்பரும் படுகாயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

சிகிச்சை பலனளிக்காமல் அண்ணாமலை 29 ஆம் தேதி மாலை பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து காவலர் அண்ணாமலையின் கண்களை அவரது குடும்பத்தினர் தானமாக வழங்கினர்.

Next Story

“இப்படி ஆகும்னு நினைக்கல..”-உடைந்தே போனார் நிர்மலா தேவி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
"I didn't think it would happen like this.."- Nirmala Devi was devastated!

2018 ஏப்ரல் 5ஆம் தேதி முதன்முதலில் நிர்மலாதேவியைத் தொடர்புகொண்டு  ‘கல்லூரி மாணவிகளிடம் ஏன் இப்படி பேசினீர்கள்?’ என்று கேட்டபோது  “நான் மாணவிகளிடம் பேசிய ஆடியோ உங்க (நக்கீரன்) கைக்கு எப்படி வந்துச்சு? அந்த ஆடியோவைத் தந்தவர்கள் எதுவும் சொன்னார்களா? நான் ஏற்கெனவே போன்ல பேசி ஏதேதோ பிரச்சினைகள் ஆயிருச்சு. இது குறித்து போன்ல பேச வேண்டாமே.. நேரில் பேசலாமே!” என்று பதற்றத்துடன் பேசினார்.

அதன்பிறகு, செய்தி சம்பந்தமாக அவரிடமிருந்து விளக்கம் பெறுவதற்காக பல தடவை கைபேசி மூலம் பேசியிருக்கிறோம்.  சில நேரங்களில், நிர்மலாதேவி தனது சொந்த வருத்தங்களை நம்மிடம் பதிவு செய்திருக்கிறார். “உண்மையிலேயே நான் யார்? எப்படிப்பட்டவள்? என்னுடைய இன்னொரு பக்கம் பலருக்கும் தெரியாது.” என்று மனம் திறந்திருக்கிறார். அப்போது, தனக்கிருந்த சுற்றுச்சூழல் ஆர்வத்தையும்,  தாவரங்கள், மரங்கள்  குறித்த அக்கறையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

2024 ஏப்ரல் 29ஆம் தேதி குற்றவாளி எனத் தீர்ப்பு அறிவிப்பதற்கு முன், பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த நிர்மலாதேவியிடம் பேச்சுக் கொடுத்தோம். பழைய நினைவையும் பேச்சையும் அறவே மறந்திருந்த அவர், மிகவும் சன்னமான குரலில் “மாணவிகள்கிட்ட போன்ல பேசுனது இந்த அளவுக்கு சீரியஸா ஆகும்னு நான் நெனச்சே பார்க்கல. அந்தப் பேச்சுக்காக, இந்த நேரம் வரைக்கும் நான் கோர்ட்டுக்கு வந்துபோறது, ஜெயிலுக்குள்ள இருந்ததுன்னு எல்லாமே நடந்திருச்சு. இந்தச் சட்ட நடவடிக்கைகளை எல்லாம் அறியாதவளா அப்ப நான் இருந்திருக்கேன்.” என்று உடைந்துபோய் பேசியவரிடம்,  உடல்நலம் குறித்து விசாரித்தோம்.

“எனக்கு இருக்கிற உளவியல் பாதிப்பு முற்றிலுமா இன்னும் சரியாகல.” என்று சொன்னபோது  ‘நிர்மலாதேவி வகையறா..’ என்று நீதிமன்ற அரங்கத்திலிருந்து சத்தமாக அழைப்புவர, விறுவிறுவென்று உள்ளே சென்றுவிட்டார். இவ்வழக்கில் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிரிகளான உதவிப் பேராசிரியர் முருகனுக்கும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கும் விடுதலையை அறிவித்ததோடு,   நிர்மலாதேவி குற்றவாளி என்பதை ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன்றத்தின் நீதிபதி பகவதி அம்மாள்  உறுதி செய்துவிட்டு,  “கூண்டில்போய் நில்லுங்க..” என்று உத்தரவிட, நடை தளர்ந்து, சோகம் அப்பிய முகத்துடன் கூண்டில் ஏறி நின்றார் நிர்மலாதேவி. அப்போது ஒரு இளம் வழக்கறிஞர் “ஒருவர் என்ன படித்திருந்தால் என்ன? எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தால் என்ன? தெரிந்தே தவறிழைத்தால், சட்டத்தின் பார்வையில் அது குற்றமென்றால், தண்டனையிலிருந்து தப்பவே முடியாது.” என்று நம் காதில் விழும் அளவுக்கு கமெண்ட் அடித்தார்.