Skip to main content

“மணிப்பூர் மட்டுமில்ல தென்காசில நடக்குறதையும் பேசுங்க..” - மகளிரணிக் கூட்டத்தில் பரபரப்பு

Published on 26/07/2023 | Edited on 26/07/2023

 

Tenkasi women wing meeting stirs up

 

தென்காசி மாவட்டப் பஞ்சாயத்தில் மொத்தம் 14 வார்டுகள் உள்ளன. அதில் 10 வார்டுகளில் திமுகவும், 3 வார்டுகளில் காங்கிரஸும், ஒரு வார்டில் ம.தி.மு.க-வும் வெற்றி பெற்றிருந்தன. இந்நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த மாவட்டப் பஞ்சாயத்துத் தலைவர் தேர்தலில் தி.மு.க சார்பாக தமிழ்ச்செல்வியும், போட்டி வேட்பாளராகக் கனிமொழியும் களமிறங்கினர். தமிழ்ச்செல்விக்கு 8 பேர் ஆதரவு தெரிவித்தனர். கனிமொழிக்கு 5 பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்தனர்.

 

இதனால் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவைப் பெற்ற தமிழ்ச்செல்வி, தலைவராக வெற்றி பெற்றார். அன்றைய நாளில் இருந்து தற்போது வரை பஞ்சாயத்துத் தலைவர் தமிழ்ச்செல்விக்கும் 6 ஆவது வார்டு கவுன்சிலரான கனிமொழிக்கும் இடையே அடிக்கடி முட்டல், மோதல்கள் நீடித்து வருகிறது. அதே நேரம், தலைவர் பொறுப்பில் இருக்கும் தமிழ்ச்செல்வி தென்காசி தெற்கு மாவட்டச் செயலாளர் சிவபத்மநாபனின் சிபாரிசின் பேரில் பதவிக்கு வந்தவர் எனக் கூறப்படுகிறது.

 

ஆரம்பத்தில் சிவபத்மநாபனின் ஆதரவாளராக இருந்த தமிழ்ச்செல்வி, நாட்கள் செல்லச் செல்ல பஞ்சாயத்து நிர்வாகம் தொடர்பான விவகாரத்தில் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து, தனது ரூட்டை மாற்றிய தமிழ்ச்செல்வி, தென்காசி தி.மு.க. வடக்கு மாவட்டச் செயலாளரும் சங்கரன்கோவில் எம்.எல்.ஏ.வுமான ராஜா, மற்றும் முன்னாள் வடக்கு மாவட்டச் செயலாளரான கடையநல்லூர் செல்லத்துரை ஆகியோருடன் கைகோர்த்தார்.

 

அதன்பிறகு, இவர்களுடைய முழு ஆதரவும் தமிழ்ச்செல்வி பக்கம் திரும்பியது. இதையடுத்து, தென்காசி மாவட்டப் பஞ்சாயத்துக் கவுன்சிலர்கள் 14 பேர்களில், 12 கவுன்சிலர்களின் ஆதரவு தலைவி தமிழ்ச்செல்வி பக்கம் திரும்பியிருக்கிறது. இதனால் தென்காசி திமுகவினர் இரு கோஷ்டிகளாகப் பிரிந்து இருந்ததாகக் கூறப்படுகிறது. இத்தகைய சூழலில், மணிப்பூரில் பெண்களுக்கு ஏற்பட்ட வன்கொடுமை மற்றும் பாலியல் சித்ரவதைகளைக் கண்டித்து இந்தியா முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அதில், திமுகவும் கைகோர்த்து அனைத்து மாவட்டங்களிலும் போராட்டங்களை நடத்தி வருகிறது.

 

இந்நிலையில், தென்காசியில் உள்ள திமுக மகளிரணி சார்பில், மணிப்பூர் வன்முறையைக் கண்டித்து கண்டனக் கூட்டம் நடைபெற்றது. அதில் மகளிரணியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்துகொண்டிருந்த இந்தக் கூட்டத்தில், தெற்கு மாவட்டச் செயலாளர் சிவபத்மநாபனும் மாவட்டப் பஞ்சாயத்துத் தலைவர் தமிழ்ச்செல்வியும் பங்கேற்றிருந்தனர். இதற்கிடையில், கூட்டத்திற்குத் தலைமை வகித்த சிவபத்மநாபன் மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைகள் குறித்துப் பேசியிருந்தார். அப்போது, அவர் பேசி முடித்த பிறகு திடீரென மைக்கை வாங்கிய தமிழ்ச்செல்வி, “மணிப்பூர்ல பெண்களுக்கு ஏற்பட்ட கொடுமைகளைக் கண்டிச்சு நீங்க பேசுனீங்க. ஆனா தென்காசி மன்ற தி.மு.க.வுல பெண்களுக்குப் பாதுகாப்பில்லையே. அத பத்தி பேசுனீங்களா?" எனப் பகீர் கிளப்பினார். அப்போது, அவரைக் கண்டித்த சிவபத்மநாபன், "யம்மா இப்ப நடக்குறத பத்தி மட்டும் பேசுங்க. எந்த எடத்தல எத பேசணும்னு உங்களுக்கு தெரியாதா?. இந்த எடத்துல சம்பந்தமில்லாத விஷயத்த பேசாதீங்க. சம்பந்தம் இருக்குறத மட்டும் பேசுங்க” எனக் கோபமாகச் சொல்லிட்டு அங்கிருந்து கிளம்பினார்.

 

அந்த நேரத்தில், பஞ்சாயத்துத் தலைவி தமிழ்ச்செல்வியின் பேச்சால் கூட்டத்தில் சலசலப்பும், பதில் பேச்சுகளும் கிளம்பின. இதனால் கூட்டத்தில் இருந்த திமுகவினருக்கும், தமிழ்ச்செல்விக்கும் கடுமையான வாக்குவாதம் நடைபெற்றது. இத்தகைய சூழலில், நிலைமையைப் புரிந்துகொண்ட போலீசார், தலைவி தமிழ்ச்செல்வியைப் பத்திரமாக அவரது காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். அதே சமயம், தென்காசி மகளிரணிக் கண்டனக் கூட்டத்தில் ஏற்பட்ட இந்தக் கோஷ்டி மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்குப்பதிவு முடிந்ததும் தொடங்கிய வன்முறை; மணிப்பூரில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் பலி!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Incident at CRPF soldiers in Manipur

கடந்த 2023 ஆம் ஆண்டு மணிப்பூரில் மெய்தி - குக்கி சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல், ஆளும் பாஜக அரசின் அலட்சியத்தால் கலவரமாக மாறியது. மெய்தி மக்களை, பழங்குடிப் பட்டியலில் சேர்க்கும் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்ப ஆளும் பாஜக அரசுக்கு மணிப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அதனை எதிர்த்து குக்கி பழங்குடியின மக்கள் நடத்திய அமைதிப் பேரணியில் வன்முறை வெடிக்க, மாநிலமே கலவர பூமியாக மாறியது. வன்முறைக்கு இடையில் குக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி, இந்திய நாட்டையே உலுக்கியது. இந்தச் சம்பவம் நடைபெற்று ஒரு ஆண்டு ஆகியும், இன்றுவரை மணிப்பூரில் கலவரம் ஓய்ந்தபாடில்லை.  

இந்த நிலையில், மணிப்பூர் மாநிலத்துக்கு மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழ்நாடு உட்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. நாடு முழுவதும் 2வது கட்டத் தேர்தல் நேற்று அமைதியாக நடந்து முடிந்தது. இந்நிலையில், மணிப்பூர் மாநிலத்தில் குக்கி இனக்குழு நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையினர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 

மணிப்பூரின் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் நரண்சேனா பகுதியில் பாதுகாப்பு படையினர் (சி.ஆர்.பி.எப்) வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, குக்கி இனக்குழு நள்ளிரவு 12 மணிக்கு மேல் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில், 2 பாதுகாப்பு படை வீரர்கள் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த மேலும் 2 பாதுகாப்பு படை வீரர்களை, அங்கிருந்த மற்ற வீரர்கள் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வாக்குப்பதிவு முடிந்த சில மணி நேரத்திலேயே நடத்தப்பட்ட தாக்குதலில் 2 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. 

Next Story

மக்களவைத் தேர்தல்; 2ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Lok Sabha elections 2nd Phase voting has started

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இதனையடுத்து நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதாவது கர்நாடகா, ராஜஸ்தான், அசாம், பீகார், கேரளா மற்றும் மணிப்பூர் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் இன்று 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. 2ஆம் கட்ட தேர்தலில் சுமார் 15.88 கோடி பொதுமக்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக பொதுமக்கள் காலை முதல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

அதன்படி சத்தீஸ்கர் மாநிலத்தில் 3 நாடாளுமன்றத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள உள்ள 42 தொகுதிகளில் 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார் மாநிலங்களில் தலா 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. கேரளாவில் உள்ள 20 தொகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. அதே போன்று மகாராஷ்டிராவில் 8 தொகுதிகளுக்கும், மத்திய பிரதேசத்தில் 6 தொகுதிகளுக்கும், ஜம்மு - காஷ்மீரில் ஒரு தொகுதிக்கும் என வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள பெங்களூரு தெற்கு, ஹாசன், தட்சிண கன்னடா, மைசூரு, மாண்டியா உள்ளிட்ட 14 தொகுதிகளில் இன்று மாலை வரை 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.