Skip to main content

மஞ்சள் பையுடன் தற்காலிக நடத்துநர்! - வீடியோ வெளியாகி பரபரப்பு

Published on 10/01/2024 | Edited on 10/01/2024
The temporary conductor The video was released and created a stir

போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வேலை நிறுத்தம் செய்ய இருப்பதாகக் கடந்த டிசம்பர் மாதம் நோட்டீஸ் வழங்கி இருந்தனர். மேலும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் அரசு சார்பில் இன்னும் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தவில்லை. காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டம், 15வது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இருந்தனர்.

இதற்கான முத்தரப்பு பேச்சுவார்த்தை கடந்த டிசம்பர் 27 ஆம் தேதியும், ஜனவரி 3 ஆம் தேதியும் நடைபெற்றது. இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் எட்டப்படவில்லை. மேலும் தொழிலாளர்களின் கோரிக்கை தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத காரணத்தால் போராட்ட அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதன்படி ஜனவரி 9 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகப் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன. இதனைத் தொடர்ந்து சென்னை பல்லவன் இல்லத்தில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் தொழிற்சங்க பிரதிநிதிகள் உடனான பேச்சுவார்த்தை கூட்டம் கடந்த 5 ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சுமுகமான முடிவுகள் எட்டப்படாததால் பேச்சுவார்த்தை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், திட்டமிட்டபடி போக்குவரத்து ஊழியர்கள் நேற்று (9ம் தேதி) முதல் வேலை நிறுத்தத்தை துவங்கினர். ஆனால், தொ.மு.ச. உள்ளிட்ட சில தொழிற்சங்கங்களின் ஊழியர்கள் பங்கேற்காததால், அவர்களை வைத்து தமிழ்நாடு முழுக்க பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் மட்டும் அனைத்து பேருந்துகளும் இயங்க, தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களில் குறிப்பிட்ட அளவிலேயே பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால், பொதுமக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருச்சியில், நேற்று தற்காலிக பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் ஆகியோருக்கான ஆய்வு நடத்தப்பட்டது. இதில், ஓட்டுநர்கள் முறையான ஓட்டுநர் உரிமத்தை வைத்துள்ளனரா, நடத்துநர்கள் முன்னதாக பணியில் இருந்து பயிற்சி பெற்றுள்ளனரா உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று திருச்சியில் சில வழித்தடங்களில் தற்காலிக பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களைக் கொண்டு மாநகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. 

அதன்படி, திருச்சி மாவட்டம், இனாம்குளத்தூர் நகரப் பேருந்தில் தற்காலிக நடத்துநர் ஒருவர் கையில் மஞ்சள் பையை வைத்துக்கொண்டு பயணிகளுக்கு பயணச் சீட்டு வழங்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்