Skip to main content

கோவில் நிலங்களில் ஏழைகளுக்கு வீட்டுமனைப் பட்டா! -தடையை நீக்கக்கோரிய வழக்கில் உத்தரவு!

Published on 02/03/2020 | Edited on 02/03/2020

கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்க வகை செய்யும் அரசாணையின் படி 0.1 சதவீத கோவில் நிலங்கள் மட்டுமே பயன்படுத்தப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

 

Temple land - Tamilnadu Government - Highcourt

 



அரசு புறம்போக்கு மற்றும் கோவில்  நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசித்தவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என கடந்த ஆண்டு ஆகஸ்ட் 30-ம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. சட்டவிரோதமாக நிலங்களை ஆக்கிரமிப்பவர்களுக்கு உதவும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி ராதாகிருஷ்ணன், சத்தியநாராயணன் ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கும் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்திருந்தது.

இந்நிலையில்,  இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது  அரசு தரப்பில், தமிழகம் முழுவதும்  உள்ள 4 லட்சத்து 78 ஆயிரம் ஏக்கர் கோவில் நிலங்களில், 600 ஏக்கர் நிலங்களை மட்டுமே பயன்படுத்த இருப்பதாகவும்,  ஏழைகளுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்குவதற்காகவே இந்த  அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், நிலத்திற்கான பணத்தை கோவிலுக்கு அரசு கொடுத்துவிடும் என்றும் 19 ஆயிரம் குடும்பங்கள் பயன்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.  இத்திட்டத்திற்காக 0.1 சதவீதம் கோவில் நிலம் மட்டுமே பயன்படுத்தப்படும் என்பதால் அரசாணைக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை  நீக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து தமிழக அரசின் பதில் மனுவுக்கு பதிலளிக்க மனுதாரர்களுக்கு உத்தரவிட்டு வழக்கை மார்ச்16- ம் தேதிக்கு  தள்ளி வைத்தனர். 

 

சார்ந்த செய்திகள்