அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நீலகிரி, திருப்பத்தூர், சேலம், கோவை, தேனி, வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, திண்டுக்கல் ஆகிய 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, தேனி, கோவை ஆகிய மூன்று மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் வால்பாறையில் 11 செ.மீ.,சின்னகல்லாரில் 9 செ.மீ., சோலையார் மற்றும் நடுவட்டத்தில் தலா 8 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காக்கிநாடா அருகே கரையைக் கடந்தது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திர கடலோரத்தில் நிலைக்கொண்டுள்ளது.
குமரிக்கடல், மன்னார்வளைகுடா, கேரள, கர்நாடக கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது. பலத்த காற்று வீச வாய்ப்புள்ள பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். இவ்வாறு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.