தமிழக காவல்துறையின் சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன் இன்று மாலையுடன் ஓய்வு பெறுகிறார். எனவே தமிழகத்தின் காவல்துறையின் புதிய தலைவராக தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி புதிய டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு நேற்று பிறப்பித்தது. புதிய டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி இன்று மாலை 03.15 மணி அளவில் டி.ஜி.பி. அலுவலகத்தில் பதவி ஏற்றுக்கொள்கிறார். அவரிடம் பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு டி.கே.ராஜேந்திரன் விடை பெறுகிறார்.
டி.கே.ராஜேந்திரனுக்கு இன்று மாலை 04.00 மணி அளவில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் வழியனுப்பு விழாவும், போலீஸ் அணிவகுப்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. அந்த நிகழ்ச்சியில் உயர் போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துக்கொள்கிறார்கள். அவரை தொடர்ந்து தமிழகத்தின் 46-வது புதிய தலைமைச் செயலாளராக கே.சண்முகம் நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் நாளை காலை தலைமைச் செயலாளராக பதவி ஏற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.