Skip to main content

பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும்! ஆக. 27ல் மறியல் போராட்டம் நடத்தவும் முடிவு!!

Published on 04/08/2019 | Edited on 04/08/2019

தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை பசும்பாலுக்கு லிட்டருக்கு 40 ரூபாயாகவும், எருமைப்பாலுக்கு லிட்டருக்கு 50 ரூபாயாகவும் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தர்மபுரியில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 4) நடந்தது. மாநிலத்தலைவர் முனுசாமி தலைமை வகித்தார். கூட்டத்திற்குப் பிறகு சங்கத்தின் பொதுச்செயலாளர் முகமது அலி கூறியதாவது:


ஆவின் நிர்வாகம் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக பால் கொள்முதல் விலையை உயர்த்த மறுத்து வருகிறது. தற்போது தமிழகத்தில் 15 லட்சம் குடும்பத்தினர் கறவை மாடுகளை பராமரித்து வருகின்றனர். நாளொன்றுக்கு 1.50 கோடி லிட்டர் பால் உற்பத்தி ஆகின்றது. இதில் 32 லட்சம் லிட்டர் பாலை ஆவின் கொள்முதல் செய்கிறது. கால்நடைகளுக்கான தீவனங்களின் விலை 50 கிலோ கொண்ட ஒரு மூட்டை 700 ரூபாயில் இருந்து 1200 ரூபாயாக உயர்ந்துள்ளது. வைக்கோல், சோளத்தட்டை, தவிடு, புண்ணாக்கு உள்ளிட்ட அனைத்து வகை தீவனங்களின் விலைகளும் உயர்ந்துள்ளன. அவற்றுக்கு தட்டுப்பாடும் உள்ளது.

 

tamilnadu milk association

 

நெல், கரும்பு, கோதுமை ஆகிய விளை பொருள்களுக்கு ஆண்டுதோறும் கொள்முதல் விலையை மத்திய, மாநில அரசுகள் உயர்த்தி வரும்போது, பால் கொள்முதல் விலையை மட்டும் உயர்த்தாமல் இருப்பது முரணாக இருக்கிறது. அதிமுக அரசு, பால் உற்பத்தியாளர்களை குறுகிய அரசியல் நோக்கோடு பார்ப்பது அவர்களுக்கு செய்யும் துரோகம் ஆகும். இனியும் காலதாமதம் செய்யாமல் பசும்பாலுக்கு லிட்டருக்கு 40 ரூபாயாகவும், எருமைப்பாலுக்கு லிட்டருக்கு 50 ரூபாயாகவும் கொள்முதல் விலையை தமிழக அரசு உயர்த்தி வழங்க வேண்டும். 


பால் உற்பத்தியாளர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக 200 கோடி ரூபாய் வரை பால் பணம் வழங்காமல் ஆவின் நிர்வாகம் இழுத்தடித்து வருகிறது. அத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும். அதேபோல் ஆவின் நிர்வாகம் தினமும் 50 லட்சம் லிட்டர் வரை கொள்முதல் செய்ய வேண்டும். சத்துணவு திட்டத்தில் பாலையும் இலவசமாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம் தினமும் பத்து லட்சம் லிட்டர் பால் கூடுதலாக கொள்முதல் செய்ய முடியும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 27ம் தேதி, அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பும் பால் உற்பத்தியாளர்கள் சார்பில் மறியல் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு முகமது அலி கூறினார்.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

“பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல; தீராத வன்மம்” - சு.வெங்கடேசன்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
BJP unending anger towards Tamil Nadu says Su. Venkatesan

திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு  நிதி வழங்காமல் இருந்தது. இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே சமயம் கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் பாஜக தமிழகத்திற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல, வறட்சி நிவாரணம் என ரூ.3454 கோடி அறிவிப்பு. தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு ரூ.275 கோடி மட்டுமே. தமிழ்நாடு  கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம்” எனக் கடுமையாக சாடியுள்ளார்.