Skip to main content

"தமிழகத்தின் பெண்ணுரிமை, சமூகநீதி, சுயமரியாதை வரலாற்றை இந்தியாவெங்கும்...."- ஜோதிமணி எம்.பி.!

Published on 18/03/2022 | Edited on 18/03/2022

 

tamilnadu budget 2021- 2022 congress leader jothimani tweets

 

2022- 2023 ஆம் ஆண்டுக்கான காகிதமில்லா பட்ஜெட்டை இன்று (18/03/2022) காலை 10.00 மணிக்கு தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றினார் நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். இதில், சமூக ஊடகங்களில் தவறான பிரச்சாரத்தைத் தடுக்க சமூக ஊடக சிறப்பு மையம் அமைக்கப்படும். இளைஞர்கள் வேலை வாய்ப்பு திறனைப் பெறும் வகையில் செயல்படுத்தப்படும் நான் முதல்வன் திட்டத்திற்கு ரூபாய் 50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

 

வணிக வழக்குகளை விரைந்து விசாரிக்க ஏழு வணிக நீதிமன்றங்கள் அமைக்க பட்ஜெட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பல்வேறு அறிவிப்புகள் பட்ஜெட்டில் வெளியான நிலையில், மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கான ரூபாய் 1,000, மாணவ, மாணவியர்களுக்கான கல்வி கடன் தள்ளுபடி உள்ளிட்ட அறிவிப்புகள் இடம் பெறாததால் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். 

 

இன்று தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட் குறித்து அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்றன. அந்த வகையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் தொகுதியின் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "கல்வி குறிப்பாக பெண் கல்வி, பொது மருத்துவம், பெண்கள் முன்னேற்றம், வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி, சுற்றுச்சூழல், சமூகநீதி, சமூக நல்லிணக்கம் உள்ளிட்ட மிக முக்கிய அம்சங்களில் தமிழக நிதிநிலை அறிக்கை தீவிர கவனம் செலுத்தியிருப்பது பாராட்டுக்குரியது. 

 

அரசுப் பள்ளிகளில் 6 - 12 ஆம் வகுப்பு வரை படித்து உயர் கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூபாய் 1,000 வங்கி கணக்கில் வழங்கப்படும். சமூக வலைதள பொய் பரப்புரைகளை தடுக்க காவல்துறையில் சமூக ஊடக சிறப்பு போன்ற முக்கியமான அறிவிப்புகள் மகிழ்ச்சியளிக்கிறது. பெரியாரின் சிந்தனைத் தொகுப்பு, 21 இந்திய மற்றும் உலக மொழிகளில் ரூபாய் 5 கோடி செலவில் அச்சு மற்றும் மின்னூல் பதிப்புகளாக வெளியிடப்படும் என்கிற அறிவிப்பு தமிழகத்தின் பெண்ணுரிமை, சமூகநீதி, சுயமரியாதை வரலாற்றை இந்தியாவெங்கும் எடுத்துச்செல்லும் சிறப்பான முயற்சி. பாராட்டுகள்!

 

தமிழக அரசு சமூகநீதி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமூக நல்லிணக்கப் பாதையில் உறுதியோடு பயணிக்கும் என்று இந்த நிதிநிலை அறிக்கை இன்னொரு முறை உரக்கச் சொல்லியிருக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கும் மனமார்ந்த பாராட்டுகளும், நன்றியும்!" என்று குறிப்பிட்டுள்ளார். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லி காங்கிரஸ் தலைவர் ராஜினாமா!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Delhi Congress president resigns

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிவடைந்துள்ளது.

இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அதே சமயம் இந்தியா கூட்டணி சார்பில் டெல்லியில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் இணைந்து போட்டியிடுகின்றன. இந்நிலையில் ஆம் ஆத்மி உடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து அரவிந்தர் சிங் லவ்லி ராஜினாமா செய்தார்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அரவிந்தர் சிங் லவ்லி எழுதியுள்ள கடிதத்தில், “காங்கிரஸ் கட்சியின் மீது பொய்யான, இட்டுக்கட்டப்பட்ட மற்றும் தவறான ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துவதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைப்பது, கட்சியின் கொள்கைக்கு எதிரானது. மேலும் இதனைப் பொருட்படுத்தாமல் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி முடிவெடுத்துள்ளது. எனவே தனது பதவியை ராஜினாமா செய்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.