Skip to main content

ஓபிஎஸ்சுக்கு சம்மன்!

Published on 08/03/2022 | Edited on 08/03/2022

 

Summons to OPS!

 

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று (07/03/2022) மீண்டும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையைத் தொடங்கியது. சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் அப்பல்லோ மருத்துவர்கள் நேற்று  குறுக்கு விசாரணைக்கு ஆஜராகினர். அப்பல்லோ மருத்துவர்களிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜாசெந்தூர பாண்டியன் குறுக்கு விசாரணை செய்தார்.

 

விசாரணையில் மருத்துவர்கள் பரிந்துரைத்தும் ஜெயலலிதா ஓய்வெடுக்க மறுத்ததாக அப்பல்லோ மருத்துவர் பாபு மனோகர் தெரிவித்திருந்தார். 2016 ஆம் ஆண்டு பதவியேற்பதற்கு முன்பே அவருக்கு தலைச்சுற்றல், மயக்கம் இருந்ததாகவும், சில மருந்துகளை பரிந்துரைத்ததோடு, உடற்பயிற்சிக்கும் பரிந்துரைத்ததாக மருத்துவர் பாபு மனோகர் தெரிவித்திருந்தார்.

 

இன்று இரண்டாவது நாளாக விசாரணை நடைபெற்றது. இன்று அப்போலோ மருத்துவர்கள் மதன்குமார், ரவிச்சந்திரன், மீனாட்சிசுந்தரம் ஆகியோர் ஆஜராகினர். மதன்குமாரிடம் நடைபெற்ற விசாரணையில் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜாசெந்தூர பாண்டியன் குறுக்கு விசாரணை செய்தார். அதில், ஜெயலலிதாவுக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம்  தேதி மாலை ஏற்பட்டது மாரடைப்புதான். மாரடைப்பு ஏற்பட்டதும் ஜெயலலிதாவை காப்பாற்ற தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டோம் என மதன்குமார் தெரிவித்துள்ளார்.

 

விசாரணை ஆணையம் தொடங்கியதிலிருந்து ஓபிஎஸ் எப்பொழுது விசாரணைக்கு அழைக்கப்படுவார், ஆஜராவார் என்ற கேள்வி இருந்தது. இந்நிலையில் மார்ச் 15க்கு பிறகு ஓபிஎஸ்-சிடம் விசாரணை நடத்த வாய்ப்புள்ளதாக  வழக்கறிஞர் ராஜாசெந்தூர பாண்டியன் தெரிவித்திருந்த நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்  வரும் மார்ச் 21 ஆம் தேதி ஆணையத்தில் ஆஜராகும்படி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. அதேபோல் சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசியும் மார்ச் 21 ஆம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்