Skip to main content

தமிழி எழுத்தைப் பார்த்து வியந்த மாணவர்கள்‌!

Published on 13/10/2023 | Edited on 13/10/2023

 

Students visiting the excavation site at keezhadi

 

சிவகங்கை மாவட்ட சுற்றுலாத்துறையால் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் சுற்றுலாத்துறை நாள்  கொண்டாடப்பட்டது. சுற்றுலாத் துறை நாளைக் கொண்டாடும் விதமாக ஆதிதிராவிட அரசு நலப்பள்ளி அதிகரம் மற்றும் மல்லல் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஒருநாள் சுற்றுலாவாக திருமலை மற்றும் கீழடி அகழ்வாராய்ச்சித் தளம் மற்றும் அருங்காட்சியகம் ஆகிய இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

 

இந்நிகழ்வை மாவட்ட ஆட்சியர் திருமதி ஆஷா அஜித் இ.ஆ.ப அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தார். முதலில் சிவகங்கை நகரில் அமைந்துள்ள அரசு அருங்காட்சியகத்தை மாணவர்கள் பார்த்து மகிழ்ந்தனர், அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் தி.பக்கிரிசாமி முன்னின்று மாணவர்களுக்கு அருங்காட்சியக நடைமுறை குறித்து விளக்கினார்.

 

Students visiting the excavation site at keezhadi

 

தமிழி எழுத்தைப் பார்த்து வியந்த மாணவர்கள்

சிவகங்கை மாவட்டத்தில் தொல்லியல் கருவூலமாக விளங்கும் திருமலையை மாணவர்கள் பார்வையிட்டனர். நான்காயிரம் ஆண்டு பழமையான செஞ்சாந்து ஓவியங்களைக் கண்டு மகிழ்ந்தனர், மேலும் சமணப் படுக்கை இயற்கை குகை முகப்புகளில் வெட்டப்பட்டிருந்த காடியில் எருக்காட்டூர் காவிதி கோன் கொறிய பாளிய் என்று எழுதப் பட்டிருந்த 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழி எனும் தமிழ் பிராமி எழுத்துகளைப் பார்த்து இந்த எழுத்துகளே நாம் இன்று எழுதுகிற எழுத்துகளின் முன்னெழுத்து முன்னோடி என்பதை அறிந்து, அதன் வரிவடிவம் அறிந்து வியந்தனர்.

 

ஆறாம் நூற்றாண்டு குடைவரைக் கோவில்

பாண்டியர்களால் பாண்டிய நாட்டில் பல்லவர்களுக்கு முன்பே குடைவரைக் கோவில் குடைவிக்கப்பட்டது ஆய்வுகளால் தெரிய வருகிறது. இவ்வாறாக திருமலையில் அமைந்துள்ள குடைவரைக் கோயில் ஆறாம் நூற்றாண்டு  குடைவரையாக இருக்கலாம் என கருத முடிகிறது, 1400 ஆண்டுகளுக்கு முன்னாள் மலையைக்  குடைந்து அமைக்கப்பட்ட குடைவரையைப் பார்த்து அதில் அமர்ந்த நிலையில் உள்ள சிவன் பார்வதி சிலைகளைப் பார்த்து களிப்படைந்தனர், மேலும் மலையின் மேலே இக்குடைவரையை ஒட்டியே பன்னிரண்டாம் நூற்றாண்டிற்கு முன்பாக கட்டப்பட்டுள்ள கற்றளி கோவிலில் மலைக்கொழுந்தீஸ்வரர் பாகம் பிரியாள் சன்னதிகளை வணங்கி சடையவர்ம குலசேகர பாண்டியன்,முதலாம் மாறவர்ம சுந்தரபாண்டியன், மாறவர்ம விக்ரமபாண்டியன், இரண்டாம் மாறவர்ம சுந்தரபாண்டியன், சடாவர்ம வீரபாண்டியன், சடயவர்ம பராக்கிரம பாண்டியன், திரிகோண சக்கரவர்த்திகள் கோனேரிமை கொண்டான் போன்ற மன்னர்களின் கல்வெட்டுகளைக் கண்டனர்.

 

Students visiting the excavation site at keezhadi

 

நமது தாய்மடி கீழடி

அடுத்ததாக கீழடி சென்று திறந்த நிலையில் உள்ள ஏழாம் கட்ட அகழ்வாய்வுத் தளத்தை பார்வையிட்டதோடு கீழடி அருங்காட்சியகம் சென்று முன் பகுதியில் உள்ள விளக்க படங்களைப் பார்த்தபின் காட்சிக்கூடத்தில் ஒளிபரப்பாகும் காட்சியைக் கண்டு பண்டைய மனிதர்களின் வாழ்வை விளங்கிக் கொண்டு, பின்பகுதியில் அமைந்துள்ள ஒவ்வொரு காட்சிக்கூடமாக சென்றனர், கீழடி அகழாய்வு தளத்தில் கிடைக்கப்பெற்ற மாட்டின் எலும்பைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள மண் சுதை திமிலுடைய காளைச்சிற்பம், மற்றும் காணொளியாகக் காட்டப்படும் காளை ஒளிக் காட்சி.. கலம் செய் கோவே.. உழவும் தொழிலும், கடல் கடந்த வாழ்வியல், பல்வேறு வண்ண பாசிமணிகள்,முத்திரைகள்,காசுகள்,பானை ஓட்டுக் கீறல்கள் பானையில் எழுதப்பட்ட ஆதன், குவிரன் ஆதன் போன்ற சொற்கள், இந்தியாவிலே பழமையான கல்வெட்டாக கருதப்படும் தாதப்பட்டி நடுகல், ஆகியவற்றைப் பார்த்து கீழடி நம் தாய்மடி என்பதை உணர்ந்தனர்,  

 

மேலும் தமிழி தொடுதிரை விளையாட்டை மகிழ்ச்சியுடன் விளையாடினர்.  இவர்கள் காணும் பகுதியை அவ்வப்போது ஆசிரியர் பயிற்றுநரும் தொல்லியல் ஆய்வாளருமான புலவர் கா. காளிராசா விளக்கிக்கூறினார். இந்த ஒரு நாள் சுற்றுலாவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் சங்கர் அவர்கள் செய்திருந்தார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாணவர்களுக்கு கோடைக்கால இலவச விளையாட்டுப் பயிற்சி துவக்கம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Summer free sports training for students begins in Chidambaram

கோடைக்காலத்தில் மாணவர்களை நல்வழிப்படுத்தும் விதமாக இலவச விளையாட்டு பயிற்சிகள் துவக்கப்பட்டது.

சிதம்பரம் அரசு உதவி பெறும் ஆறுமுக நாவலர் மேல்நிலைப்பள்ளி சார்பாக சின்ன மார்க்கெட் பகுதியில் உள்ள பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவர்களை கோடைக்காலத்தில்  நல்வழிப்படுத்தும் விதமாக  இலவசமாக காலை மற்றும் மாலை வேலைகளில் யோகா, சிலம்பம், இறகு பந்து, கூடைப்பந்து, கபடி ஆகிய விளையாட்டுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 

இதன் துவக்க நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை பள்ளி மைதானத்தில்  நடைபெற்றது.  இந்நிகழ்சிக்கு ஆறுமுக அரசு உதவி பெறும் பள்ளி குழு செயலாளர் அருள் மொழி செல்வன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக பள்ளி குழு தலைவர் சேது சுப்பிரமணியன் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டு விளையாட்டு பயிற்சிகள் குறித்தும், அதனால் ஏற்படும் உடல் ரீதியான நன்மைகள் குறித்தும் பேசினார்கள்.

Summer free sports training for students begins in Chidambaram

இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராம்குமார், உடற்கல்வி ஆசிரியர் எத்திராஜன், சிலம்பகளை ஆசிரியர் ராஜா ராம் யோகக்கலை ஆசிரியர் முத்துக்குமாரசாமி, கூடைப்பந்து நடராஜன், அண்ணாமலை பல்கலைக்கழக உடற்கல்வி பயிற்றுநர்கள் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பயிற்சிகளை அளித்தனர். இதில் சிதம்பரம் நகரத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி, பள்ளியின் தமிழாசிரியர் செல்வம் நன்றி கூறினார் இதில் பள்ளியின் இருபால் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.

Next Story

சிதம்பரத்தில் மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Higher education guidance program for students in Chidambaram

சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய  மாணவ மாணவிகளுக்கு  உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்சிக்கு  சிதம்பரம் சார் ஆட்சியர் ராஷ்மிராணி தலைமை தாங்கி மாணவர்கள் மத்தியில் பேசுகையில்  பன்னிரெண்டாம் வகுப்பு  முடித்து  அடுத்து என்ன படிக்கலாம்.  மாணவர்களின் கனவுகளை நினைவாக்கும்  படிப்புகள்  எவை,   உயர்கல்விக்கு செல்ல ஏராளமான உதவித் தொகை வாய்ப்புகள் உள்ளது என்றும்,   தேர்ச்சி பெற்ற அனைத்து  மாணவர்களுக்கும்  உயர் கல்விக்கான  வழிகாட்டுதல்களைத் தமிழக அரசு சிறப்பாகச் செய்து வருகிறது.  சிறந்த வாய்ப்புகளுக்கு எந்தக் கல்லூரியிலும்  சேர்ந்து படிக்கலாம்,  வருங்காலத்தைப் பலப்படுத்த எந்தப் பாடப்பிரிவைத்  தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்து  மாணவர்களிடம் விளக்கி பேசினார்.

Higher education guidance program for students in Chidambaram

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆதிதிராவிட  மற்றும் பழங்குடியின நல அலுவலர்  லதா அனைவரையும் வரவேற்றார். மண்டல உதவி இயக்குநர் சுப்பிரமணியன்,  ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் சரவணகுமார்,  நந்தனார் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குகநாதன், குமராட்சி வட்டார வள மைய மேற்பார்வையாளர் இளவரசன்,  ஒருங்கிணைப்பாளர் பூங்குழலி,  பள்ளித்துணை ஆய்வாளர்  வாழ்முனி,  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இதில் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் ரவி, அருள்சங்கு, நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராதாகிருஷ்ணன்,  சுவாமி சகஜானந்தா மணி மண்டப ஒருங்கிணைப்பாளர் பாலையா, குமராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பாலமுருகன், உள்ளிட்ட கடலூர் மாவட்டத்தில் உள்ள  ஆதி திராவிட நலத்துறை   பள்ளிகளின் மாணவ மாணவிகள்  300-க்கும் மேற்பட்டவர்கள்  கலந்து கொண்டு  உயர்கல்வி குறித்து ஆலோசனைகளைப் பெற்றனர்.   இவர்களுக்கு உயர் கல்வி குறித்த விவரங்களை கருத்தாளர் கோபி வழங்கினார். சிதம்பரம் ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் சுதா அனைவருக்கும் நன்றி கூறினார்.