Skip to main content

தந்தையை இழந்த மாணவி; உதவித் தலைமை ஆசிரியரால் உயிரை விட்ட சோகம் 

Published on 20/07/2023 | Edited on 20/07/2023

 

Student lost their life by Assistant Headmaster

 

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மாரியம்மாள். இவரது கணவர் இறந்து விட்ட நிலையில் இவருக்கு 16 வயதில் ஒரு மகள் இருக்கிறார். மாரியம்மாள் கூலி வேலை பார்த்து மாணவியைப் படிக்க வைத்து வருகிறார். இதனிடையே மாணவி, அந்தப் பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.

 

இந்நிலையில், நேற்று  முன்தினம் பள்ளிக்குச் சென்று வீடு திரும்பிய மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாகப் புளியங்குடி காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த மாணவியை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். அவர்கள் நடத்திய அந்த விசாரணையில்,  ‘கடந்த 17 ஆம் தேதி அன்று மாணவி வழக்கம் போல் பள்ளிக்குச் சென்றுள்ளார். அப்போது இடைவேளை நேரத்தில் பள்ளி அலுவலக அறைக்கு மாணவி சென்று உதவித்தொகை தொடர்பான சான்றிதழ் வாங்கச் சென்றுள்ளார். இதனால் விலங்கியல் பாட வகுப்பில் பங்கேற்கத் தாமதமாகியுள்ளது. இதற்கிடையே மாணவியை வகுப்பறைக்கு உள்ளே விடாமல் வெளியே நிற்குமாறு  பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியை கூறியுள்ளார்.

 

இந்நிலையில், நேற்று முன்தினம் பள்ளிக்குச் சென்ற மாணவியிடம் பள்ளித் தலைமை ஆசிரியை, விலங்கியல் பாடப் பிரிவில் பங்கேற்கத் தாமதமானதைக் குறித்துக் கண்டித்துள்ளார். அது மட்டுமல்லாமல் மாணவிக்குப் பள்ளி மாற்றுச் சான்றிதழ் வழங்கிவிடுவதாக மிரட்டியுள்ளார். ஒரு வேளை பள்ளி மாற்றுச் சான்றிதழ் வழங்கினால் தனது தாய்க்கு அவமானம் ஆகிவிடும் என்று மாணவி கருதி, நேற்று முன்தினம் வீட்டில் தூக்கு மாட்டித் தற்கொலை செய்துள்ளார்” என்று தெரியவந்தது.

 

அதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மாணவியின் வீட்டைச் சோதனை செய்துள்ளனர். அதில், தற்கொலை செய்வதற்கு முன்பாக மாணவி தன் கைப்பட எழுதிய கடிதத்தைக் கைப்பற்றினார்கள். அந்தக் கடிதத்தில், ‘பள்ளியில் ஏற்பட்ட தாமதம் குறித்து உதவித் தலைமை ஆசிரியை, மாணவிகள் முன்னிலையில் என்னைத் திட்டினார். மேலும், பள்ளித் தலைமை ஆசிரியை வந்த பின்னர் எனக்கு டி.சி.(பள்ளி மாற்றுச் சான்றிதழ்) கொடுப்பதாகக் கூறினார். எனக்கு டி.சி கொடுத்தால் என் தாய்க்குத்தான் அவமானம் ஆகிவிடும். நான் மருத்துவ படிப்பு படிக்க விரும்பினேன். ஆனால், என்னால் படிக்க முடியவில்லை. உங்களை விட்டுப் பிரிகிறேன்” என எழுதியிருந்தார். இதையடுத்து குற்றம் சாட்டப்பட்ட உதவித் தலைமை ஆசிரியை இந்த மாதத்துடன் ஓய்வு பெறும் நிலையில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குஜராத்தில் ரூ.300 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
worth Rs.300 crore seized in Gujarat

குஜராத் மாநிலம் வழியாக இந்தியாவிற்கு அதிகளவில் போதைப் பொருள்கள் கடத்தப்பட்டு வருவது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக குஜராத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் குஜராத்தின் அகமதாபாத்தில் நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடங்களை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கண்டுபிடித்தனர். அப்போது அங்கு இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட இதன் மதிப்பு சுமார் ரூ.300 கோடி எனப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் மதிப்பிட்டுள்ளனர். 7 பேர் கைதான நிலையில், போதைப் பொருள் தயாரிப்புக் கும்பல் தலைவனின் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே சமயம் நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் என்றும் கூறப்படுகிறது.

நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் கண்டுபிடிக்கப்பட்டு ரூ.300 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக குஜராத்தில் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி படகு ஒன்றில் இருந்து 2 ஆயிரம் கோடி மதிப்புள்ள 3 ஆயிரத்து 300 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதும், இதே போன்று கடந்த மார்ச் மாதம் 12 ஆம் தேதி  சுமார் ரூ.480 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.