Skip to main content

அரசு பள்ளியில் சேரும் போதே பள்ளிக்கு புத்தகம் வழங்கிய மாணவி...

Published on 20/08/2020 | Edited on 21/08/2020

 

Thirumanur

 

 

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழக்காவட்டாங்குறிச்சி கிராமத்தில் 1963 இல் துவங்கப்பட்ட, 58 ஆண்டுகள் பழமைவாய்ந்த அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2019-2020 ஆம் கல்வியாண்டில் 429 மாணவர்கள் பயின்று வந்தனர். 2020-2021 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை திங்கள் கிழமை 17.08.2020 முதல் நடைபெற்று வருகிறது.

 

கீழக்காவட்டாங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த பட்டதாரி சுசிகலாவின் மகளான அக்சயா தனது மூன்று வயதிலேயே அரசுப்பள்ளியில் தான் படிப்பேன் என்று உறுதியோடு சொன்னவர். தனது 3 வயதிலேயே பல பள்ளிகளில் இயற்கை வாழ்வியல் குறித்து பாடம் நடத்தியவர். 5 ஆம் வகுப்பு வரை கீழக்காவட்டாங்குறிச்சி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பயின்று கீழக்காவட்டாங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் (உறுதியேற்றபடி) மேற்படிப்பையும் துவங்கியுள்ளார். 

 

தற்போது, 6 ஆம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பள்ளிக்கு புத்தகங்களை வழங்கி 6- ஆம் வகுப்பு சேர்ந்ததை பள்ளி தலைமை ஆசிரியர் செல்வக்குமார் வெகுவாக பாராட்டினார். மேலும் ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் அதுவே எனது கனவு என பள்ளித் தலைமை ஆசிரியரிடம் கூறிய மாணவி அக்சயாவின் கனவு மெய்ப்பட வேண்டும் என வாழ்த்து கூறினார். 

 

இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் செல்வக்குமார் கூறும்போது, “பள்ளி மாணவர்களுக்கு சேர்க்கையின்போது அரசு உத்தரவுப்படி புத்தகம் வழங்குவது மரபு. ஆனால் எனது 30 வருட பள்ளிக்கல்வித்துறை அனுபவத்தில் பள்ளி மாணவி ஒருவர் மேல்படிப்பை தொடர வருகின்றபோது புத்தகங்களை பள்ளிக்கு வழங்கியது இதுவே முதன்முறை என்றார். இது குறித்து மேலும் கூறுகையில் இதுபோன்ற பள்ளி நலன் சார்ந்தும், பொதுநலன் சார்ந்தும் மாணவர்கள் கிடைப்பது அரிது என்று கூறினார். இதுபோன்ற நல்ல சிந்தனையுள்ள மாணவர்களால் எதிர்காலம் நலமாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும் இந்த மாணவி அக்சயா தனது 3 வயதிலேயே அரசுப்பள்ளியில்தான் படிப்பேன் என சபதம் செய்தவர். எங்கள் பள்ளியில் சேர்ந்துள்ள 6 ஆம் வகுப்பு மாணவி அக்சயாவின் உறுதியை மதித்து 58 ஆண்டுகள் பழமைவாய்ந்த பள்ளிக்கு வரவேற்பதில் பெருமை கொள்கிறோம்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தலைமை ஆசிரியரின் கீழ்த்தரமான செயல்! ஆவேசமான பெற்றோர்

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
POCSO Case register on government school teacher

ஓமலூர் அருகே, சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அரசுப்பள்ளித் தலைமை ஆசிரியரை பணியிடைநீக்கம் செய்து, சேலம் மாவட்டக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள செம்மண்கூடல் ஊராட்சிக்கு உட்பட்ட, கந்தம்பிச்சனூரில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 128 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். வாழப்பாடி அருகே உள்ள சோமம்பட்டியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர், சில மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார்கள் கிளம்பின. 

இதையறிந்த பெற்றோர்கள் திரண்டு சென்று மார்ச் 11ஆம் தேதி காலை, பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளியை இழுத்து மூடி பூட்டு போட்டு, சாலை மறியலிலும் ஈடுபட்டனர். திடீரென்று மக்கள் திரண்டு வந்து மறியலில் இறங்கியதால் அந்தப் பகுதியே களேபரமாக மாறியது. இந்நிலையில், தகவல் அறிந்த தாரமங்கலம் காவல்நிலைய காவல்துறையினர் நிகழ்விடம் விரைந்தனர். சேலம் மாவட்டக் கல்வி அலுவலர் சந்தோஷ் மற்றும் தொடக்கக் கல்வித்துறை ஊழியர்களும் சென்று பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோரிடம் பேசினர். 

அப்போது அவர்கள், தலைமை ஆசிரியர் ராதாகிருஷ்ணனை உடனடியாக பணியிடைநீக்கம் மற்றும் கைது செய்யும்படி ஆவேசமாக கூறினர். மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தகவலை முன்பே அறிந்து இருந்தும் அதை தெரியப்படுத்தாமல் மூடி மறைத்த ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி கோரினர். பள்ளியில் அனைத்து வகுப்பு அறைகளிலும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தவும் கோரிக்கை விடுத்தனர். 

பெற்றோர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். மேலும், நிகழ்விடத்திலேயே தலைமை ஆசிரியர் ராதாகிருஷ்ணனை பணியிடைநீக்கம் செய்து மாவட்டக் கல்வி அலுவலர் சந்தோஷ் உத்தரவிட்டார். இதையடுத்து பெற்றோர்கள், போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இதற்கிடையே, ஓமலூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் ராதாகிருஷ்ணன் மீது போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், பள்ளி மீதான இதர புகார்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தவும், தலைமை ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தால் கே.ஆர்.தோப்பூர் - முத்துநாயக்கன்பட்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

Next Story

மாணவிகளிடம் ஆபாசப்படம் காட்டிய அரசுப்பள்ளி ஆசிரியர் கைது

Published on 19/02/2024 | Edited on 19/02/2024
Government school teacher arrested under pocso

சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே உள்ள புக்கம்பட்டி அரசுத் தொடக்கப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் ஜியாவுல்ஹக். இவர், தன்னுடைய பள்ளியில் படித்து வரும் மாணவிகளை தனியாக அழைத்து, அலைபேசியில் ஆபாசப்படங்களைக் காண்பித்து, பாலியல் சேட்டைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவிகள் பலர், பள்ளிக்குச் செல்ல மறுத்து வீட்டிலேயே இருந்துள்ளனர். இதுகுறித்து அவர்களின் பெற்றோர்கள் விசாரித்தபோதுதான், ஆசிரியர் ஜியாவுல்ஹக்கின் தகிடுதத்தங்கள் வெளியே தெரியவந்தன. 

அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள், இதுபற்றி பள்ளித் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து, தலைமை ஆசிரியர் தனம், மேட்டூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தன்னுடைய லீலைகள் காவல்துறை வரை சென்றதை அறிந்த ஆசிரியர் ஜியாவுல்ஹக், திடீரென்று தலைமறைவானார். முதல்கட்ட விசாரணையில் ஜியாவுல்ஹக் மீதான புகாரில் உண்மை இருப்பது தெரியவந்ததை அடுத்து, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

தீவிரமாகத் தேடப்பட்டு வந்த நிலையில், பிப். 17ம் தேதி ஆசிரியர் ஜியாவுல்ஹக்கை காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகு, அவரை மத்திய சிறையில் அடைத்தனர். பாலியல் விவகாரத்தில் ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம், மேச்சேரி சுற்று வட்டாரத்திலும், தொடக்கக் கல்வித்துறை வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.