Skip to main content

இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்; நாகை மீனவர்கள் போராட்டம்

Published on 22/08/2023 | Edited on 22/08/2023

 

Sri Lankan incident Nagai fishermen 
கோப்புப்படம்

 

நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்துள்ள ஆறுகாட்டுதுறையைச் சேர்ந்த மீனவர்கள் வழக்கம் போல் நேற்று மீன் பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர். ஆறுகாட்டுதுறையில் இருந்து கிழக்கே சுமார் 22 கடல் மைல் தொலைவில் பாஸ்கர் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் அருள்மணி, செல்வமணி, தினேஷ் ஆகியோர் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். சிவபாலன் என்பவருக்குச் சொந்தமான படகில் வெற்றிவேல், முருகன், வேலன், தமிழழகன் ஆகியோரும் அதேபோன்று செந்தில் அரசன் என்பவருக்குச் சொந்தமான படகில் வினோத், மருது ஆகியோர் நள்ளிரவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது 3  அதிநவீன படகுகளில் வந்த 9 இலங்கை கடற்கொள்ளையர்கள் மீனவர்களின் படகுகளில் ஏறி பயங்கர ஆயுதங்களைக் கொண்டு 11 மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

 

மேலும் மீனவர்களிடம் இருந்த 800 கிலோ மீன்பிடி வலை, செல்போன்கள், திசை காட்டும் கருவி ஜி.பி.எஸ். கருவிகள், பேட்டரி, டார்ச்லைட் உள்ளிட்ட சுமார் 5 லட்சம் மதிப்புள்ள பொருட்களைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்த தாக்குதலில் பாஸ்கர் என்பவருக்குத் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. அருள் ராஜ் என்பவருக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது. கொள்ளையர்களின் தாக்குதலில் இருந்து தப்பிய மீனவர்கள் அவசரம் அவசரமாக ஆறுகாட்டுதுறை கரை நோக்கி மீனவர்கள் திரும்பியுள்ளனர்.

 

தாக்குதலுக்கு உள்ளான மீனவர்கள் பாஸ்கர், அருள் ராஜ், செந்தில் அரசன், மருது, வினோத் ஆகியோருக்கு வேதாரண்யம் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பாஸ்கர்  மேல் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியதைக் கண்டித்து ஆறுகாட்டுதுறை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய மாநில அரசுகள் கடற்கொள்ளையர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆறுகாட்டுதுறை மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாகை - காங்கேசன் இடையே மீண்டும் பயணிகள் கப்பல் சேவை!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Passenger ferry service between Nagai Kangesan again
கோப்புப்படம்

நாகப்பட்டினம் சிறு துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை கடந்த ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதி (14.10.2023) பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். நாகப்பட்டினம் துறைமுகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் மத்திய அமைச்சர் சர்பானந்தசோனாவால், தமிழக அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இந்தக் கப்பலின் பயணக் கட்டணமாக 6 ஆயிரத்து 500 ரூபாயுடன் 18 சதவிதம் ஜிஎஸ்டியுடன் சேர்த்து 7 ஆயிரத்து 670 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. இந்தச் சூழலில் முதல்நாளில் போதிய பயணிகள் வராததால், 75 சதவீத கட்டண சலுகையில் ரூ.2,375 ஜிஎஸ்டி 18 சதவீதம், ஸ்நாக்ஸ் என மொத்தமாக ரூ.2,803 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இருப்பினும் இரண்டாம் நாளில் 7 பேர் மட்டுமே பயணம் செய்ய இருந்த நிலையில், கப்பல் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நாகப்பட்டினம் - காங்கேசன் துறைமுக பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை வாரத்திற்கு மூன்று நாட்கள் என மாற்றப்பட்டது. குறைந்த அளவில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுவதால் கப்பல் போக்குவரத்து சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி வாரத்தில் திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய 3 நாட்களில் மட்டும் பயணிகள் கப்பல் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பிற்கு பிறகும் பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லாததால் மழையைக் காரணம் காட்டி பயணிகள் கப்பல் சேவை கடந்த ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதியுடன் (20.10.2018) நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு மீண்டும் கப்பல் சேவை தொடங்கப்பட உள்ளது. அந்தமானில் தயாரிக்கப்பட்ட ‘சிவகங்கை’ என்ற கப்பல் மே 13 ஆம் தேதி (13.05.2024) நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன் துறைமுகத்திற்கு தனது பயணத்தைத் தொடங்க உள்ளது. இதற்காக இந்தக் கப்பல் மே 10 ஆம் தேதி நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு வர உள்ளது. பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்தக் கப்பலின் கீழ் தளத்தில் 133 இருக்கைகளும், மேல் தளத்தில் 25 இருக்கைகளும் உள்ளவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. கீழ்தளத்தில் உள்ள இருக்கையில் பயணிக்க ஜிஎஸ்டி உடன் ரு. 5 ஆயிரமும், மேல் கீழ்தளத்தில் உள்ள இருக்கையில் பயணிக்க ஜிஎஸ்டி உடன் ரு. 7 ஆயிரமும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

Next Story

தீ பற்றி எரிந்த குடிசை வீடுகள்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
nagai cottages incident Case against BJP

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இத்தகைய சூழலில் நாகையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பாஜக வேட்பாளர் ரமேஷை வரவேற்பதற்காக கோட்டாட்சியர் அலுவலகத்தின் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பாஜகவினரால் பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பட்டாசு பொறிகள் அருகில் இருந்த குடிசை வீடுகளில் பட்டு இரண்டு வீடுகள் பற்றி எரிந்தது. இதில் பக்கிரிசாமி, சுப்பிரமணியன் ஆகிய இருவரின் குடிசை வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இதனை அறிந்து அந்தப் பகுதியில் இருந்த மக்கள் குடிசை வீட்டை இழந்தவர்களுக்கு ஆதரவாக பாஜக நிர்வாகிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், பாஜக மாவட்டத் தலைவர் கார்த்திகேயனை முற்றுகையிட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இழப்பீடு வழங்கப்படும் என எழுத்துப்பூர்வமாக தெரிவித்தால் மட்டுமே பாஜக மாவட்டத் தலைவரை விடுவிப்போம் எனக்கூறி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலர் வீரமணி ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் பாஜகவினர் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தடைசெய்யப்பட்ட வெடியை விற்பனை செய்த, தம்பிதுரை பூங்கா அருகே உள்ள வெடி கடைக்கும் வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.