Skip to main content

திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

Published on 17/08/2024 | Edited on 17/08/2024
Special buses to Tiruvannamalai

பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “பௌர்ணமியை (19/08/2024) முன்னிட்டு நாளை (18/08/2024) முதல் ஆகஸ்ட் 20ஆம் தேதி (20/08/2024) வரை திருவண்ணாமலைக்கு சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கும் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கும் கூடுதலான பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து நாளை (18/08/2024)  130 பேருந்துகளும், நாளை மறுநாள் (19/08/2024) அன்று 250 பேருந்துகளும் இயக்கப்படும். அதே போன்று சென்னை கோயம்பேட்டிலிருந்து நாளை (18/08/2024) 30 பேருந்துகளும், நாளை மறுநாள் (19/08/2024) மாதாவரத்திலிருந்து தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் 40 பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்படும்.

மேலும், பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு நாளை மறுநாள் (19/08/2024) 265 பேருந்துகள் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும். அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனம் கொண்ட 50 பேருந்துகள் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலைக்கு நாளை மறுநாள் (19/08/2024) இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், சென்னை, மதுரை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி. தூத்துக்குடி மற்றும் ஓசூர் ஆகிய இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் மொபைல் செயலி (Mobile App) மூலம் முன்பதிவு செய்து பயணிக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே. பயணிகள் இந்த வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்