Skip to main content

‘8 ரயில்களின் சேவை ரத்து’ - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

Published on 22/10/2024 | Edited on 22/10/2024

 

வடகிழக்கு பருவமழை தொடங்கி இருக்கும் நிலையில் வங்கக் கடலில் உருவாகியுள்ள வளிமண்டல சுழற்சி காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தொடர்ந்து புயலாக உருமாற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனையொட்டிய வடக்கு அந்தமான் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளது. மேலும் அது மேற்கு, வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாக இருக்கிறது.

அதன் பிறகு இன்னும் தீவிரமடைந்து 23ஆம் தேதி புயலாக வலுப்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்று திசை வேகத்தை பொறுத்து இந்த புயலானது வடமேற்கு திசை நோக்கி நகரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. 24ஆம் தேதி வடமேற்கு வங்கக் கடல் பகுதியை ஒட்டிய ஒடிசா மற்றும் மேற்குவங்கத்தை ஒட்டி நகரும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த புயலுக்கு 'டானா' எனப் பெயர் வைக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. கத்தார் நாட்டின் பரிந்துரையின் பேரில் இந்த புயலுக்கு 'டானா' எனப் பெயர் வைக்கப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் டானா புயல் எதிரொலி காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தமிழகத்தில் இருந்து புறப்படும் 11 ரயில்கள் உட்பட மொத்தம் 28 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நாளை (23.10.2024),  நாளை மறுநாள் (24.06.2024) மற்றும் அக்டோபர் 26 ஆம் தேதி (26.10.2024) ஆகிய நாட்களில் இயக்கப்பட இருந்த ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட உள்ளன. அதன்படி சென்னை சென்ட்ரல் - ஷாலிமர் அதிவிரைவு ரயில், புதுச்சேரி - ஹவுரா அதிவிரைவு ரயில், சென்னை - ஹவுரா ரயில் உள்ளிட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை காலத்தில் வங்கக்கடலில் உருவாகும் முதல் புயல் டானா என்பது குறிப்பிடத்தகுந்தது. 

சார்ந்த செய்திகள்