Skip to main content

தாய்க்கு பாலியல் தொல்லை; மகன் மர்ம மரணம்!

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
Son who misbehave his mother  passed away mysteriously

கடலூர் மாவட்டம் தூக்கணாம்பாக்கம் அடுத்த பள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் மல்லிகா - வயது 52 (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கூலித் தொழிலாளி. இவரது கணவன் ஜெயபால் இறந்துவிட்டார். இவர்களது மகன் குணசீலன்(38). இவர் வேலைக்குச் செல்லாமல் தினமும் அதிக அளவில் குடி குடித்துவிட்டு ஊரைச் சுற்றி வந்துள்ளார்.

இதனால் இவருக்குத் திருமணம் ஆகாமல் தாயுடன் வசித்து வந்தார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடிபோதையில் தனது தாயாருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக கடலூர் நீதிபதியிடம் அவரது தாய் புகார் அளித்துள்ளார்.  அதன் பெயரில் தூக்கணாம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து குணசீலனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.  இவர் சில தினங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்துள்ளார். 

இந்த நிலையில், திங்கள்கிழமை அதிகாலை வீட்டின் அருகே மர்மமான முறையில் ரத்த வெள்ளத்தில் தலையில் பலத்த காயத்துடன் மயங்கிய நிலையில் குணசீலன் இறந்து கிடந்தார். இது குறித்து தகவலின் பெயரில் தூக்கணாம்பாக்கம் காவல் ஆய்வாளர் குருமூர்த்தி, உதவி ஆய்வாளர் தவச்செல்வம் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து கிடந்த குணசீலன் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அவரது தாயார் சாந்தியை காவல்துறையினர் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். ஜாமீனில் வெளியே வந்த குணசீலன் தனது தாயாருக்கு மீண்டும் பாலியல் தொல்லை கொடுத்தாரா? தற்காப்பிற்காக தனது மகன் குணசீலனை சாந்தி தாக்கியதால் இறந்து போனாரா? அல்லது வேறு யாரேனும் அவரைத் தாக்கியதில் இறந்து போனாரா? என்பது குறித்து காவல்துறையினர் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் தூக்கணாம்பாக்கம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சார்ந்த செய்திகள்