Skip to main content

சீரியஸ் ஆகும் சீர்காழி நகராட்சி விவகாரம்! தொடர் போராட்டத்தில் உறுப்பினர்கள்

Published on 01/03/2023 | Edited on 01/03/2023

 

Sirkazhi Municipal issue! Members in continuous struggle

 

சீர்காழி நகராட்சியில் கைக்குழந்தையுடன் கவுன்சிலர்கள் இரவிலும் தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தைத் தொடர்கின்றனர்.

 

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி நகராட்சியில் நகர்மன்றக் கூட்டம் நடைபெற்றது. நகர்மன்றத் தலைவர் துர்கா பரமேஸ்வரி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், நகர்மன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில்லை, சீர்காழி பகுதிகளில் குப்பைகளைச் சரிவர அகற்றுவதில்லை, சீர்காழி நகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள ஈசானிய தெருவில் இயங்கிவரும் தற்காலிக தகன மேடை பராமரிப்பின்றி காணப்படுகிறது என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து அதிமுக உள்ளிட்ட 12 நகர்மன்ற உறுப்பினர்கள் பாய், தலையணையுடன் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் நகராட்சி ஆணையர் வாசுதேவன் இரு முறைக்கு மேல் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும் எவ்வித உடன்பாடும் ஏற்படாததால், நகர்மன்ற உறுப்பினர்கள் இரவிலும் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

 

Sirkazhi Municipal issue! Members in continuous struggle

 

இரவு உணவை நகர்மன்றக் கூடத்திலேயே உண்ட உறுப்பினர்கள், பின்னர் பாய், தலையணைகளைக் கூடுதலாக எடுத்து வந்து நகர்மன்றக் கூட்டம் நடக்கும் இடத்திலேயே உறங்க ஆரம்பித்தனர். இரவிலும் போராட்டம் தொடர்ந்ததால் நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

 

இந்தச் சூழலில் நகராட்சி தலைவரைக் கண்டித்து 24 வார்டுகளைச் சேர்ந்த பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நகராட்சி வார்டு உறுப்பினர்கள் இரண்டாவது நாளாக நகராட்சியில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபடுவதால் பதற்றமான சூழல் நிலவுகிறது. சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் லாமேக் தலைமையில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்