Skip to main content

ஆளுநர் மாளிகை முற்றுகை - தமிழக வாழ்வுரிமைக் கட்சி அதிரடி

Published on 04/02/2022 | Edited on 04/02/2022

 

பரக


தமிழக அரசின் நீட் தேர்வு விலக்கு சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் தராமல் கிடப்பில் வைத்திருந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, அதனை நேற்று தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பினார். இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனங்களை எழுப்பி வருகின்றன. தமிழக அரசும் அனைத்து கட்சிகளுடன் நாளை ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளது. இந்த நிலையில், ஆளுநரின் செயலைக் கண்டிக்கும் விதமாக ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளது தமிழக வாழ்வுரிமைக் கட்சி. அக்கட்சியின் தலைவர் வேல்முருகனிடம் இது குறித்து நாம் பேசிய போது, "மோடி ஆட்சிக்கு வந்த பிறகு ஒருபுறம் தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்ற மறுகாலனியாக்க கொள்கைகளும், வருணாசிரமக் கட்டுமானத்தை அமல்படுத்தும் பாசிச நடவடிக்கைகளையும்தான் அரங்கேற்றி வருகிறார். அதன் ஒரு பகுதியாக தான், நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை போன்றவை எல்லாம்.  இதனால், நீட் தேர்வை ஒன்றிய பாஜக அரசு ஒருபோதும் ரத்து செய்யாது. பாஜகவின் ஊதுகுழலாக இருக்கும் ஆளுநரும் சரி, நீதித் துறையும் சரி,  வழக்கை காயப்போட்டு, மாணவர்களின் கழுத்தைக் கச்சிதமாக அறுக்கும். 

 

அதன் தொடர்ச்சி தான், தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி அரசுக்கே திருப்பி அனுப்பி வைத்திருப்பது. நீட் விலக்கு கோரும் தீர்மானத்தின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்த ஆளுநர், அத்தீர்மானத்தைக் குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைக்கப்படாதது, நாட்டின் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. ஆளுநர் என்பவர் மாநில அமைச்சரவைக்கு கட்டுப்பட்டவர். அவரால் தன்னிச்சையான முடிவு எடுக்க முடியாது. அதனைத்தான் அரசியலமைப்புச் சட்டமும் கூறுகிறது. கடந்த கால நீதிமன்றத் தீர்ப்புகளும் சுட்டிக்காட்டுகிறது. 

 

உதாரணமாக, கடந்த 1999 -ல், நளினியின் தூக்குத்தண்டனையை ரத்து செய்யக்கோரி, கலைஞர் தலைமையிலான அரசு முடிவு செய்து, அப்போதைய ஆளுநரிடம் மனு அளிக்கப்பட்டது. அதன் மீது யாரிடமும் கருத்துக் கேட்காத ஆளுநர், அம்மனுவை திருப்பி அனுப்பினார். அதனையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் கலைஞர் தலைமையிலான அரசு வழக்கு தொடர்ந்தது. அவ்வழக்கில், ஆளுநர் தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது, மாநில அமைச்சரவைக்கு கட்டுப்பட்டவர், அமைச்சரவையின் முடிவை செயல்படுத்தும் பொறுப்பு தான் ஆளுநருக்கு உள்ளது என்று நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதே போன்று தான், பேரறிவாளன் வழக்கிலும் உத்தரவு உள்ளது. இந்த உத்தரவு நீட் தேர்வுக்கும் பொருந்தும். 

 

இந்தக் கடந்த கால நீதிமன்ற தீர்ப்புகளையெல்லாம் கருத்தில் கொள்ளாத அல்லது தெரியாத ஆளுநர், தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசுக்கே திருப்பி அனுப்பி வைத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது; கண்டனத்துக்குரியது. ஆளுநரின் இத்தகையை நடவடிக்கை, அவரின் அறியாமையை தான் வெளிப்படுத்துகிறது.  குறிப்பாக, ஏ.கே.ராஜன் குழு அளித்த பரிந்துரைகளை ஆளுநர் படித்தாரா என்பது கூட தெரியவில்லை.  எனவே, நீட் விலக்கு கோரும் மசோதாவை ஆளுருக்கே மீண்டும் அனுப்ப வேண்டும். இல்லையென்றால், சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க தமிழ்நாடு அரசு விரைந்து செயல்பட வேண்டும். தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் தொடர்ந்து செயல்படும் ஆளுநரை திரும்பப் பெற ஒன்றிய அரசுக்கு, தமிழ்நாடு அரசு அழுத்தம்  கொடுக்க வேண்டும். இதனிடையே, தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி, இன்று ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு மாபெரும் போராட்டத்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சி முன்னெடுக்கவுள்ளது " என்கிறார் வேல்முருகன்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கைது!

Published on 30/09/2023 | Edited on 30/09/2023

 

tvk Party leader Velmurugan arrested

 

த‌மிழகத்தின் குறுவை சாகுபடிக்காக காவிரியில் கர்நாடகா சார்பில் அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீரைத் திறந்துவிட வேண்டும் என டெல்லியில் கடந்த 26 ஆம் தேதி நடைபெற்ற காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 87வது கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டது. இதற்கு கர்நாடகாவில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு கன்னட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதேபோல் கர்நாடகா சார்பில் தமிழகத்திற்கு உரிய தண்ணீர் திறக்காததைக் கண்டித்து தமிழகத்திலும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மீண்டும் காவிரி விவகாரம் தீவிரமடைந்துள்ளது. அதே சமயம் நேற்று கர்நாடகாவில் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் பேருந்துகள் எல்லையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டன.

 

இதற்கிடையில் நேற்று டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை வாரியத்தின் அவசரக் கூட்டத்தில் தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விட முடியாது எனக் கர்நாடகா தரப்பு அதிகாரிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது தமிழக அரசு தரப்பு அதிகாரிகள் சார்பில் கர்நாடக அணைகளில் 50 டி.எம்.சி நீர் இருப்பதால் 12 ஆயிரத்து 500 கன அடி நீரைக் கர்நாடகா திறந்துவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு அதாவது அக்டோபர் 15 ஆம் தேதி வரை 3000 கன அடி நீர் திறந்துவிடக் கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்டு இருந்தது.

 

இந்நிலையில் காவிரி நதி நீர் விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டி, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் முற்றுகையிட முயன்றனர். இந்த முற்றுகைப் போராட்டத்தில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். முன்னதாகச் செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், “உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட போதும், காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்ட போதும் காவிரி நதி நீர் பங்கீட்டைத் தர மறுத்து கர்நாடக அரசே பந்த் அறிவித்தது. கன்னட கும்பல்களைத் தூண்டி விட்டு, தமிழர்களின் உயிருக்கும், உடைமைக்கும் உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த செயலை கர்நாடக அரசு தொடர்ந்து செய்து வருகிறது. கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு இருந்தாலும், பாஜக அரசு இருந்தாலும் தமிழர்களை வஞ்சிக்கிறது. தமிழர்களுக்குத் துரோகம் செய்கிறது. இவ்வாறு துரோகம் செய்கிற கர்நாடக அரசிற்கு, மத்திய பாஜக அரசு தொடர்ந்து ஆதரவாக இருக்கிறது. கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு உரிய நீரைத் திறந்துவிட வேண்டும்” எனத் தெரிவித்தார். 

 

 

Next Story

பிரதமருக்கு எதிராக தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் கருப்பு கொடி காட்டும் போராட்டம் (படங்கள்)

Published on 08/04/2023 | Edited on 08/04/2023

 

சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில், என்எல்சி (NLC) நிறுவன விரிவாக்கம், வடசேரி, மைக்கேல்பட்டி ஆகிய பகுதிகளில் புதிய தனியார் சுரங்கங்களுக்கு அனுமதி என அடுக்கடுக்காக நாசகார திட்டங்களை தமிழ்நாட்டில் செயல்படுத்தி தமிழ்நாட்டின் விவசாயத்தை முற்றாக அழித்து பாலைவனமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஒன்றிய பிரதமர் நரேந்திர மோடியை கண்டித்து இன்று (08-04-2023) தமிழ்நாடு வருகையின் போது தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடைபெற்றது.