Skip to main content

டாஸ்மாக் கடையை திறக்கக் கோரி கடையடைப்பு போராட்டம்!

Published on 07/10/2023 | Edited on 07/10/2023

 

Shop closure demanding opening of Tasmac near Pudukkottai

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட பெரிய கிராமம் கொத்தமங்கலம். சுற்றியுள்ள பல கிராம மக்களும் வெளியூர்களுக்கு செல்ல தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் வந்து பஸ் ஏறும் கிராமம்.  இங்குள்ள கடைவீதியில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு 2 டாஸ்மாக் செயல்பட்டு வந்தது. இந்த கடைகளால் பெண்கள், மாணவ, மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறி 2 டாஸ்மாக் கடைகளையும் மூடக்கோரி பொதுமக்கள் அதிகாரிகளுக்கு பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லாத நிலையில் மதுப்பாட்டில்களை மாலையாக அணிந்து வந்து கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர். அதன் பிறகும் அதிகாரிகள் மெத்தனம் காட்டியதால் கடந்த 2017 ம் ஆண்டு மே 20 ந் தேதி டாஸ்மாக் கடைகளை மூடும் வரை காத்திருப்பு போராட்டம் நடத்துவதாக அறிவித்து பந்தல் அமைத்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

பெண்களின் போராட்டத்தையடுத்து அங்கு வந்த டாஸ்மாக், கலால், வருவாய்த்துறை அதிகாரிகள் அருகில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் மக்கள் பிரதிநிகள், போராட்டக் குழுவினருடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியதில் அதிகாரிகள் சில வாரங்களில் கடையை மூடுவதாக உறுதி அளித்தனர். அதனை எழுதி கையெழுத்திடச் சொன்ன போது அதிகாரிகள் கையெழுத்திடாமல் அங்கிருந்து வெளியேற முயன்ற போது அங்கு திரண்டிருந்த பெண்கள் அதிகாரிகள் காலில் விழுந்து கதறி அழுது கையெழுத்திடச் சொன்னதையும் மதிக்காமல் வெளியேற முயன்றதால் தகவல் வெளியே தெரிந்து போராட்டப் பெண்கள் மண்டபத்தை முற்றுகையிட்டு அதிகாரிகளை வெளியேறவிடாமல் தடுத்ததுடன் இனியும் அதிகாரிகள் ஏமாற்றத் தான் நினைக்கிறார்கள் என்று சிலர் சொன்ன போது.. கூட்டத்தில் நின்ற ஆயிரக்கணக்கான பெண்கள் திரண்டு சென்று 2 டாஸ்மாக் கடைகளையும், பார்களையும் அடித்து உடைத்தனர். அதன் பிறகு இரு கடைகளும் மூடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. அதன் பிறகும் டாஸ்மாக் கடைகள் வந்துவிடக் கூடாது என்று கிராம சபைக் கூட்டம், ஊராட்சி மன்ற சாதாரணக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

ஆனால், கடந்த ஆண்டு மீண்டும் டாஸ்மாக் கடை திறக்கப்பட்ட போது பொதுமக்கள் மீண்டும் போராட்டம் செய்ததால் மீண்டும் டாஸ்மாக் கடை மூடப்பட்டது. இந்த நிலையில் தான் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மீண்டும் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதால் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர். அதே நேரத்தில் எங்களுக்கு டாஸ்மாக் கடை வேண்டும். டாஸ்மாக் கடை இல்லாமல் வர்த்தகம் பாதிப்பதாக கூறி டாஸ்மாக் கடையை திறக்க கோரி பலர் திரண்டு முழக்கமிட்டனர். இரு தரப்பாக பிரிந்து இரு வேறு கோரிக்கைகளை முன்வைப்பதால் ஆலங்குடி வட்டாட்சியர் விசுவநாதன், டிஎஸ்பி தீபக் ரஜினி ஆகியோர் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தும் வரை டாஸ்மாக் கடை திறப்பதில்லை என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். 

 

இந்த நிலையில் அக்டோபர் 2 நடந்த கிராமசபைக் கூட்டத்திலும் மீண்டும் டாஸ்மாக் கடை வேண்டாம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் டாஸ்மாக் கடையை திறக்க வேண்டும் என்று மற்றொரு தரப்பு கையெழுத்து இயக்கம் நடத்தினர். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மாலை ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதான கூட்டம் என்று அழைப்புக் கொடுத்திருந்த நிலையில் சமாதானக் கூட்ட நாளிலேயே டாஸ்மாக் கடையை திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து கொத்தமங்கலத்தில் கடையடைப்பு போராட்டம் அறிவித்து கடைகளையும் அடைத்திருந்தனர். ஏராளமான கடைகள் மூடப்பட்டிருந்த நிலையில் ஆங்காங்கே கடைகள் திறந்திருந்தது.

 

Shop closure demanding opening of Tasmac near Pudukkottai

 

இந்த நிலையில் ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில், சட்டம் ஒழுங்கு பிரச்சனையை பாதுகாக்கும் பொருட்டு மேலும் 15 நாட்களுக்கு டாஸ்மாக் கடையை திறப்பதில்லை. அதற்குள் நீதிமன்றம் மூலம் தீர்வு பெற்று வர வேண்டும் என்று கூட்டத்தில் முடிவானது. இந்த முடிவையடுத்து டாஸ்மாக் வேண்டாம் என்ற தரப்பினர் திங்கள் கிழமை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுமக்கள், பெண்கள், மாணவ, மணவிகள், விளைநிலங்களுக்கு பாதிப்ப ஏற்படுத்தும் டாஸ்மாக் கடை வேண்டாம் என்று வழக்கு தொடுக்க தயாராகி வருகின்றனர். பல ஊர்களில் டாஸ்மாக்கை மூடக்கோரி பொதுமக்கள் கடை வியாபாரிகள் கடையடைப்பு, போராட்டங்கள் செய்து வரும் நிலையில் கொத்தமங்கலத்தில் மட்டு மாற்றி யோசித்து வர்த்தகம் பாதிக்காமல் இருக்க டாஸ்மாக்கை திற என்று கோரிக்கை வைத்து கடையடைப்பு செய்திருந்தது பரபரப்பாக பேசப்பட்டுள்ளதுடன், பல்வேறு விமர்சனங்களையும் எழுப்பியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சங்கம்விடுதி குடிநீர் தொட்டி விவகாரம்! அதிகாரிகள் ஆய்வு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Sangamviduthi drinking water tank issue officials investigation

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சங்கம்விடுதி ஊராட்சியில் உள்ள குருவாண்டான் தெருவில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அதே பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு மட்டுமின்றி அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கும் இந்த தண்ணீரே வழங்கப்படுகிறது. ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமுதாய மக்களுக்கும் குடிநீர் வழங்கப்படுகிறது. பாகுபாடற்ற ஒற்றுமையான கிராமமாக உள்ளது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு காலையில் குழாயில் தண்ணீர் தூசியாக வந்துள்ளதையடுத்து அப்பகுதி இளைஞர்கள் தண்ணீர் தொட்டியில் ஏறிப் பார்த்துவிட்டு தண்ணீரை வெளியேற்றி பார்த்துள்ளனர். உள்ளே பாசி போல கருப்பாக ஆங்காங்கே கிடந்துள்ளது. அவற்றை சேகரித்து வெளியே எடுத்து பார்த்த போது கூடியிருந்தவர்கள் ஒவ்வொருவரும் மாட்டுச் சாணம் என்றும், தொட்டி சரியாக கழுவாததால் சேர்ந்துள்ள பாசி என்றும் கூறினர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

இந்த தகவல் அறிந்து வருவாய்த் துறை, ஊரகவளர்ச்சித்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து விசாரனை செய்தனர். தொடர்ந்து தண்ணீரையும், தண்ணீர் தொட்டியில்இருந்து சேகரிக்கப்பட்ட கழிவுகளையும் ஆய்வுக்காக எடுத்துச் சென்றதுடன் தற்காலிகமாக சம்மந்தப்பட்ட தண்ணீர் தொட்டியில் இருந்து குடிநீர் கொடுப்பதை நிறுத்திவிட்டு டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்தனர். சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அறந்தாங்கி டிடி நமச்சிவாயம் தலைமையில் கடந்த 2 நாட்களாக அந்த ஊரில் மருத்துவ முகாம் நடந்து வருகிறது. மேலும் அதே பகுதியில் உள்ள காவிரி குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் வழங்க அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இந்த நிலையில் அங்குள்ள சிலர் கூறும் போது, தண்ணீர் தொட்டி சரிவர சுத்தம் செய்யாததால் தேங்கிய பாசி கரைந்து குழாய்களில் வந்திருக்கலாம். மேலும் இந்த ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமூதாயத்தவர்களுக்கும் தண்ணீர் போவதால் வேறு கழிவுகளை கலந்திருக்க அச்சப்படுவார்கள். ஆய்வு முடிவுகள் வந்த பிறகே உண்மை நிலை தெரியும். அதற்குள் யாரும் சமுதாய ரீதியாக அணுக வேண்டாம் என்கின்றனர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

தண்ணீர் தொட்டியை ஆய்வு செய்த டிடி நமச்சிவாயம்.. கழிவு இருந்ததாக மக்கள் சொன்னார்கள் கழிவுகள், தண்ணீர் ஆய்விற்கு போய் உள்ளது. ஏதேனும் கலந்த தண்ணீரை குடித்திருந்தால் வாந்தி, வயிற்றுப்போக்கு வந்திருக்கும். இதுவரை இந்த கிராமத்தில் அப்படி எந்த பாதிப்பும் இல்லை. மேலும் தண்ணீர் தொட்டியில் மீண்டும் சுத்தம் செய்து தண்ணீர் ஏற்றி குளோரின் செய்யப்பட்டுள்ளது. அதை ஆய்வு செய்யும் போது கலப்படம் இருந்தால் தெரியும். இரண்டு நாள் மருத்துவ முகாமில் நேற்று 40 பேரும் இன்று 12 பேருமே வந்துள்ளனர். அவர்களும் சாதாரணமாக வந்தவர்கள் தான். தொடர்ந்து ஆய்வுகள் நடக்கிறது என்றார். இந்த நிலையில் போலீசார் வஜ்ரா வாகனத்துடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.