Skip to main content

20 வருடங்கள் முன் டொக்கன் ராஜா செய்த சம்பவம்; காத்திருந்து பழிதீர்த்த பெண்

Published on 11/07/2023 | Edited on 11/07/2023

 

Shocking information has come out in the rowdy Dogan Raja case

 

சென்னையை சேர்ந்த பிரபல ரவுடி டொக்கன் ராஜாவை கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று 8 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று விரட்டி விரட்டி படுகொலை செய்தது. இவர் தென்சென்னை தாதா சி.டி.மணி மற்றும் வடசென்னை ரவுடி காக்காதோப்பு பாலாஜியின் நெருங்கிய கூட்டாளி. சென்னையில் உள்ள மற்றொரு பிரபல ரவுடியான சி.டி.ரவி என்பவருக்கு இவர் வலது கரமாகச் செயல்பட்டவர் எனக் கூறப்படுகிறது. இவர் மீது கொலை, கொள்ளை, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

 

இந்த நிலையில் நேற்று முன்தினம் தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள திருமண மண்டபத்திற்கு வந்த டொக்கன் ராஜாவை 8 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்துள்ளது. இது பெரும் பரபரப்பை கிளப்பிய நிலையில் தலைவறைவாக உள்ள 8 பேரையும் போலீசார் 3 தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். 

 

இந்த நிலையில் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில், டொக்கன் ராஜாவின் கொலை 20 வருடங்களுக்கு முன்பு நடந்த கொலையின் பழிவாங்கல் என்று தெரியவந்துள்ளது. கடந்த 20 வருடங்களுக்கு முன்பு பிரபல ரவுடியாக இருந்த துரைக்கண்ணு என்பவருக்கும் டொக்கன் ராஜாவுக்கும் தகராறு இருந்துள்ளது. துரைக்கண்ணு கள்ளச்சாராயம், கட்டப்பஞ்சாயத்து என சகல குற்றங்களையும் செய்து அசைக்க முடியாத ரவுடியாக வலம் வந்துள்ளார்.

 

துரைக்கண்ணுவுக்கு மதுப்பழக்கம் அதிகமாக இருந்ததால் குடித்த பிறகு பல்லக்குமா நகர் பகுதிக்கு சென்று அங்கு வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இப்படியாக இது தொடர்ந்து கொண்டிருக்க பல்லக்குமா நகர் இளைஞர்கள் துரைக்கண்ணுவை தீர்த்து கட்ட முடிவு செய்து அவரது எதிரியான டொக்கன் ராஜாவை நாடியுள்ளனர். அதனைத் தொடர்ந்து தனது நண்பர் ஆட்டுக்கல் பாலாஜியுடன் சேர்ந்து துரைக்கண்ணுவை வெட்டி கொலை செய்துள்ளனர்.

 

இதனைத் தொடர்ந்து துரைக்கண்ணு ஆதரவாளர்கள் ஆட்டுக்கல் பாலாஜியை கொலை செய்ய, அதற்கு பழிவாங்க டொக்கன் ராஜா துரைக்கண்ணுவின் ஆதரவாளர்களை கடுமையாகத் தாக்கியுள்ளார். அப்போது இந்த பிரச்சனைக்கு தொடர்பே இல்லாத பல்லக்குமா நகரில் கறிக்கடை நடத்தி வந்த கதிரவனை டொக்கன் ராஜாவும் அவரது ஆதாரவாளர்களும் வெட்டி படுகொலை செய்தனர். அப்போது கதிரவனின் மனைவி நரேஷ் குமார் என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தையுடன் நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்துள்ளார். எந்த தவறும் செய்யாத கதிரவனை கொன்ற டொக்கன் ராஜாவை கொலை செய்ய அவரது தம்பி முயற்சித்து தோல்வியில் முடிந்துள்ளது.

 

இதனிடையே கதிரவனின் மனைவிக்கு இரண்டாவது ஆண் குழந்தை பிறந்தது. அவனுக்கு மகேஷ் குமார் என்று பெயர் சூட்டியிருந்தனர். இந்த நிலையில் தனது கணவரை கொலை செய்த டொக்கன் ராஜாவை தனது மகன்களை வைத்தே கொலை செய்து பழிதீர்க்க வேண்டும் என அவரது மனைவி சபதம் எடுத்துள்ளார். அதேபோன்று இருவரிடமும் டொக்கன் ராஜாதான் உங்களது தந்தையைக் கொன்றான் என்று கூறி அவர்களை தயார்படுத்தியுள்ளார். 

 

இந்த நிலையில்தான் ரவுடி டொக்கன் ராஜா பாஜகவில் இணைந்து பொறுப்பில் உள்ளார். அவரை தீர்த்துக்கட்ட நேரம் பார்த்துக்கொண்டிருந்த நரேஷ் குமாரும் மகேஷ் குமாரும் மயிலாப்பூர் ரவுடி கிழங்கு சரவணனிடம் உதவி கேட்க, மறைமுகமாக தனது ஆட்களை அனுப்பி கிழங்கு சரவணன் இருவருக்கும் உதவி செய்ததாகக் கூறப்படுகிறது.  

 

இதனைத் தொடர்ந்து டொக்கன் ராஜா சென்ற இடமெல்லாம் நோட்டம் பார்த்துக்கொண்டிருந்த கூலிப்படையினர், தக்க சமயம் பார்த்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரை வெட்டி படுகொலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 20 வருடங்கள் கழித்து கணவரை கொன்ற ரவுடியை தனது மகன்களை வைத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்