Skip to main content

சேலத்தில் கல்லால் தாக்கி வாலிபர் கொலை!

Published on 05/11/2019 | Edited on 05/11/2019

சேலம் பள்ளப்பட்டியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டார். 


சேலம் பள்ளப்பட்டியில், வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்க அலுவலகத்திற்குப் பின்பக்கத்தில் உள்ள உடையார் காடு என்ற பகுதியில் காலி மனைகள் உள்ளன. திங்கள்கிழமை (நவ. 4) காலையில் அந்த வழியாக சென்ற சிலர், அங்கு 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவரின் சடலம் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பள்ளப்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். 

salem pallapatti incident police investigation


இதையடுத்து, காவல்துறை உதவி ஆணையர் செல்வராஜ், ஆய்வாளர் சாலைராம் சக்திவேல், இரும்பாலை காவல் ஆய்வாளர் தனசேகரன் மற்றும் காவலர்கள் சடலம் கிடந்த இடத்திற்கு நேரில் சென்று விசாரித்தனர். சடலத்தை மீட்டு அவர்கள் உடற்கூறு ஆய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  சடலத்தின் அருகில் ரத்தம் தோய்ந்த கல் ஒன்றும் கிடந்தது. மர்ம நபர்கள் வாலிபரை, கல்லால் தாக்கி கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது. மதுபான பாட்டில் ஒன்றும் உடைந்து சிதறிக்கிடந்தது. அவற்றிலும் ரத்தம் தோய்ந்து இருந்தது. சடலம் கிடந்த இடத்தில் உள்ள தடயங்களை காவல்துறையினர் சேகரித்தனர். 


இறந்து கிடந்த வாலிபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரங்கள் தெரியவில்லை. நல்ல உடல்வாகுடன், அரைக்கால் பேண்ட், டீஷர்ட் அணிந்திருந்தார். முன்விரோதம் அல்லது திருமண உறவுக்கு வெளியே உள்ள தொடர்பு காரணமாக நடந்ததா? அல்லது மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் கொலை நடந்ததா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.



 


இதற்கிடையே, சடலம் கிடந்த பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சில சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்ததில், ஞாயிற்றுக்கிழமை (நவ. 3)  இரவு 11.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் மர்ம நபர்கள் இருவர் சடலம் கிடந்த பகுதியில் இருந்து வெளியே செல்வது தெரிய வந்துள்ளது. மோட்டார் சைக்கிளில் சென்ற நபர்களை பிடித்து விசாரித்தால் கொலையுண்டது யார் எனத் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

சார்ந்த செய்திகள்