Skip to main content

சேலம் - சென்னை விமான சேவை; மார்ச் முதல் மீண்டும் தொடக்கம்! 

Published on 12/02/2022 | Edited on 12/02/2022

 

Salem - Chennai Airlines; Starting again from March!

 

சேலம் - சென்னை இடையிலான பயணிகள் விமான சேவை, வரும் மார்ச் மாதம் முதல் மீண்டும் தொடங்கப்படும் என்று சாலை மற்றும் விமான போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் விஜயகுமார் சிங் தெரிவித்துள்ளார். 

 

இரும்பு, மேக்னசைட், பாக்சைட் உள்ளிட்ட கனிமங்கள், ஜவுளி, ஸ்டார்ச், வெள்ளி கொலுசு, மலர் சாகுபடியில் முக்கிய சந்தை மற்றும் உற்பத்தி கேந்திரமாக சேலம் மாவட்டம் விளங்குகிறது. 

 

வர்த்தக நிமித்தமாக சேலத்தில் இருந்து சென்னைக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. இதையடுத்து, மத்திய அரசின் சிறு நகரங்களுக்கு இடையிலான விமான சேவை (உடான்) திட்டத்தின் கீழ் சேலத்தில் இருந்து சென்னைக்கு கடந்த 2018- ஆம் ஆண்டு பயணிகள் விமான போக்குவரத்து தொடங்கப்பட்டது. 

 

உடான் திட்டத்தின் கீழ் ஆர்சிஎஸ் எனப்படும் மண்டல அளவிலான வழித்தடத் திட்டத்தின் கீழ் மட்டும் இயக்கப்படும் விமான சேவை கொண்டு வரப்பட்டன. அதன்படி, முதல்கட்டமாக சென்னை - சேலம் - சென்னை வழித்தடத்தில் விமான சேவை தொடங்கப்பட்டது. இந்த வழித்தடத்தில் ட்ரூஜெட் நிறுவனம் ஒரே ஒரு பயணிகள் விமானத்தை இயக்கி வந்தது. ஒரே நேரத்தில் அதிகபட்சம் 72 பேர் இந்த விமானத்தில் பயணம் செய்ய முடியும்.

 

ஆரம்ப நிலையில், இந்த நிறுவனத்திற்கு மூன்று ஆண்டுகள் ஒப்பந்தம் கொடுக்கப்பட்டு இருந்தது. இந்த ஒப்பந்தம் 2021ம் ஆண்டுடன் முடிந்த நிலையில் மீண்டும் ஓராண்டுக்கு ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டது. எனினும், கரோனா உள்ளிட்ட காரணங்களால் விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது. இதற்கிடையே, ட்ரூஜெட் நிறுவனத்தை டர்போ மெகா ஏர்வேஸ் நிறுவனம் கையகப்படுத்தி உள்ளது. 

 

அதேநேரம், சேலத்தில் இருந்து சென்னைக்கு தினமும் பயணிகள் விமானத்தை இயக்க வேண்டும் என்று வர்த்தகர்கள், பொதுமக்களிடையே தொடர்ந்து கோரிக்கை எழுந்தன. 

Salem - Chennai Airlines; Starting again from March!

இது தொடர்பாக சேலம் தி.மு.க. எம்.பி., பார்த்திபன், கடந்த 8.12.2021ம் தேதி மக்களவையில் நேரமில்லா நேரத்தில் பேசும்போது, சேலம் மாவட்ட மக்களின் முக்கிய கோரிக்கையான சேலம் - சென்னை இடையிலான விமான சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதன்பின், கடிதங்கள் வாயிலாகவும் நினைவூட்டினார். 

 

அவருடைய கோரிக்கையை பரிசீலித்த மத்திய அரசு, வரும் மார்ச் மாதம் முதல் மீண்டும் சேலம் - சென்னை பயணிகள் விமான சேவை தொடங்கப்படும் என்று பதில் அளித்துள்ளது. 

 

இது தொடர்பாக சாலை மற்றும் விமானப் போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் விஜய்குமார் சிங், எம்பி., பார்த்திபனுக்கு கடந்த 31.12.2021ம் தேதி எழுதியுள்ள கடிதத்தில், ''உடான் திட்டத்தின் கீழ் சென்னை - சேலம் - சென்னை வழித்தடத்தில் கடந்த 25.3.2018ம் தேதி பயணிகள் விமான சேவை தொடங்கப்பட்டது. 

 

இந்த சேவைக்கான மூன்று ஆண்டு ஒப்பந்தக்காலம் முடிவடைந்து விட்ட நிலையில், மீண்டும் ஓராண்டு காலம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, வரும் மார்ச் மாதம் முதல் மேற்கண்ட வழித்தடத்தில் மீண்டும் விமான சேவை தொடங்கப்படும்,'' என்று குறிப்பிட்டுள்ளார். 

 

இதுகுறித்து சேலம் விமான நிலைய அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "பயணிகள் விமான சேவையைத் தொடங்குவது குறித்து இன்னும் எங்களுக்கு மத்திய அரசிடம் இருந்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வரவில்லை. 

 

கடைசியாக கடந்த 2021ம் ஆண்டு ஜூன் 2- ஆம் தேதி இந்த விமானம் இயக்கப்பட்டது. 68 இருக்கைகள் நிரம்பி இருந்தன. வர்த்தக ரீதியாக சென்னை - சேலம் - சென்னை வழித்தடத்தில் விமான சேவை திருப்திகரமாக இருந்து வந்தது. அதனால்தான் மாலை வேளையிலும் விமான சேவையைக் கொண்டு வருவதற்கான பணிகள் அப்போது நடந்தன. அதன்பின் என்ன நடந்ததோ தெரியவில்லை. அந்தப்பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன,'' என்றார். 

 

சேலத்தில் இருந்து மீண்டும் விமான சேவை தொடங்க உள்ள தகவல் வணிகர்கள், பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமரின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ போராட்டம்! (படங்கள்)

Published on 27/04/2024 | Edited on 27/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், மோடியின் மதவெறுப்பு பிரச்சாரத்தை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள இந்தியன் வங்கி அருகே பேரணியாக நடந்து சென்று  தேர்தல் ஆணையம் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். அப்போது எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட  போராட்டக்காரர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.

Next Story

தண்ணீர் தட்டுப்பாடு ; தாக்குபிடிக்குமா 'சென்னை'

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Water scarcity; Attacking 'Chennai'

கோடைகால வெயிலின் தாக்கம் தீவிரமடைந்திருக்கும் நிலையில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசும் மேற்கொண்டு வருகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் நீர்ச்சத்து குறைபாட்டை தடுக்கும் உப்பு சர்க்கரை கரைசல் எனும் ஓ.ஆர்.எஸ் கரைசலை ஆயத்தமாக வைத்திருக்க தமிழக சுகாதாரத்துறைக்கு அரசு அறிவுறுத்தல் கொடுத்துள்ளது. 

கோடை காலங்களில் நீர்ச்சத்து குறைபாடு மற்றும் வெயிலின் தாக்கத்தை தனித்து கொள்வதற்கான ஏற்பாடுகள் ஆகியவற்றைத் தாண்டி மூன்றாவது காரணியாக பார்க்கப்படுவது குடிநீர் தட்டுப்பாடு. சில இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக காலி குடங்களுடன் பொதுமக்கள் போராட்டம் நடத்துவது போன்ற செய்திகள் தென்படுவதே இதற்கான சான்று. அதேபோல் கோடை காலங்களில் தண்ணீர் தட்டுப்பாட்டை அதிகம் கையாளும் இடமாக சென்னை உள்ளது. பல்வேறு ஏரிகளில் உள்ள நீர் இருப்பை நம்பியே சென்னையின் குடிநீர் தட்டுப்பாடு நீக்கப்பட்டு வருகிறது.

சென்னைக்கு குடிநீர் வழங்குவதில் மிக முக்கியமான ஏரி புழல் ஏரி. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடி. தற்போது புழல் ஏரியில் இருக்கும் நீரின் அளவு 2,942 மில்லியன் கன அடி ஆகும். வினாடிக்கு 570 கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் புழல் ஏரியில் இருந்து வினாடிக்கு 217 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அடுத்து சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது சோழவரம் ஏரி. 1,080 மில்லியன் கன அடி மொத்த கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் தற்போது 118 மில்லியன் கன நீர் மட்டுமே உள்ளது. தற்போது நீர்வரத்து இல்லாத நிலையில் சோழவரம் ஏரியில் இருந்து 168 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.  அடுத்தது செம்பரம்பாக்கம் ஏரி. சென்னை குடிநீர் தேவையில் முக்கிய பங்காற்றுகிறது. மொத்தம் 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் தற்போது நீர் இருப்பு 2,384 மில்லியன் கன அடியாக இருக்கிறது. நீர்வரத்து இல்லாத நிலையில் வினாடிக்கு 46 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

சென்னையின் அடுத்த குடிநீர் ஆதாரம் பூண்டி ஏரி. 3,231 மில்லியன் கன அடி மொத்த கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் நீர் இருப்பு 978 மில்லியன் கன அடியாக உள்ளது. இந்த ஏரிக்கும் நீர்வரத்து இல்லாத நிலையில் வினாடிக்கு 525 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக இருக்கும் வீராணம் ஏரி வறண்டு காணப்படும் நிலை இருக்கிறது. 1,475 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் நீர் இருப்பு கணக்கிட முடியாத அளவிற்கு மிகவும் குறைவாக இருக்கிறது. வீராணம் ஏரியில் நீர்வரத்தும் இல்லை நீர் வெளியேற்றமும் இல்லாத சூழ்நிலை இருக்கிறது.

இப்படி மொத்தமாக சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11.75 டிஎம்சி ஆக இருக்கிறது. இதில் வீராணம் ஏரி முற்றிலும் வறண்டு விட்ட நிலையில் புழல், செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம் உள்ளிட்ட ஏரிகளில் தற்பொழுது 6.88 டிஎம்சி நீர் மட்டுமே இருக்கிறது. வரும் கோடை காலத்தில் இந்த அளவு தண்ணீரே சென்னையின் குடிநீர் பிரச்சனையை தீர்க்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.