Skip to main content

ஒப்பந்த ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு; அரசாணையை வெளியிட்ட தமிழ்நாடு அரசு!

Published on 16/03/2023 | Edited on 16/03/2023

 

Salary hike for contract teachers; The Tamil Nadu government issued an ordinance!

 

தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பிரிவு துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் ஒப்பந்த முறையில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு தொகுப்பு ஊதிய உயர்வு அளித்து தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. அதுமட்டுமின்றி புதிதாக நியமனம் செய்யப்படுபவர்களையும் சேர்த்து, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் வாரியம் கொடுத்த பரிந்துரையின் அடிப்படையில் இந்த ஊதிய உயர்வு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 

அரசாணையின் படி இடைநிலை ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் ரூ.12 ஆயிரமாகவும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் ரூ.15 ஆயிரமாகவும் முதுநிலை ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் ரூ.18 ஆயிரமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு தேர்வு வாரியத்தால் ஆசிரியர்கள் முறையாக நிரப்பப்படும் வரை ஒப்பந்த ஆசிரியர்களான இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.8 ஆயிரம் ரூபாயும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.9 ஆயிரம் ரூபாயும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு  ரூ.10 ஆயிரம் ரூபாயும் ஊதியமாக கடந்த 2017 ஆம் ஆண்டு வழங்கப்பட்டு வந்தது. 

 

ஒவ்வொரு ஆண்டும் ஊதியம் உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வந்ததன் அடிப்படையில், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின நலப்பிரிவு துறையின் கீழ் இயங்கும் தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் பணியாற்றக்கூடிய 221 ஆசிரியர்களுக்கும் புதிதாக நிரப்பப்பட இருக்கும் 194 பணியிடங்களுக்கு சேர்த்து மொத்தமாக 415 தற்காலிக ஆசிரியர்களுக்கும் ஊதிய உயர்வு அளிக்கப்பட வேண்டும் என பழங்குடியின நலப்பிரிவு இயக்குநர் அரசுக்கு கடிதம் எழுதி இருந்தார். அதன் அடிப்படையில் ஒப்பந்த அடிப்படையில் அமைக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு திருத்தப்பட்ட ஊதியம் வழங்கப்பட இருப்பதாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலவாரியம் தெரிவித்துள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இடைநிலை ஆசிரியர் பணியிடங்களின் விண்ணப்பதாரர்களுக்கு; முக்கிய அறிவிப்பு வெளியீடு

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
 Important announcement For candidates of secondary teaching posts

அரசுப் பள்ளிகளில் 1768 காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு தேதியை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி அறிவித்த நிலையில், இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்துள்ளது. 

இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், ‘ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் இடைநிலை ஆசிரியர் 2024 ஆம் ஆண்டிற்கான காலிப்பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டு விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய 15.03.2024 மாலை 5.00 மணிவரை கால அவகாசம் வழங்கப்பட்டது. 

இந்நிலையில், விண்ணப்பதாரர்கள் பலரும் இணையவழியாக விண்ணப்பம் பதிவேற்றம் செய்ய கூடுதல் கால அவகாசம் கோரியுள்ளனர். அதனடிப்படையில் மேற்கண்ட பணியிடங்களுக்கு இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய கடைசி தேதி 15.03.2024இல் இருந்து 20.03.2024 மாலை 5.00 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

மேலும், விண்ணப்பதாரர்கள் தங்களது இணையவழி விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ளவும் அவகாசம் வழங்க கோரியதின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர் பணியிடத்திற்கு விண்ணப்பித்து கட்டணம் செலுத்தியவர்கள் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள விரும்பினால் 21.03.2024 முதல் 23.03.2024 மாலை 5.00 மணி வரை திருத்தம் செய்ய ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும், விண்ணப்பதாரர்கள் திருத்தங்கள் மேற்கொள்ளும்போது கீழ்க்காணும் வழிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை கவனமாக பின்பற்றும்படி அறிவுறுத்தப்படுகிறது. இணையவழி விண்ணப்பத்தை சமர்ப்பித்து தேர்வுக்கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் மட்டுமே தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய அனுமதிக்கப்படுவர். விண்ணப்பதாரர்கள் தங்களது விவரங்களை திருத்தம் செய்து புதுப்பித்தவுடன், முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரைக்கும் உள்ள ‘சமர்ப்பி’ பொத்தானை அழுத்தி விண்ணப்பத்தில் செய்யப்பட்ட மாற்றங்களை உறுதி செய்யவேண்டும். அவ்வாறு செய்யவில்லை எனில் செய்யப்பட்ட மாற்றங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. கடைசியாக உள்ள சமர்ப்பி பொத்தானை அழுத்தி உறுதி செய்யவில்லை எனில், அவர்களின் விண்ணப்பம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது. முந்தைய விவரங்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் மாற்றங்களை செய்து விண்ணப்பத்தை சமர்ப்பித்தபின் அதில் எந்த மாற்றங்களையும் செய்யக்கூடாது.

திருத்தம் மேற்கொள்ளும் விண்ணப்பதாரர்கள், திருத்தம் மேற்கொள்ளும் குறிப்பிட்ட இடத்தில் உரிய திருத்தம் மேற்கொண்ட பின்பு தொடர்ச்சியாக அடுத்த பகுதிகளையும் சரிபார்க்க வேண்டும். ஏனெனில் சில பகுதிகளில் திருத்தம் செய்யும்பொழுது, மற்ற பகுதிகளிலும் மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படும். திருத்தம் செய்த பின்னர் Print Preview Page சென்று அனைத்தும் சரியாக உள்ளபட்சத்தில் Declaration-ல் ஒப்புதல் அளித்த பின்னரே தங்களின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும்.

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தில் எந்தவொரு மாற்றமும் செய்யவில்லை எனில் முந்தைய தரவுகளே பரிசீலிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றில் மாற்றங்கள் செய்ய இயலாது. இனம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சார்ந்த விவரங்களில் திருத்தம் இருப்பின் விண்ணப்பதாரர் செலுத்திய கட்டணத் தொகையில் ஏற்படும் மாற்றங்களுக்கு விண்ணப்பதாரரே பொறுப்பாவார்.

விண்ணப்பத்தில் கட்டணத்தொகையில் திருத்தம் செய்ய வேண்டியிருப்பின் கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டிய விண்ணப்பதாரர் தேர்வுக்கான முழு கட்டணத்தொகையினை மீண்டும் செலுத்த வேண்டும். விண்ணப்பத்தில் கட்டணத்தொகையில் திருத்தம் செய்யும் போது குறைவாக கட்டணம் செலுத்த வேண்டியிருப்பின், விண்ணப்பதாரர் ஏற்கெனவே செலுத்திய கட்டணத்தின் மீதித்தொகை திரும்ப வழங்கப்படமாட்டாது. மேலும், இனிவரும் காலங்களில் திருத்தம் தொடர்பாக எவ்வித கோரிக்கைகளும் பரிசீலனை செய்யப்படமாட்டாது என தெரிவிக்கப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

ஆசிரியர்கள் போராட்டம்; 136 பேர் கைது

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
136 teachers who went to besiege the education department office were arrested

கடலூரில் மாவட்ட கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிடச் சென்ற இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் 136 பேரை போலீஸார் கைது செய்தனர். 

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்; தொடர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களைக் கைது செய்யும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் கடந்த இரண்டு நாட்களாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு எட்டாததால் நேற்று மாவட்ட கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட கடலூர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டனர். 

பின்னர் இயக்கத்  தலைவர் கனகராஜன் தலைமையிலும், செயலாளர் பிரபாகரன், பொருளாளர் சிவானந்தம், துணைத் தலைவர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலையிலும் ஊர்வலமாகச் செல்லத் தயாரானார்கள். அப்போது அங்கு சென்ற கடலூர் புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி தலைமையிலான போலீஸார் அவர்களை வழி மறித்து 136 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மாலை அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.