வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம், பரிசுப் பொருட்களைப் பட்டுவாடா செய்கிறார்களா என்பதைக் கண்காணிக்க பறக்கும் படை குழுவினர் தீவிர சோதனைகளில் ஈடுபட்டுவருகின்றனர். அதேசமயம் காய்கறி வியாபாரிகள், மாட்டு வியாபாரிகள், மளிகைக் கடை வியாபாரிகள் எடுத்துச் செல்லும் பணத்தையும் பிடிப்பதாக அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுகிறது. 17ஆம் தேதி காலை ஈரோடு வீரப்பம்பாளையம் பிரிவு அருகே பறக்கும் படை குழு அதிகாரி பிரபு தலைமையில், அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்தது. அந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர் அதிகாரிகள். சோதனையில் அந்த காரில் ரூபாய் 35 லட்சத்து 50 ஆயிரம் பணம் இருந்தது. ஆனால், அந்தப் பணத்திற்குரிய ஆவணங்கள் இல்லை. காரை ஓட்டி வந்தவர் நசீர் ஷேக் முகமது பாஷா என்பவர், தான் மார்கெட்டில் பழ வகைகளின் மொத்த வியாபாரி என அதிகாரிகளிடம் தெரிவித்தார். ஆனால், பறக்கும் படை குழுவினர் உரிய ஆவணம் கேட்டனர். அதற்கு அவர், “இது, வெளியூரிலிருந்து பழங்கள் அனுப்பிய ஏஜென்ட்டுகளுக்கு கொடுக்க வேண்டிய பணம். இதற்கெல்லாம் என்னிடம் ரசீது இல்லை” என்றார். அதனால், அதிகாரிகள் அந்தப் பணத்தைக் கைப்பற்றி ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தனர். அதேபோல் எப்போது வேண்டுமானாலும் இந்தப் பணத்திற்குரிய ஆவணங்களைக் காட்டி பணத்தை நீங்கள் பெற்றுச் செல்லலாம் என அலுவலர்கள் கூறியிருக்கின்றனர்.