Skip to main content

பட்டப்பகலில் என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி; யார் இந்த நீராவி முருகன்?

Published on 16/03/2022 | Edited on 16/03/2022

 

ROWDY NEERAVI MURUGAN POLICE ENCOUNTER

 

தூத்துக்குடி மாவட்டம், புதியம்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். அடிப்படையில் சலவைத் தொழிலாளி குடும்பத்தைச் சார்ந்தவர். துணிகளுக்கு நீராவி வைக்கும் பழக்கம் என்பதால் நீராவி முருகன் என்றழைக்கப்பட்டவர்.

 

சகாக்களை சேர்த்துக் கொண்டு சின்ன சின்ன திருட்டுக்களில் ஈடுபட்டுவந்தவன். பெண்களுடன் சகவாசம் வைத்துக் கொண்டு ஊர் சுற்றுகிறவன் நீராவி முருகன். தூத்துக்குடி, நெல்லை பகுதிகளில் இவன் மீது பல திருட்டு கேஸ்கள் பதிவாகியுள்ளன.

 

காலப் போக்கில் தன்னுடைய திருட்டுகளை சென்னை, சேலம், ஈரோடு, நாமக்கல் என்று விரிவுபடுத்திய நீராவி முருகன், பல வழக்குகளால் ரவுடி லிஸ்ட்டில் வைக்கப்பட்டவன். கூலிக்கு ஆளை அடிக்கும் கூலிப்படைத் தலைவனாக மாறிய நீராவி முருகன் கொலைச் செயலுக்கு தனது ஆட்களையும் அனுப்பி வந்திருக்கிறான்.

 

ROWDY NEERAVI MURUGAN POLICE ENCOUNTER

 

கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு சென்னை வேளச்சேரியில் ஒரு டீச்சரிடம் செயின் பறித்ததில் சி.சி.டி.வி. காட்சியின் மூலம் வேளச்சேரி போலீசிடம் சிக்கியதால், இவனது திருட்டு எம்மோவை அறிந்த வேளச்சேரி போலீசார், நீராவி முருகனின் காலை ஒடித்து விட்டதால் சற்று விந்தி விந்தி நடக்கிற நிலைக்கு ஆளானான்.

 

கடந்த 2011-ன் போது தூத்துக்குடியின் தி.மு.க. மாவட்ட துணை செயலாளரான ஏ.சி.அருணாவுக்கும், வேறு சிலருக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பட்டப்பகலில் வீட்டினருகே ஏ.சி.அருணா வெட்டிக் கொல்லப்பட்டதில் கூலிப்படையாக நீராவி முருகன் முன் நின்று செயல்பட்டு வழக்கில் மாட்டியவன். இந்தக் கொலை வழக்கின் மூலம் தான் நீராவி முருகனின் பெயர் வெளி உலகில் பிரபலமாகி, ரவுடி என்கிற அடையாளத்தைக் கொடுத்திருக்கிறது. மூன்று கொலை வழக்குகள் மற்றும் 30- க்கும் மேற்பட்ட பிற வழக்குகளில் இருந்ததால், நீராவி முருகனை ஈரோடு போலீசார் பிடிக்க திட்டமிட்ட போது தப்பியிருக்கிறான்.

 

இதையடுத்தே திண்டுக்கல் மாவட்டத்தின் ஒட்டன்சத்திரத்தில் நடந்த 150 பவுன் நகை கொள்ளையில் தொடர்புடைய அவனைப் பிடிப்பதற்காக பழனி எஸ்.ஐ.இசக்கிராஜாவின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடப்பட்டு வந்தான் நீராவி முருகன். இந்த டீம் ஏ.டி.எஸ்.பி.லாவண்யா தலைமையில் செயல்பட்டது.

 

ROWDY NEERAVI MURUGAN POLICE ENCOUNTER

 

தூத்துக்குடி மாவட்ட மணியாச்சிப் பக்கமுள்ள பாறைக் குட்டத்தைச் சேர்ந்த எஸ்.ஐ.இசக்கிராஜா, கடந்த 2020- ன் போது கோவில்பட்டியில் எஸ்.ஐ.யாகப் பணியிலிருந்தவர். எதையும் துணிச்சலாக எதிர்கொள்ளும் எஸ்.ஐ. இசக்கிராஜா, ”என்னுடைய காவல் லிமிட்டில், ரவுடியோ, திருடர்களோ இருந்தால் வெளியேறிடுங்க; இல்லன்னா என் துப்பாக்கி தான் பேசும். என்கவுன்ட்டர் தான்” என தன்னுடைய ஃபேஸ்புக்கிலும், பதிவிட்டவர் அதனை  ஆடியோவாகவும் வெளியிட்டது சர்ச்சையாகியிருக்கிறது. 

 

ஆனால், அதன் காரணமாகவே அவரது காவல் லிமிட்டில் குற்றங்கள் குறைந்திருக்கின்றன. இந்த நிலையில் தான் எஸ்.ஐ.இசக்கி ராஜாவின் டீம் நீராவி முருகனைப் பல இடங்களில் தேடியுள்ளது. நீராவி முருகனும், எஸ்.ஐ.இசக்கிராஜாவும் அருகருகே உள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் நீராவி முருகன் பற்றிய துல்லிய தகவல்களை விரல்நுனியில் வைத்திருப்பவர் இசக்கிராஜா என்பதால் அவரிடம் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார் ஏ.டி.எஸ்.பி.லாவண்யா.

 

கடந்த பிப் 15 அன்று ஒட்டன்சத்திரத்தில் டாக்டர் சக்திவேல் வீட்டில் 150 பவுன் நகைகளைக் கொள்ளையடித்த நீராவி முருகன், அவரது காரையும் திருடிச் சென்ற மிகப் பெரிய கொள்ளை என்பதால், எஸ்.ஐ. இசக்கிராஜா அவனுக்குப் பொறி வைந்தவர் அவனது செல்போனை டிரேஸ் செய்ததில் நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியை மூன்று நாட்களாகக் காட்டியிருக்கிறது.

 

ROWDY NEERAVI MURUGAN POLICE ENCOUNTER

 

அதனால் சற்றும் தாமதிக்காத எஸ்.ஐ. இசக்கிராஜா டீம், களக்காட்டில் பதுங்கியிருந்த நீராவி முருகனை வளைத்திருக்கிறார்கள் தன்னுடைய 5001 பதிவு எண் கொண்ட இன்னோவா காரில் தப்பிய நீராவி முருகனை அப்படியே வளைத்த எஸ்.ஐ. இசக்கிராஜா டீம், பகல் 11.00 மணியளவில் நாங்குநேரியின் பக்கமுள்ள கடம்போடுவாழ்வு கிராமத்தின் பிரிவுச் சாலையின் மீனவன்குளம் யூகலிப்ட்ஸ் மரக்காடுகளுக்குக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள். 

 

அந்தப் பகுதியில் வைத்து விசாரணை என்று போய்க் கொண்டிருந்த நேரத்தில் தான் நீராவி முருகன்போலீஸார் மீது தாக்குதல் நடத்தியதால் எஸ்.ஐ.முத்துராஜாவால் என்கவுண்டர் செய்ப்பட்டிருக்கிறான். இதில் எஸ்.ஐ.இசக்கிராஜாவுக்கு தலையில் வெட்டு; காவலர்களான சத்தியராஜ், கனகமணிக்கும் வெட்டு விழுந்திருக்கிறது என்கிறார்கள்.

 

ROWDY NEERAVI MURUGAN POLICE ENCOUNTER

 

தன்னுடைய பணியில் சிறப்பாகச் செயல்பட்டதால் எஸ்.ஐ.இசக்கிராஜா, டி.ஜி.பி.சைலேந்திரபாபுவிடமிருந்து விருதும் பெற்றிருக்கிறார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.