Skip to main content

பொதுமக்கள் கூடும் 27 இடங்களில் கட்டுப்பாடு – மாநகர காவல்துறை அறிவிப்பு!

Published on 03/08/2021 | Edited on 03/08/2021

 

Restrictions on 27 public places - Metropolitan Police notice

 

திருச்சி மாநகரக் காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த அரசு முனைப்பான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதோடு, அதிகரித்துவரும் நோய்த் தொற்று பரவலைக் கருத்தில்கொண்டு, ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளை அரசு விதித்துள்ளது. இருப்பினும், பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணியாமலும், தனிமனித இடைவெளியினைக் கடைப்பிடிக்காததாலும் நாளுக்கு நாள் நோய்த் தொற்று அதிகரித்துவருவதால், பொதுமக்களின் நலனைக் கருத்தில்கொண்டு, முழு ஊரடங்கு 31.07.2021 முதல் 09.08.2021 வரை நீட்டிப்பு செய்யப்பட்டு, அமலில் உள்ளது.

 

திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட காவல் நிலைய பகுதிகளில் மக்கள் அதிகம் கூடும் 27 இடங்கள் கண்டறியப்பட்டு, அந்த இடங்களில் முகக்கவசம் அணியாமல் வருபவர்கள் மற்றும் அரசு உத்தரவை மீறுபவர்களைத் தடுக்க சிறப்பு சோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நேற்று (02.08.2021) காவல் துணை ஆணையர், குற்றம் மற்றும் போக்குவரத்து, திருச்சி மாநகரம் தலைமையில் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு சார்பாக அண்ணா சிலை ரவுண்டானாவில் சிறப்பு வாகன சோதனை மையம் அமைக்கப்பட்டு, முகக்கவசம் மற்றும் தனிமனித இடைவெளியினைக் கடைப்பிடித்தல், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுவது பற்றி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு அறிவுரைகள் வழங்கப்படுகிறது.

 

மேலும் அரசின் தடை உத்தரவை மீறி முகக்கவசம் அணியாமல் வந்த 911க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் மற்றும் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காத 81 நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ரூபாய் ஐந்து லட்சம் மட்டும் (ரூ. 5,00,000/-) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கரோனா நோய்த் தொற்று பரவலின் காரணமாக இன்று (03.08.2021) நடைபெற இருக்கும் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை, வடக்கு வாசல் (கொள்ளிடம் ஆறு), தில்லை நாயகம் படித்துறை, அய்யாளம்மன் படித்துறை, கீதாபுரம் படித்துறை, ஓடத்துறை ஆகிய படித்துறைகள் மூடப்பட்டுள்ளன.

 

மேலும், பொதுமக்கள் மேற்படி காவேரியாற்றின் கரைகளில் கூடி வழிபாடு செய்வதற்கும், கூடுவதற்கும் மாவட்ட நிர்வாகத்தால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் யாரும் காவேரியாற்றின் கரைகளில் வழிபாடு செய்வதற்கு வர வேண்டாம், எதிர்வரும் கரோனா மூன்றாம் அலையின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த தற்போதிலிருந்து பொதுமக்கள் அரசின் கரோனா நோய்த் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டுமென திருச்சி மாநகரக் காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்