Skip to main content

வரதட்சணை கொடுமை... பெண் தற்கொலை... போலீஸ் விசாரணை..!

Published on 26/11/2021 | Edited on 26/11/2021

 

 the relatives who had gathered in front of the house screaming

 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆனத்தூர் என்கிற ஊரைச் சேர்ந்தவர் தினகரன். இவரது மகள் அபிதாவுக்கும் (23), அதே பகுதியில் உள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் தட்சிணாமூர்த்திக்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பெற்றோர்கள் பார்த்து பேசி திருமணம் நடத்தி வைத்துள்ளனர். திருமணம் நடந்த சில நாட்களிலிருந்தே தட்சிணாமூர்த்தி குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு அபிதாவை கொடுமைப்படுத்திவந்துள்ளனர். கொடுமை தாங்க முடியாமல் தாய் வீட்டிற்கு வந்துவிட்டார் அபிதா. அதன்பிறகு உறவினர்கள் தரப்பில் ஒன்றுகூடி அபிதாவை வைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் கடந்த 21ஆம் தேதி ஆலம்பூண்டியிலுள்ள அவரது கணவர் தட்சிணாமூர்த்தி வீட்டில் விட்டுவிட்டு வந்துள்ளனர்.

 

இந்த நிலையில், மறுநாள் 22ஆம் தேதி தட்சிணாமூர்த்தி தந்தை ஆறுமுகம் அபிதாவின் தாயார் சம்பூர்ணத்திற்கு ஃபோன் செய்து, உனது மகள் அபிதா தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார் என்று கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சம்பூர்ணம் மற்றும் அவரது உறவினர்கள் அலறியடித்துக்கொண்டு ஆலம்பூண்டிக்கு விரைந்து சென்றனர். மகளின் உடலைப் பார்த்து கதறி அழுத அவர்கள், அபிதாவின் சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்தனர். அதேபோல் ஏற்கனவே வரதட்சணை கேட்டு அவரை கொடுமைப்படுத்திவந்த நிலையில், அவர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறுவது சந்தேகமாக உள்ளது எனவும் கூறியுள்ளனர்.

 

மேலும், அபிதாவை கணவர் தட்சிணாமூர்த்தி, மாமனார் ஆறுமுகம், கணவரது அக்கா முத்துலட்சுமி, மாமியார் மல்லிகா, கணவரது சகோதரி பாக்கியலட்சுமி, மாமனாரின் அண்ணன் முருகன் ஆகியோர் கொடுமைப்படுத்தியுள்ளனர் என்று கூறி அபிதாவின் தந்தை சம்பூரணம் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவுசெய்து அபிதாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து திண்டிவனம் சார் ஆட்சியர் அமித் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி அபிதாவின் உடல் பிரேதப் பரிசோதனை செய்வது கால தாமதம் ஆகியுள்ளது.

 

இதனால் பெண்ணின் உறவினர்கள் ஆத்திரமடைந்து செஞ்சி அரசு மருத்துவமனை எதிரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த செஞ்சி டிஎஸ்பி இளங்கோவன், சப் இன்ஸ்பெக்டர் நடராஜன் உள்ளிட்ட போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட அபிதாவின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து திண்டிவனம் சார் ஆட்சியர் அமித் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்திய பின்னர், மருத்துவர்கள் பிரேதப் பரிசோதனை செய்தனர். இதனால் செஞ்சி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்