Skip to main content

ரியல் எஸ்டேட் அதிபர் சுட்டுக்கொலை! நால்வருக்கு போலீஸார் வலை!!

Published on 26/05/2021 | Edited on 26/05/2021

 

Real Estate person passes away

 

தளி அருகே ரியல் எஸ்டேட் அதிபரைத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற வழக்கில் அவருடைய நண்பர் உள்ளிட்ட நான்கு பேரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

 

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே உள்ள பெல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரப்பா. இவருடைய மகன் லோகேஷ் (36). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவருடைய மனைவி ஜெயந்தி (30). லோகேஷூம், தளி அருகே உள்ள குருபரப்பள்ளியைச் சேர்ந்த சம்பங்கி ராமரெட்டி மகன் யதுபூசன் ரெட்டி (45) என்பவரும் நண்பர்கள். ஞாயிற்றுக்கிழமை (மே 23ம் தேதி) இரவு, யதுபூசன் ரெட்டி தனது நண்பர்கள் மூன்று பேருடன் லோகேஷின் வீட்டிக்கு காரில் வந்துள்ளார். 

 

இரவு நேரம் என்பதால் வீட்டில் இருப்போருக்குத் தொந்தரவாக இருக்கும் எனக்கூறி, லோகேஷை வீட்டுக்கு வெளியே வருமாறு அழைத்துப் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது திடீரென்று யதுபூசன் ரெட்டி தான் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து லோகேஷை சுட்டுள்ளார். ரத்த வெள்ளத்தில் அவர் அலறியபடி கீழே சரிந்து விழுந்தார்.

 

இதையடுத்து, யதுபூசன் ரெட்டி உள்ளிட்ட நான்கு பேரும் காரில் ஏறி மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுவிட்டனர். துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டு வீட்டுக்குள் இருந்து வெளியே ஓடி வந்த ஜெயந்தி, அங்கே கணவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

 

அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மருத்துவர்கள் பரிசோதனையில் வரும் வழியிலேயே லோகேஷ் இறந்து விட்டது தெரிய வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை காவல்துறை டி.எஸ்.பி. சங்கீதா, தளி காவல்நிலைய ஆய்வாளர் சரவணன் மற்றும் காவலர்கள் சம்பவ இடம் விரைந்தனர். அவர்கள் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

 

காவல்துறையினரின் முதல்கட்ட விசாரணையில் பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளன. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த லோகேஷிடம், யதுபூசன் ரெட்டி அவசரத் தேவைக்காக 5 லட்சம் ரூபாய் கேட்டுள்ளார். லோகேஷ் பிடிகொடுக்காமல் இருந்துள்ளார். 

 

இந்தப் பணத்தை எப்படியும் வாங்கி விட வேண்டும் என்ற நோக்கத்தில்தான் சம்பவத்தன்று யதுபூசன் ரெட்டி நண்பர்களுடன் லோகேஷின் வீட்டுக்கு வந்துள்ளார். அன்றிரவும் அவர் பணம் கொடுக்க முடியாது எனக் கறாராகக் கூறியதால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரத்தில் யதுபூசன் ரெட்டி தனது கைத்துப்பாக்கியால் அவரை சுட்டுக்கொன்று விட்டுத் தப்பிச்சென்றிருப்பது தெரிய வந்துள்ளது.

 

எனினும், கொலை செய்யும் நோக்கத்துடன்தான் கூட்டாளிகளுடன் யதுபூசன் சம்பவ இடத்துக்கு வந்தாரா? அவர்களுக்குள் வேறு ஏதாவது முன்விரோதம் உள்ளதா என்பது குறித்தும் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே, தலைமறைவான குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெல்லூர் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இப்படி ஆகும்னு நினைக்கல..”-உடைந்தே போனார் நிர்மலா தேவி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
"I didn't think it would happen like this.."- Nirmala Devi was devastated!

2018 ஏப்ரல் 5ஆம் தேதி முதன்முதலில் நிர்மலாதேவியைத் தொடர்புகொண்டு  ‘கல்லூரி மாணவிகளிடம் ஏன் இப்படி பேசினீர்கள்?’ என்று கேட்டபோது  “நான் மாணவிகளிடம் பேசிய ஆடியோ உங்க (நக்கீரன்) கைக்கு எப்படி வந்துச்சு? அந்த ஆடியோவைத் தந்தவர்கள் எதுவும் சொன்னார்களா? நான் ஏற்கெனவே போன்ல பேசி ஏதேதோ பிரச்சினைகள் ஆயிருச்சு. இது குறித்து போன்ல பேச வேண்டாமே.. நேரில் பேசலாமே!” என்று பதற்றத்துடன் பேசினார்.

அதன்பிறகு, செய்தி சம்பந்தமாக அவரிடமிருந்து விளக்கம் பெறுவதற்காக பல தடவை கைபேசி மூலம் பேசியிருக்கிறோம்.  சில நேரங்களில், நிர்மலாதேவி தனது சொந்த வருத்தங்களை நம்மிடம் பதிவு செய்திருக்கிறார். “உண்மையிலேயே நான் யார்? எப்படிப்பட்டவள்? என்னுடைய இன்னொரு பக்கம் பலருக்கும் தெரியாது.” என்று மனம் திறந்திருக்கிறார். அப்போது, தனக்கிருந்த சுற்றுச்சூழல் ஆர்வத்தையும்,  தாவரங்கள், மரங்கள்  குறித்த அக்கறையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

2024 ஏப்ரல் 29ஆம் தேதி குற்றவாளி எனத் தீர்ப்பு அறிவிப்பதற்கு முன், பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த நிர்மலாதேவியிடம் பேச்சுக் கொடுத்தோம். பழைய நினைவையும் பேச்சையும் அறவே மறந்திருந்த அவர், மிகவும் சன்னமான குரலில் “மாணவிகள்கிட்ட போன்ல பேசுனது இந்த அளவுக்கு சீரியஸா ஆகும்னு நான் நெனச்சே பார்க்கல. அந்தப் பேச்சுக்காக, இந்த நேரம் வரைக்கும் நான் கோர்ட்டுக்கு வந்துபோறது, ஜெயிலுக்குள்ள இருந்ததுன்னு எல்லாமே நடந்திருச்சு. இந்தச் சட்ட நடவடிக்கைகளை எல்லாம் அறியாதவளா அப்ப நான் இருந்திருக்கேன்.” என்று உடைந்துபோய் பேசியவரிடம்,  உடல்நலம் குறித்து விசாரித்தோம்.

“எனக்கு இருக்கிற உளவியல் பாதிப்பு முற்றிலுமா இன்னும் சரியாகல.” என்று சொன்னபோது  ‘நிர்மலாதேவி வகையறா..’ என்று நீதிமன்ற அரங்கத்திலிருந்து சத்தமாக அழைப்புவர, விறுவிறுவென்று உள்ளே சென்றுவிட்டார். இவ்வழக்கில் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிரிகளான உதவிப் பேராசிரியர் முருகனுக்கும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கும் விடுதலையை அறிவித்ததோடு,   நிர்மலாதேவி குற்றவாளி என்பதை ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன்றத்தின் நீதிபதி பகவதி அம்மாள்  உறுதி செய்துவிட்டு,  “கூண்டில்போய் நில்லுங்க..” என்று உத்தரவிட, நடை தளர்ந்து, சோகம் அப்பிய முகத்துடன் கூண்டில் ஏறி நின்றார் நிர்மலாதேவி. அப்போது ஒரு இளம் வழக்கறிஞர் “ஒருவர் என்ன படித்திருந்தால் என்ன? எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தால் என்ன? தெரிந்தே தவறிழைத்தால், சட்டத்தின் பார்வையில் அது குற்றமென்றால், தண்டனையிலிருந்து தப்பவே முடியாது.” என்று நம் காதில் விழும் அளவுக்கு கமெண்ட் அடித்தார். 

Next Story

கள்ளச்சாராய விற்பனை வீடியோ வெளியாகிப் பரபரப்பு; கேள்வியெழுப்பும் சமூக ஆர்வலர்கள்

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A video of the sale of counterfeit liquor has been released and there is a stir; Questioning Social Activists

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள மலைப்பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. அவ்வப்போது காவல்துறையினர் மலைப்பகுதிகளுக்கு சென்று கள்ளச்சாராயம் காய்ச்சப்படும் இடங்களைக் கண்டறிந்து கள்ளச் சாராய அடுப்புகள், சாராய ஊறல் மற்றும் மூலப்பொருட்களை அழித்து வருகின்றனர். இருப்பினும் அங்கு இடைவிடாமல் கள்ளச் சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது.

மலையில் இருந்து கொண்டு வரப்படும் கள்ளச்சாராய பாக்கெட்டுகளை வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான உதயேந்திரம், சி.விபட்டறை, மேட்டுப்பாளையம், கிரிசமுத்திரம்  தும்பேரி, தரைக்காடு, திம்மம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், வாணியம்பாடி நகரின் மையப்பகுதியான வாரச்சந்தை மைதானம், பேருந்து நிலையத்தின் பின்புறம், புதூர் ரயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு, பகலாக 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. இதேபோல் ஆம்பூர் அடுத்த உமராபாத் காவல் எல்லைக்குட்பட்ட மலைப்பகுதிகளில் ஆடு மேய்ப்பது போலும், விறகு எடுப்பவர்கள் போலும் ஆண் பெண் என இருபாலரும் கள்ளச்சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அரசு மதுபாட்டிலை விட கள்ளச்சாராயம் குறைந்த விலையில் கிடைப்பதால், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து குடிமகன்கள் கூட்டம் கூட்டமாக  ஏராளமானோர்,  இருசக்கர வாகனங்கள் மூலம்  கள்ளச்சாராய விற்பனை செய்யும் இடங்களுக்கு படையெடுக்கின்றனர். வாணியம்பாடி பாலாற்றில் திறந்த வெளியில்  பட்டப் பகலில்  கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் அதனை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக வாங்கி செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடியில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறை அலுவலகம்  இயங்கி வருகிறது. ஆனால்  வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 24 மணி நேரமும் நடக்கும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாதாமாதம் லட்சங்களில் மாமூல் வாங்கிக் கொண்டு எஸ்பி அலுவலகம் வரை பங்கு தந்துவருவதால் கள்ளச்சாராய விற்பனையைத் தடுப்பதில்லை. பெயருக்கு மாத கணக்கு காட்ட வேண்டும் என வழக்கு மட்டும் பதிவு செய்து அவர்களை முன் ஜாமீனில் வெளியே விடுகின்றனர். இதனால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை முற்றிலும் கள்ளச் சாராயத்திற்கு அடிமையாகி வரும் சூழல் தொடர்ந்து வருகிறது. இது குறித்து காவல் உயர் அதிகாரிகள்  தனிப்படை அமைத்து கள்ளச் சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.