மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி நள்ளிரவில், ஓம் பகதூர் என்ற பாதுகாவலர் கொலை செய்யப்பட்டு, ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக நீலகிரி மாவட்ட காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக, நீலகிரி அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்துவருகிறது. அடுத்தக்கட்ட விசாரணை அக்டோபர் 2ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்த வழக்கு தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் படை அதிகாரிகள், கொடநாடு பங்களாவுக்குச் சென்று விசாரணை செய்துள்ளனர்.
அதேபோன்று இந்த வழக்கு சம்பந்தமான சாட்சிகளிடம் போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டுவருகிறார்கள். இந்நிலையில், கொடநாடு பங்களாவில் கணிணி ஆப்பரேட்டராக இருந்த தினேஷ், இந்தக் கொள்ளை சம்பவம் நடைபெற்ற சில வாரங்களில் தற்கொலை செய்துகொண்டார். தன் மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அப்போதே தினேஷின் அப்பா, சகோதரி ஆகியோர் குற்றம் சாட்டியிருந்தார்கள். இந்நிலையில், இந்த வழக்கில் மறுவிசாரணை செய்யும் பொருட்டு, தினேஷ் தந்தை போஜனிடம் உதகை டிஎஸ்பி தலைமையிலான போலீசார் ரகசிய இடத்தில் விசாரணை நடத்திவருகிறார்கள்.