Skip to main content

10 வருஷமானாலும் பட்டா வாங்க முடியாது எனக் கூறிய தாசில்தார்; அதிரடி காட்டிய லஞ்ச ஒழிப்புத்துறை

Published on 15/02/2023 | Edited on 15/02/2023

 

ranipet arcot tahsildar patta name transfer issue

 

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த மாங்காடு கிராமத்தை சேர்ந்தவர் லோகப்பிள்ளை. இவரது வாரிசுதாரர்களுக்கு சொந்தமான 51 சென்ட் இடத்தை அரசு ஆவணத்தில் வருவாய்த் துறையினர் அரசு புறம்போக்கு இடம் என மாற்றி பதிவு செய்து விட்டனர். வருவாய்த்துறை செய்த இந்த தவறை பாதிக்கப்பட்ட வாரிசுதாரர்கள் திருத்த வேண்டும் எனக் கேட்டுள்ளனர். லோகப்பிள்ளையின் வாரிசுதாரரான திருவண்ணாமலை மாவட்டம், போளுர் செய்யானந்தல் கிராமத்தில் வசிக்கும் 43 வயதான சகாதேவன், கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் அதிகாரிகளுக்கு மனு அளிப்பது, முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு மனு அனுப்புவது எனச் செயல்பட்டு வந்துள்ளார். அந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தும் அதிகாரிகள், சக அதிகாரிகளின் தவறை மறைக்க பாதிக்கப்பட்டவரை அலைய விட்டுள்ளனர்.

 

ராணிப்பேட்டை ஆட்சியராக இதற்கு முன்பு இருந்த பாஸ்கர பாண்டியனிடம் மனு தந்து கடந்த 7 ஆண்டுகளாக அலைந்து கொண்டு இருப்பதாக தகவல் கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து கோட்டாட்சியரிடம் விசாரிக்கச் சொல்லியுள்ளார். வருவாய்த்துறை அதிகாரிகள் தவறு செய்துள்ளார்கள் என்பதை அறிந்து பட்டாவில் பெயர் மாற்றம் செய்து தர வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து நில அளவையர் மற்றும் வருவாய் ஆய்வாளர் குழு இடத்தினை அளந்து அந்த அறிக்கையை தாசில்தாருக்கு அனுப்பியுள்ளனர். பட்டா மாற்றம் செய்ய இணையதளம் வழியாக மனு செய்துள்ளனர். பெயர் மாற்றம் செய்ய ஆற்காடு தாசில்தார் சுரேஷ் 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இத்தனை ஆண்டுகளாக அலைந்து நான் என் நிலத்திற்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய உத்தரவு வாங்கியுள்ளேன். இது வருவாய்த்துறை செய்த தவறு. இதற்கு எனக்கு அலைச்சல். நான் பணம் தர முடியாது என்றுள்ளார். “பணம் தரலனா பட்டா பெயர் மாற்றம் செய்ய முடியாது. இன்னும் 10 வருஷம் ஆனாலும் நீ அலைஞ்சிக்கிட்டேதான் இருக்கணும்” என எகத்தாளமாகப் பேசியுள்ளார். 15 ஆயிரம் தந்தால் பட்டா பெயர் மாற்றித் தருகிறேன் என்றுள்ளார். அதனை சகாதேவன் ஒப்புக் கொண்டு வந்துள்ளார்.

 

தாசில்தார் சுரேஷின் பேச்சால் மன உளைச்சலுக்கு ஆளான சகாதேவன், வேலூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை  அலுவலகத்துக்கு சென்று புகார் தந்தார். புகாரை பெற்ற போலீசார் ரசாயனம் தடவிய நோட்டை தந்துள்ளனர். அதை நேற்று (14.02.2023) கொண்டு சென்று தாசில்தாரிடம் தந்த போது, அவர் தனது ஜீப் ஓட்டுநர் பார்த்திபனிடம் தரச் சொல்லியுள்ளார். இவரும் பணத்தை தர அதை வாங்கி பார்த்திபன் மற்றும் பணம் வாங்க சொன்ன சுரேஷ் ஆகிய இருவரையும் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி கணேசன், இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்