Skip to main content

58 கோடி ரூபாய் மோசடி புகார்; கூட்டுறவு வங்கிக்கு சொந்தமான 23 கிளைகளில் சோதனை! 

Published on 27/04/2023 | Edited on 27/04/2023

 

raid of 23 branches belonging to cooperative bank in Salem!

 

சேலத்தில் கூட்டுறவு வங்கியின் பெயரில், அதிக வட்டி தருவதாக ஆசை காட்டி, 58 கோடி ரூபாய் சுருட்டிய வழக்கில், கூட்டுறவு வங்கிக்குச்  சொந்தமான 23 கிளை அலுவலகங்களில் பொருளாதார குற்றப்பிரிவினர் சோதனை நடத்தினர்.     

 

சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் முனியப்பன் நகரைச் சேர்ந்தவர் ஜெயவேல் (67). இவர், சேலத்தை தலைமை இடமாகக் கொண்டு  அமுதசுரபி சிக்கன மற்றும் கூட்டுறவு கடன் சங்கம் என்ற பெயரில் கூட்டுறவு வங்கியை தொடங்கினார். இதில் தனது உறவினர்கள் தங்கபழம், பிரேம் ஆனந்த், சரண்யா ஆகியோரையும் பங்குதாரர்களாக சேர்த்துக் கொண்டார். இவர்கள், சேலம் மட்டுமின்றி, தமிழ்நாட்டின் பல  மாவட்டங்களிலும் அமுதசுரபி பெயரில் கிளை அலுவலகங்களையும் தொடங்கி நடத்தி வந்தனர். இந்த வங்கியில், குறுகிய கால இட்டு வைப்புகளுக்கு அதிக வட்டி வழங்கப்படும் என முதலீடு செய்தால் அறிவித்தனர். இந்த கவர்ச்சிகரமான  அறிவிப்பை நம்பி, ஏராளமான முதலீட்டாளர்கள் அமுதசுரபி கூட்டுறவு வங்கியில் முதலீடு செய்தனர். ஆனால் முதலீட்டாளர்களுக்கு  உறுதியளித்தபடி வட்டி வழங்கப்படாததோடு, அசல் தொகையையும் வழங்கவில்லை. ஒருகட்டத்தில், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் அலுவலகத்தை மூடிவிட்டு ஓட்டம் பிடித்தனர். இந்த நிலையில்தான் சேலம் அம்மாபேட்டை  தங்கசெங்கோடன் தெருவைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவர், கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் சேலம் பொருளாதார குற்றப்பிரிவு  காவல்துறையில் அமுதசுரபி கூட்டுறவு சங்கத்தில் நடந்த முறைகேடு குறித்து புகார் அளித்தார். அவரிடம் 2.92 லட்சம் ரூபாயை அமுதசுரபி  சங்கத்தினர் முதலீடாகப் பெற்று மோசடி செய்து விட்டதாகக் கூறியிருந்தார்.  

 

இதையடுத்து, இந்த சங்கத்தால் ஏமாந்த ஆயிரம் முதலீட்டாளர்கள் அடுத்தடுத்து புகார் அளித்தனர். முதல்கட்ட விசாரணையில், 58 கோடி  ரூபாயை ஏமாற்றி இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த புகார் குறித்து டிஎஸ்பி சீனிவாசன் தலைமையில் ஆய்வாளர் சித்ரா தேவி மற்றும் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர்  வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அமுதசுரபி கூட்டுறவு நிறுவனம், மாநிலம் முழுவதும் 85 இடங்களில் கிளை அலுவலகங்களை நடத்தி வந்துள்ளது. இவற்றில் ஏற்கனவே 20  இடங்களில் சோதனை நடத்தி, கணினிகள், ஹார்டுடிஸ்குகள் மற்றும் முதலீட்டாளர்கள் பற்றிய ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளனர்.     இந்நிலையில், மேலும் 23 இடங்களில் நேற்று முன்தினம் (ஏப். 25) பொருளாதார குற்றப்பிரிவினர் சோதனை நடத்தியுள்ளனர். சேலம்  தாதகாப்பட்டியில் செயல்பட்டு வந்த அமுதசுரபி கூட்டுறவு நிறுவன கிளை அலுவலகத்திற்கு டிஎஸ்பி சீனிவாசன் தலைமையில் காவலர்கள்  சென்றபோது அந்த அலுவலகம் காலி செய்யப்பட்டு இருந்தது தெரிய வந்தது.  

 

அதேபோல், சங்ககிரி & இடைப்பாடி சாலை மற்றும் அயோத்தியாபட்டணத்தில் இயங்கி வந்த அமுதசுரபி அலுவலகங்களும் சுத்தமாக  துடைத்து வைக்கப்பட்டது போல் காலி செய்துவிட்டு சென்றிருப்பது தெரிய வந்தது.     வாழப்பாடியில் ஆய்வாளர் சித்ராதேவி தலைமையிலான காவலர்களும், தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ஆகிய இடங்களில்  செயல்பட்டு வந்த அமுதசுரபி அலுவலகங்களில் ஆய்வாளர் முத்தமிழ் செல்வராஜன் தலைமையிலான குழுவினரும் சோதனை நடத்தினர்.       மேலும், கோவை, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருச்சி, திருப்பூர், நாமக்கல், கரூர், அரியலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் இயங்கி வந்த  அமுதசுரபி கூட்டுறவு வங்கி அலுவலகங்களிலும் சோதனை நடந்தது.     டிஎஸ்பி சீனிவாசன் தலைமையிலான பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இப்படி ஆகும்னு நினைக்கல..”-உடைந்தே போனார் நிர்மலா தேவி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
"I didn't think it would happen like this.."- Nirmala Devi was devastated!

2018 ஏப்ரல் 5ஆம் தேதி முதன்முதலில் நிர்மலாதேவியைத் தொடர்புகொண்டு  ‘கல்லூரி மாணவிகளிடம் ஏன் இப்படி பேசினீர்கள்?’ என்று கேட்டபோது  “நான் மாணவிகளிடம் பேசிய ஆடியோ உங்க (நக்கீரன்) கைக்கு எப்படி வந்துச்சு? அந்த ஆடியோவைத் தந்தவர்கள் எதுவும் சொன்னார்களா? நான் ஏற்கெனவே போன்ல பேசி ஏதேதோ பிரச்சினைகள் ஆயிருச்சு. இது குறித்து போன்ல பேச வேண்டாமே.. நேரில் பேசலாமே!” என்று பதற்றத்துடன் பேசினார்.

அதன்பிறகு, செய்தி சம்பந்தமாக அவரிடமிருந்து விளக்கம் பெறுவதற்காக பல தடவை கைபேசி மூலம் பேசியிருக்கிறோம்.  சில நேரங்களில், நிர்மலாதேவி தனது சொந்த வருத்தங்களை நம்மிடம் பதிவு செய்திருக்கிறார். “உண்மையிலேயே நான் யார்? எப்படிப்பட்டவள்? என்னுடைய இன்னொரு பக்கம் பலருக்கும் தெரியாது.” என்று மனம் திறந்திருக்கிறார். அப்போது, தனக்கிருந்த சுற்றுச்சூழல் ஆர்வத்தையும்,  தாவரங்கள், மரங்கள்  குறித்த அக்கறையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

2024 ஏப்ரல் 29ஆம் தேதி குற்றவாளி எனத் தீர்ப்பு அறிவிப்பதற்கு முன், பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த நிர்மலாதேவியிடம் பேச்சுக் கொடுத்தோம். பழைய நினைவையும் பேச்சையும் அறவே மறந்திருந்த அவர், மிகவும் சன்னமான குரலில் “மாணவிகள்கிட்ட போன்ல பேசுனது இந்த அளவுக்கு சீரியஸா ஆகும்னு நான் நெனச்சே பார்க்கல. அந்தப் பேச்சுக்காக, இந்த நேரம் வரைக்கும் நான் கோர்ட்டுக்கு வந்துபோறது, ஜெயிலுக்குள்ள இருந்ததுன்னு எல்லாமே நடந்திருச்சு. இந்தச் சட்ட நடவடிக்கைகளை எல்லாம் அறியாதவளா அப்ப நான் இருந்திருக்கேன்.” என்று உடைந்துபோய் பேசியவரிடம்,  உடல்நலம் குறித்து விசாரித்தோம்.

“எனக்கு இருக்கிற உளவியல் பாதிப்பு முற்றிலுமா இன்னும் சரியாகல.” என்று சொன்னபோது  ‘நிர்மலாதேவி வகையறா..’ என்று நீதிமன்ற அரங்கத்திலிருந்து சத்தமாக அழைப்புவர, விறுவிறுவென்று உள்ளே சென்றுவிட்டார். இவ்வழக்கில் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிரிகளான உதவிப் பேராசிரியர் முருகனுக்கும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கும் விடுதலையை அறிவித்ததோடு,   நிர்மலாதேவி குற்றவாளி என்பதை ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன்றத்தின் நீதிபதி பகவதி அம்மாள்  உறுதி செய்துவிட்டு,  “கூண்டில்போய் நில்லுங்க..” என்று உத்தரவிட, நடை தளர்ந்து, சோகம் அப்பிய முகத்துடன் கூண்டில் ஏறி நின்றார் நிர்மலாதேவி. அப்போது ஒரு இளம் வழக்கறிஞர் “ஒருவர் என்ன படித்திருந்தால் என்ன? எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தால் என்ன? தெரிந்தே தவறிழைத்தால், சட்டத்தின் பார்வையில் அது குற்றமென்றால், தண்டனையிலிருந்து தப்பவே முடியாது.” என்று நம் காதில் விழும் அளவுக்கு கமெண்ட் அடித்தார். 

Next Story

கள்ளச்சாராய விற்பனை வீடியோ வெளியாகிப் பரபரப்பு; கேள்வியெழுப்பும் சமூக ஆர்வலர்கள்

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A video of the sale of counterfeit liquor has been released and there is a stir; Questioning Social Activists

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள மலைப்பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. அவ்வப்போது காவல்துறையினர் மலைப்பகுதிகளுக்கு சென்று கள்ளச்சாராயம் காய்ச்சப்படும் இடங்களைக் கண்டறிந்து கள்ளச் சாராய அடுப்புகள், சாராய ஊறல் மற்றும் மூலப்பொருட்களை அழித்து வருகின்றனர். இருப்பினும் அங்கு இடைவிடாமல் கள்ளச் சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது.

மலையில் இருந்து கொண்டு வரப்படும் கள்ளச்சாராய பாக்கெட்டுகளை வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான உதயேந்திரம், சி.விபட்டறை, மேட்டுப்பாளையம், கிரிசமுத்திரம்  தும்பேரி, தரைக்காடு, திம்மம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், வாணியம்பாடி நகரின் மையப்பகுதியான வாரச்சந்தை மைதானம், பேருந்து நிலையத்தின் பின்புறம், புதூர் ரயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு, பகலாக 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. இதேபோல் ஆம்பூர் அடுத்த உமராபாத் காவல் எல்லைக்குட்பட்ட மலைப்பகுதிகளில் ஆடு மேய்ப்பது போலும், விறகு எடுப்பவர்கள் போலும் ஆண் பெண் என இருபாலரும் கள்ளச்சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அரசு மதுபாட்டிலை விட கள்ளச்சாராயம் குறைந்த விலையில் கிடைப்பதால், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து குடிமகன்கள் கூட்டம் கூட்டமாக  ஏராளமானோர்,  இருசக்கர வாகனங்கள் மூலம்  கள்ளச்சாராய விற்பனை செய்யும் இடங்களுக்கு படையெடுக்கின்றனர். வாணியம்பாடி பாலாற்றில் திறந்த வெளியில்  பட்டப் பகலில்  கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் அதனை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக வாங்கி செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடியில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறை அலுவலகம்  இயங்கி வருகிறது. ஆனால்  வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 24 மணி நேரமும் நடக்கும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாதாமாதம் லட்சங்களில் மாமூல் வாங்கிக் கொண்டு எஸ்பி அலுவலகம் வரை பங்கு தந்துவருவதால் கள்ளச்சாராய விற்பனையைத் தடுப்பதில்லை. பெயருக்கு மாத கணக்கு காட்ட வேண்டும் என வழக்கு மட்டும் பதிவு செய்து அவர்களை முன் ஜாமீனில் வெளியே விடுகின்றனர். இதனால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை முற்றிலும் கள்ளச் சாராயத்திற்கு அடிமையாகி வரும் சூழல் தொடர்ந்து வருகிறது. இது குறித்து காவல் உயர் அதிகாரிகள்  தனிப்படை அமைத்து கள்ளச் சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.