Skip to main content

சூரியனோ.. சந்திரனோ.. சட்டென சொல்லு தமிழரென!

Published on 01/09/2023 | Edited on 01/09/2023

 

The program director of the Aditya L1 solar probe hails from Tamil Nadu

 

இந்தியா சார்பில் சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்1 என்ற விண்கலத்தை நாளை (02-09-23) காலை 11.50 மணிக்கு இஸ்ரோ விண்ணுக்கு அனுப்ப உள்ளது. ஆந்திரா மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் ஆதித்யா எல்1 விண்கலம் ஏவப்பட உள்ளது. பி.எஸ்.எல்.வி. சி57 ராக்கெட் இந்த விண்கலத்தைச் சுமந்து செல்கிறது. சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல் 1 விண்கலம் ஆயிரத்து 475 கிலோ எடை கொண்டதாகும். பூமியில் இருந்து 1.5 மில்லியன் கி.மீ. தூரம் கொண்ட சூரியனின் லெக்ராஞ்சியன் புள்ளி 1-இல் நிலைநிறுத்தப்பட உள்ளது. இந்நிலையில், விண்ணில் பாயத் தாயாராக இருக்கும் ஆதித்யா எல்1 விண்கலத்தின் கவுண்டவுன் இன்று (01-09-23) காலை 11.50 மணிக்கு தொடங்கியது.

 

முன்னதாக நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய இந்தியா சார்பில் சந்திரயான் 3 விண்கலம் கடந்த ஜூலை மாதம் 14 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து அனுப்பிய சந்திரயான் 3 விண்கலம் கடந்த ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி  நிலவின் தென் துருவத்தில் இறங்கி சாதனை படைத்தது. உலகில் முதல் முறையாக நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்ய இந்தியா அனுப்பியுள்ள சந்திரயான் 3 விண்கலத்தின் திட்ட இயக்குநராக இருந்தவர் தமிழரான விழுப்புரத்தைச் சேர்ந்த வீரமுத்துவேல் ஆவார்.

 

அதே போல், நாளை சூரியனை ஆய்வு செய்வதற்காக விண்ணில் ஏவப்படும் ஆதித்யா எல்- 1 விண்கலத்தின் திட்ட இயக்குநர் தமிழகத்தைச் சேர்ந்த பெண் விஞ்ஞானியான நிகர் ஷாஜி உள்ளார். தமிழரான இவரின் சொந்த ஊர் தென்காசி மாவட்டம் செங்கோட்டை கலைமான் நபி பள்ளிவாசல் ஜமாத் பகுதியாகும். இவருடைய பெற்றோர் ஷேக் மீரான் மற்றும் சைத்தூன் பீவி. இவர், செங்கோட்டை எஸ்.ஆர்.எம் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்துள்ளார். மேலும், இவர் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்டத்தில் முதல் இடம் பிடித்துள்ளார். அதைத் தொடர்ந்து, நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் படித்த இவர், மேற்படிப்பை பிர்லா இன்ஸ்டிடியூட் டெக்னாலஜி நிறுவனத்தில் பயின்றுள்ளார். அதன் பின்னர், இஸ்ரோவில் பணியில் சேர்ந்தார்.

 

அதைத் தொடர்ந்து, பல்வேறு ஆராய்ச்சி பணிகளுக்காக அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் மற்றும் பல்வேறு நாடுகளுக்கு ஆராய்ச்சிக்காக சென்றுள்ளார்.  இவருடைய கணவர் ஷாஜகான் துபாயில் என்ஜினீயராக இருக்கிறார். இவர்களுடைய மகன் முகமது தாரிக் நெதர்லாந்து நாட்டில் விஞ்ஞானியாக இருக்கிறார். மகள், பெங்களூரில் படித்து வருகிறார்.  இந்த ஆதித்யா எல்-1 விண்கலம் முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை ஆகும். ஆதித்யா எல்-1 விண்கல திட்டம் வெற்றியடைந்தால் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஐரோப்பா கூட்டமைப்பிற்கு பிறகு சூரியனை ஆய்வு மேற்கொள்ளும் நாளாவது நாடாக இந்தியா சரித்திரத்தில் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கண்காணிப்பை தொடங்கியது ‘இன்சாட் 3டிஎஸ்’ செயற்கைக்கோள்!

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
'Insat 3DS' satellite started monitoring!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO - இஸ்ரோ), வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கை தகவல்களை முன்கூட்டியே பெறுவதற்காக ‘இன்சாட் - 3டிஎஸ்’ என்ற செயற்கைக்கோளை வடிவமைத்திருந்தது. இந்த செயற்கைக்கோள் ஆந்திரா மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. எப்-14 ராக்கெட் மூலம் கடந்த 17 ஆம் தேதி (17-02-2024) மாலை 5.35 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவான வானிலை செயற்கைக்கோளை சுமந்து சென்ற ஜி.எஸ்.எல்.வி. எப் -14 ராக்கெட் சுமார் 420 டன் எடை கொண்டதாகும். 2 ஆயிரத்து 274 கிலோ எடையுடன் 6 சேனல் இமேஜர் உட்பட 25 விதமான ஆய்வுக் கருவிகளுடன் வடிவமைக்கப்பட்ட இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள் மூலம் வானிலை மாற்றத்தை துல்லியமாகக் கண்டறிய முடியும் என்று இஸ்ரோ தெரிவித்திருந்தது.

இந்நிலையில் வானிலை ஆய்விற்காக அனுப்பி வைக்கப்பட்ட இன்சாட் - 3டிஎஸ் செயற்கைக்கோள் தனது கண்காணிப்பை தொடங்கியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 7 ஆம் தேதி இந்த செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் இஸ்ரோ வெளியிட்டுள்ளது. அதில் நிலமேற்பரப்பு, வெப்பநிலை, மூடுபனி தீவிரம் உள்ளிட்ட சுமார் 40க்கும் மேற்பட்ட தரவுகளை இந்த செயற்கைக்கோள் வழங்க உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

விண்வெளி செல்லும் இந்திய வீரர்கள்; பிரதமர் மோடி அறிவிப்பு

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
Prime Minister Modi's announcement on Indian astronauts in space

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகப் பிரதமர் மோடி இன்று (27-02-24) காலை கேரளா சென்றார். அதனையடுத்து, அவர் அங்குள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்திற்குச் சென்று ககன்யான் திட்டப்பணிகள் குறித்த பணிகளை ஆய்வு செய்தார். அவருடன், கேரளா ஆளுநர் ஆரிஃப் கான், முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் இருந்தனர். 

இதனையடுத்து, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளிக்குச் செல்லும் 4 வீரர்களைப் பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார். அதன்படி, குரூப் கேப்டன்கள் பிரசாந்த் பாலகிருஷ்ணன், அஜித் கிருஷ்ணன், அங்கத் பிரதாப் மற்றும் விங் கமாண்டர் சுபான்ஷுசுக்லா ஆகியோர் ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளி செல்லவுள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களுக்கு மிஷன் லோகா பேட்ஜ்களை பிரதமர் மோடி வழங்கினார். 

அதனைத் தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “தேர்ந்தெடுக்கப்பட்ட 4 விண்வெளி வீரர்களைச் சந்தித்து அவர்களை நாட்டுக்கு அறிமுகம் செய்து வைக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர்களுக்கு நாட்டு மக்கள் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைய இந்தியாவின் பெருமை நீங்கள் தான்” என்று கூறினார்.