Skip to main content

தனியார் பள்ளிகள் முழுக்கட்டணத்தை வசூலித்தால் கடும் நடவடிக்கை! -உயர்நீதி மன்றம் எச்சரிக்கை!

Published on 01/08/2020 | Edited on 01/08/2020

 

chennai high court

 

 

தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள், கல்லூரிகள்,  2020 – 2021  கல்வி ஆண்டிற்கான கல்விக் கட்டணத்தில் 40 சதவீதத்தை, வரும் ஆகஸ்ட் மாதம் 31- ம் தேதிக்குள் வசூலித்து கொள்ள அனுமதியளித்து, சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

கரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில், கல்விக் கட்டணங்களை வசூலிக்கக்கூடாது என்று,  தமிழக அரசு கடந்த ஏப்ரல் 20-ம் தேதி அரசாணை பிறப்பித்தது. அதேசமயம், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரியும், அதற்கு தடை விதிக்கக்கோரியும், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு மற்றும் அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் கூட்டமைப்புகள் சார்பில்,  சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த இடைக்கால உத்தரவில், நடப்பு கல்வி ஆண்டிற்கான கட்டணம் இன்னும் இறுதி செய்யப்படாததால், சென்ற ஆண்டு வசூலித்த கட்டணத்தின் அடிப்படையில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களும் 2020 - 2021 ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தில் 40 சதவீத தொகையை, ஆகஸ்ட் 31- க்குள் வசூலித்து கொள்ளலாம் எனவும், மீதமுள்ள 35 சதவீத தொகையை பள்ளிகள் திறந்து இரண்டு மாதங்களுக்குள் வசூலித்துக்கொள்ளவும் அனுமதி அளித்தது.

 

இந்நிலையில், உயர்நீதி மன்ற உத்தரவை மீறி, பள்ளிகள் முழுக் கட்டணத்தையும் மாணவர்களிடம் இருந்து  வசூலிப்பதாக, தமிழக அரசு சார்பாக அரசு வழக்கறிஞர் அன்னலட்சுமி, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் முறையிட்டார்.

 

இதைக் கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், எந்தெந்த பள்ளிகள் கட்டணம் வசூலிக்கிறது என்று ஆகஸ்ட் 17-ம் தேதி  அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், பள்ளிகள் முழுக் கட்டணத்தை வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

 

 

சார்ந்த செய்திகள்