சித்திரை பௌர்ணமியை முன்னிட்டு அண்ணாமலையாரைத் தரிசிக்கவும், கிரிவலம் வரவும் திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளார்கள். சித்திரை மாத பௌர்ணமியை முன்னிட்டு 3000 போலீஸார் சொச்சம் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அண்ணாமலையார் தரிசனம் மற்றும் கிரிவலம் வரும் பக்தர்களை ஒழுங்குபடுத்துகிறோம் என்கிற பெயரில் சில குளறுபடிகளை செய்துள்ளனர் காவல்துறை அதிகாரிகள்.
ராஜகோபுரம் வழியாக சாதாரண பக்தர்களும், அம்மணியம்மன் கோபுரம் வழியாக விவிஐபி பக்தர்களும் கோவிலுக்குள் சென்று வருவார்கள். விவிஐபி பக்தர்கள் செல்லும் பாதையில் காவல்துறை அதிகாரிகள் அவர்களது குடும்பத்தினர் உட்பட அரசு உயர் அதிகாரிகள், அவர்களது குடும்பத்தினர், அரசியல் பிரமுகர்கள் செல்வார்கள். இந்த அம்மணி அம்மன் கோபுரம் உள்ள வடக்கு மாடவீதி சாலையில் சாதாரண பக்தர்கள் செல்லாத வகையில் தடுக்கப்பட்டு விட்டது. இரட்டை பிள்ளையார் கோவில் சாலையில் பூதநாராயணன் கோவில் முன்பு தடுப்புகள் வைத்து யாருமே செல்லாத வண்ணம் முற்றிலும் தடை செய்யப்பட்டு காவல்துறையினர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர்
இதனால் அதிர்ச்சியான அந்த சாலையில் உள்ள வியாபாரிகள் மே 4 ஆம் தேதி இரவு சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கு வந்த டி.எஸ்.பி குணசேகரனிடம் வியாபாரிகள், இந்த சாலையில்தானே வழக்கமாக பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள், இதனை ஏன் மூடுனீர்கள் என கேள்வி எழுப்பியபோது, இந்த சாலை சிறியது பக்தர்களுக்கு பற்றாது, நெருக்கடியாக இருக்கும், அதனால் மூடிவிட்டோம் என்றார். இங்க கடை வச்சியிருக்கற நாங்க என்ன செய்யறது? ஆயிரக்கணக்கில் முதலீடு செய்து பொருட்களை வாங்கி வந்து வச்சுயிருக்கோம் எனச் சொன்னபோது, அதுக்கு என்ன செய்ய முடியும், தூக்கிக்கிட்டு போய் அங்க எங்காவுது போடுங்க என்றவர், இப்போ இங்கயிருந்து எழுந்து போகலன்னா போலீஸ்னா யார்னு காட்டிடுவேன் என மிரட்டி வியாபாரிகளை விரட்டியிருக்கிறார்.
பக்தர்களை, வியாபாரிகளை இப்படி தவிக்கவிட்டுள்ள போலீஸ் அதிகாரிகள், விஐபிகள் கோவிலுக்குள் சென்று தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளை பக்காவாக செய்துள்ளனர். லட்சக் கணக்கான பக்தர்கள் வரும்பாதையில் கார்களில் கோவில் வாசல் வரை வரவும், அவர்கள் கோவிலுக்குள் எந்த தடையும், தொந்தரவும் இல்லாமல் சென்று அண்ணாமலையாரை வணங்குவதற்கான ஏற்பாடுகள் செய்து தரிசனம் செய்ய வைத்து வருகின்றனர் காவல்துறை அதிகாரிகளும், கோவில் நிர்வாகமும். தரிசிக்க வருபவர்களில் 30 சதவிதம் தான் அரசியல்வாதிகள் மீதி 70 சதவிதம் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், நீதித்துறையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைப் பொதுமக்கள் யாரும் பார்த்துவிடக்கூடாது என இரும்பு தகரங்கள் வைத்து அந்த சாலைகள் மூடிவைத்துள்ளனர்.
கோவிலுக்குள் மட்டும் 400 போலீஸாரை பாதுகாப்புக்காக நிறுத்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். கோவிலுக்குள் அவ்வளவு போலீஸாரே தேவையில்லை, ஏன் இவ்வளவு போலீஸார் என்கிற கேள்வியை ஒவ்வொரு பொதுமக்களும் கேட்கின்றனர்.
படங்கள்– எம்.ஆர்.விவேகானந்தன்